
சண்டை போடுகிறவர்கள் உணர்வுகளை நுகர்ந்தால் நம் உடலுக்குள்ளும் சண்டை நடக்கும்…! எப்படி…?
இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள். அவர்களுடைய செயலைப் பார்த்தவுடனே நமக்கும் கோபம் வருகிறது.
அப்படிக் கோபம் வரும் பொழுதெல்லாம்…
1.ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெறவேண்டும் என்று
2.புருவ மத்தியில் நிறுத்திடல் வேண்டும்.
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.
பின் சண்டை போடுபவர்கள் அவர்கள் அறியாது செயல்படும் நிலையிலிருந்து விடுபட்டுப் பொருள் கண்டுணர்ந்து செயல்பட்டுச் “சகோதர உணர்வுடன் ஒன்றுபட்டு வாழும் அந்த உணர்வுகள்” அவர்கள் பெறவேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.
இப்படி எண்ணினோம் என்றால்…
1.அவர்கள் சண்டையிட்ட உணர்வுகள் நமக்குள் அணுவாக உருவாகாது.
2.நம்முடைய உணர்வுகள் இதை மாற்றி நம்முடைய நல் எண்ணத்தின் தன்மையிலேயே கருவாக்குகின்றது.
3.அவர்களைப் போன்ற குரோத உணர்வுகளோ சண்டையிடும் உணர்வுகளோ நமக்குள் வராது.
ஆனால் ஆத்ம சுத்தி செய்யாது… அவர்கள் சண்டையிடும் உணர்வுகளை நுகர்ந்து அணுவாகி விட்டால் திடீரென்று அந்த உணர்ச்சிகள் நமக்குள் உந்தி நம்மை அறியாமலே கோபப்படச் செய்யும். “யாராக இருந்தாலும்… அவர்களிடம் சண்டைக்குப் போகச் சொல்லும்…!”
ஒருவன் தவறு செய்கிறான்… தவறு செய்கிறான்… என்று சொல்லிக் கொண்டே இருந்தால் அந்த (அவன்) உணர்வுகள் என்ன செய்யும்…? அந்தத் தவறு செய்த உணர்வுகள் எல்லாம் நம் உடலிலே விளைந்து நாமும் தவறு செய்பவராகப் போய்விடுவோம்.
ஒருவன் நம்மிடம் கோபிக்கின்றான்… கோபிக்கின்றான்… என்று சொல்லிக் கொண்டேயிருந்தால் அதே உணர்வுகள் நாமும் கோபிக்கும் தன்மை வந்துவிடும்.
அந்த அணுக்கள் பெருகப் பெருக அதற்கு அந்தச் சாப்பாடு தேவை. தன் உணர்ச்சிகளை உந்தி அதனுடைய உணவை எடுத்துக் கொண்டு தான் இருக்கும்.
நமக்குள் இப்படிப் பகைமை உணர்வுகளைச் சேர்க்கச்… சேர்க்க…
1.எப்படி நாம் வெளியிலே சண்டை போடுகிறோமோ இதைப் போல்
2.நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கும்
2.நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த (மேலே சொன்ன) கோபம் குரோதம் வேதனை போன்ற அணுக்க்ளுக்கும் போர் நடக்கும்.
இங்கே உடலுக்குள் பளீர்…ர்ர்ர்…! என்று மின்னும்.
கை காலில் மின்னும். இடுப்பிலே வலிக்கும். எந்தெந்த உறுப்புகளில் இந்த உணர்வுகள் போர் முறைக்கு வருகின்றதோ அங்கெல்லாம் பளீர்…ர்ர்… பளீர்…ர்ர்…! என்று மின்னும்.
ஆகவே நம் உடலில் வேதனையும் வலியும் எல்லாமே தோன்றும்…!
இதைப் போன்ற நிலைகள் நமக்குள் உருவாக்காதபடி நாம் எப்பொழுதுமே பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்ற நிலையில் ஒவ்வொரு நொடியிலேயும் தீமைகளைக் காண நேர்ந்தால் உடனே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.
1.ஓ…ம் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்துடன் தொடர் கொள்ளுங்கள்.
2.புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தை ஒரு நிமிடம் நிலை நிறுத்தி ஏங்குங்கள்.
பின் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று உள்ளே செலுத்துங்கள்.
உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தப் பேரருள் உணர்வை உணவாகக் கொடுத்து… தீமை செய்யும் அணுக்களை அடக்கி…
1.இணைந்து வாழும்…
2.இணைந்து வாழச் செய்யும் சக்தியாக… மாற்றிக் கொள்ளுங்கள்.
3.மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும் அணுக்களாக உருப்பெறச் செய்யுங்கள்.
மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன் (ஞானகுரு)… இதை மறவாது செயல்படுத்துங்கள்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.