தீமைகள் நமக்குள் புகாமல் தடுக்கும் வழி

தீமைகள் நமக்குள் புகாமல் தடுக்கும் வழி

 

எவ்வளவு செல்வம் தேடினாலும் எவ்வளவு செல்வம் சேமித்து வைத்தாலும்
1.கடுமையான நோய்கள் வந்து விட்டால் வாழ்க்கையில் வெறுப்பு தான் வருகின்றது.
2.வெறுப்பான உணர்வுகள் வரப்படும் பொழுது உடலை வெறுக்கின்றோம்… வேதனையை வளர்க்கின்றோம்.
3.இதனால் நிம்மதியற்ற நிலைகளில் தான் நாம் வாழ வேண்டி வரும்.

ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியில் அழுக்குப்பட்டு விட்டால் கண்ணாடியின் அழுக்கைத் துடைத்தால்தான் நம்முடைய உருவத்தைக் காண முடியும்.

இது போன்று பிறருடைய தீமையின் உணர்வுகள் நமது ஆன்மாவில் பெருகி விட்டால் நம்மை எது இயக்குகிறது…? என்று அறிய முடியாதபடி நாம் பார்த்த உணர்வுகள் நமது உடலை இயக்கி நம்மை நாம் அறிய முடியாத நிலைகளாக ஆகி விடுகின்றது.

ஆகவே நம்மை நாம் எப்படி அறிய வேண்டும்…?

கண்ணாடியில் அழுக்குப் படிந்திருந்தால் நாம் எப்படிப் பார்த்தாலும் நமது முகம் தெரியாது. இது போன்றுதான் நமது ஆன்மாவில் அழுக்குப் படிந்து விட்டால் சிந்திக்கும் தன்மை இழக்கும் நிலை வருகின்றது.

1.கண்ணாடியில் படிந்த அழுக்கை நீக்கினால் நமது உருவம் தெளிவாகத் தெரிவது போன்று
2.நமது ஆன்மாவில் கலந்த அழுக்கை நீக்கித் தூய்மைப்படுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா. துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நம் உடலுக்குள் இந்த உணர்வின் தன்மையைச் செலுத்த வேண்டும்.

அவ்வாறு நாம் செலுத்தப்படும் போது வேதனைப்பட்ட உணர்வின் தன்மை நமது ஆன்மாவிலிருந்து நீங்கி நமது ஆன்மா தூய்மை பெறுகின்றது.

ஆகவே நமக்குள் தெளிவான நிலைகள் வரும். சிந்திக்கும் தன்மை நமக்குள் வருகின்றது. தீமை அகற்றும் வல்லமை பெறுகின்றது. தீமைகள் புகாது தடுக்கவும் முடிகின்றது.

நீங்களும் ஒரு டாக்டர் தான். உங்களுடைய உயிர் தான் டாக்டராக இருக்கின்றது.
1.உயிரான டாக்டரிடம் உங்களுடைய உணர்வுகளைச் சொன்னீர்களென்றால்
2.அதற்குத் தகுந்த மாதிரி உயிரான டாக்டர் உங்களை இயக்கி உங்களை நல் வழிப்படுத்துவார்.

ஆனால் நாம் வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் நம்மிடம் வரும் பொழுது உயிரான டாக்டரை மதிக்காதபடி இருந்து விடுகின்றோம்.

உயிர் நமக்கு நல்லது கெட்டது போன்றவைகளைக் காண்பிக்கின்றது. கெட்டது என்று தெரிந்து அதை உள்ளே விடாதபடித் தடுக்கவில்லை என்றால் என்னவாகும்…?

டாக்டர்கள் “ஒன்றைச் சாப்பிடாதீர்கள்” என்று சொல்லியிருந்தும் அதைச் சாப்பிட்டோம் என்றால் உடல் நோயாகும்.

இது போன்றுதான் நாம் ஒருவர் வேதனைப்படுவதைப் பார்த்து நல்ல மனிதர் இப்படி ஆகிவிட்டாரே…! என்று வேதனைப்படுகின்றோம். அப்பொழுது என்ன செய்கின்றோம்…?
1.வேதனையின் உணர்வுகள் நம்முள் நுழைவதற்கு ஏதுவாகத் திறந்து வைத்து விடுகின்றோம்.
2.இதனால் வேதனை உணர்வுகள் நம்முள் புகுந்து விடுகின்றது.
3.ஆகவே நாம் எப்பொழுதும் தீய உணர்வுகள் நம்முள் நுழையாத வண்ணம் கதவுகளை மூடி வைக்க வேண்டும்.

உதாரணமாக… காற்று பலமாக உள்ள பொழுது என்னவாகும்…? தூசி, நாற்றம் அனைத்தையும் அடித்துக் கொண்டு வரும். அப்படி வரும் பொழுது அவை அனைத்தும் நம்முள் நுழைந்துவிடும். ஆகவே நாம் கதவை மூடி வைத்திருக்கப் பழக வேண்டும்.

நாம் ஒரு உணர்வை மூக்கு வழி நுகரும் பொழுது அது நம் உயிரில் மோதுகின்றது. நமது கண் ஒன்றைப் பார்க்கும் பொழுது கருவிழி ருக்மணி என்ன செய்கின்றது? கவர்ந்த உணர்வை நமது உடலில் உள்ள விலா எலும்புகளில் உள்ள ஊனில் பதிவாக்கி விடுகின்றது. வேதனைப்பட்ட உணர்வை நுகர்ந்து நமது எலும்புக்குள் “ஊழ்வினை” என்ற வித்தாகப் பதிவாக்குகின்றது.
1.இவைகளெல்லாம் சுவாசித்தல் மூலம் நம்முள் செல்வதில்லை.
2.சுவாசத்தில் இல்லாமலே கருவிழி ஒன்றைப் பார்த்துப் படமாக்கி நம்முள் பதிவாக்கி விடுகின்றது.

எக்ஸ்ரே படம் எடுத்தால் உடனே படமாகக் காட்டுவதைப் போன்று கருவிழி பார்த்தவுடனே நமது உடலில் உள்ள விலா எலும்புகள் கடிகாரம் மாதிரி “பட…படவெனத் துடித்து” இழுக்கும். இழுத்து உடனே தன்னுள் பதிவாக்கிக் கொள்கின்றது.

இவ்வாறு பதிவான பின்னே கண்ணோடு சேர்ந்த காந்தப்புலன் அதனின்று வெளிப்படும் வேதனை உணர்வைக் கவர்ந்து அவ்வுணர்வை இயக்கக்கூடிய அணுக்களாக மாற்றுகின்றது.

வேதனையின் உணர்வுகள் நமது உடலுக்குள் வலுவானபின் அதன் அருகில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களைப் பலவீனப்படுத்தும். மேலும் அந்த நல்ல அணுக்களை உணவாக எடுத்துச் சாப்பிடத் தொடங்கும். பின் நாம் நலிவடைய வேண்டியது தான்.

எனவே இதை போன்ற நிலைகளைத் தடுக்க நாம் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளை உயிர் வழி கவர்ந்து
2.நம் உடலை உருவாக்கிய நல்ல அணுக்களுக்கு உணவாகக் கொடுக்க வேண்டும்.
3.இவ்வாறு நாம் செய்துவர நாம் அனைத்துத் தீமைகளிலிருந்தும் விடுபட முடியும்
4.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ முடியும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply