
புற வாழ்க்கையில் “போதும்…!” என்ற உணர்வை எடுத்தால் நம்மைத் தேடி வரும் மகிழ்ச்சியைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்…!
இந்த மனித வாழ்க்கையில் நாம் “பணமே பிரதானம்…!” பணம் இல்லை என்றால் ஒன்றுமே செய்ய முடியாது…! என்று இருந்தாலும் கோடிக்கணக்கில் பணம் இருந்தாலும் மனதில் நிம்மதி இருகிறதா என்றால் இல்லை.
பணமிருந்தாலும் நம் உடலுக்குள் நோயைத்தான் அனுபவிக்க முடிகின்றது. மனக் கவலையையும் சஞ்சலத்தையும் அனுபவிக்க முடிகின்றது. பொருள் நமக்கு ஒன்றும் உதவுவதில்லை.
அதே சமயத்தில் நீங்கள் பொருளைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. யாம் உபதேசிக்கும் இந்த முறைப்படி தியானத்தை எடுத்துக் கொண்டால்
1.உங்கள் மன வலு கிடைக்கும் பொழுது
2.தொழிலில் உங்களை அறியாமலே உங்களைத் தேடிப் பொருள்கள் வரும்.
3.வியாபாரமும் நன்றாக இருக்கும்.
4.உங்களுக்குள் “போதும்…! என்ற எண்ணமும் தோன்றும்.
இன்று ஐநூறு ரூபாய் வந்ததென்றால் மேற்கொண்டு ஐயாயிரம் வந்தால் வாங்கி வைப்பதற்குக் கூட முடியவில்லை… “போதும்…போதும்…!” என்று சொல்லும் நிலை தான் வரும். “போதும்…!” என்ற எண்ணம் வரும் பொழுது தன்னாலே இது நடக்கும்.
ஆனால் நீங்கள் ஒரு பொருளை எப்படியும் கவ்விப் பிடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்தால்
1.அது ஓடிக் கொண்டயிருக்கும்.
2.நம் கையில் சிக்குவது மிகவும் கடினம்.
3.பொருளைப் பற்றிச் சிந்திக்காது இரண்டையும் காக்கும் சக்தி இந்தத் தியானத்தில் உண்டு.
நல்ல ஒழுக்கத்தைத்தான் எல்லோரும் எண்ணுகின்றோம். ஆனாலும் அந்த நல்ல ஒழுக்கத்தைக் காப்பதற்கு இந்தத் தியானத்தின் மூலம் சக்தியை அவசியம் நாம் கூட்டிக் கொள்ள வேண்டும். அதைக் கூட்டவில்லை என்றால் நம் நல்ல குணங்களையே நாம் காக்கும் நிலை இழந்துவிடுகின்றோம்.
நல்லதை எண்ணுவோம்…! ஆனால் பிறர் ஒரு துன்புறுத்தும் ஒரு வேதனையான சொல்லை நம்மிடம் சொல்லிவிட்டால் “இப்படிச் சொல்லிவிட்டார்களே…!” என்று பாலுக்குள் விஷம் பட்டால் எப்படி அதைக் குடித்தவுடன் மயங்குகின்றோமோ அந்த மாதிரி மயங்கிவிடுவோம்.
அந்த வேதனையால் நம் நல்ல குணங்கள் அனைத்தும் அடங்கி நம்மை அறியாமலே ஏசவும் பேசவும் துடிக்கவும் செய்து அதே உணர்வுகளை வளர்த்துக் கொண்டு அதன் வழியிலே நம் உடலில் வியாதிகளை வரவழைத்து நாம் நிம்மதி இழந்துவிடுவோம்.
நம்மிடம் பணம் பொருள் ஏராளம் இருக்கும். ஆனால் நிம்மதி இழ்ந்த நிலையில் இதைப் போன்ற எண்ணங்களை எண்ணும் பொழுது சுவைகள் மாறிவிடுகின்றது,
மாறிய சுவை கொண்டு சமைத்த ஆகாரத்தைக் கூடச் சுவைத்துச் சாப்பிட முடிவதில்லை. பணம் நிறைய இருக்கின்றது என்று பணத்தைப் பார்த்தாலும் நமக்கு ஒன்றும் மகிழ்ச்சி கிடைப்பதில்லை,
கௌரவமும் மற்ற நிலையும் இந்த உடலில் உயிரான ஈசன் இருக்கும் வரையில் தான் நாம் பார்க்கின்றோம்.
1.இந்த ஈசன் உடலை விட்டுச் சென்றால்
2.நீசனான இந்த உடம்புக்கு எந்த மரியாதையும் இல்லை…!
3.ஆனாலும் இந்த உடல் என்ற நீசத்தை வைத்துத்தான் ஈசனை நாம் வேண்ட முடிகின்றது.
ஆகவே இந்த மனித வாழ்க்கையில் அருள் ஒன்றையே பிரதானமாக வைத்து வாழும் பழக்கம் வந்தால் நாம் மகரிஷிகளின் அருள் ஒளி வட்டத்தில் என்றுமே இருப்போம்.
மகரிஷிகள் அருள் ஒளி நமக்குப் பாதுகாப்புக் கவசமாக அமைகின்றது. மன அமைதியும் சாந்தமும் விவேகமும் நமக்குள் வளரும். தெய்வீக குணங்கள் வளரும். தெய்வீகத் தன்மை பெறுவோம்.
நமக்குள் அழியாச் சொத்து அந்தத் தெய்வ குணங்கள் தான்…! ஆகவே இந்த மனித உடலிலிருந்து மெய் ஒளியைத்தான் நாம் சிருஷ்டிக்க வேண்டும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.