ஒரு அசுரன் இறந்தால் பல அசுரர்கள் எழுகின்றனர் – விளக்கம்

ஒரு அசுரன் இறந்தால் பல அசுரர்கள் எழுகின்றனர் – விளக்கம்

 

தயவு செய்து பிறருக்கு ஏற்படும் துன்பங்களையோ வேதனைகளையோ பார்த்துச் சந்தோஷப்படாதீர்கள்.
1.பிறரின் துன்பத்தைப் பார்த்து “அவனுக்கு அப்படித்தான் வேண்டும்” என்று சந்தோஷப்படுவீர்களானால்
2.அதனின் உணர்வுகள் உங்களில் விளைந்து நோயாக உருவாகிவிடும்.

விஞ்ஞானிகள் பல ஆராய்ச்சிகளைச் செய்து மனித உணர்வின் செயல்களை அறிகின்றனர். விஞ்ஞானி ஆணைப் பெண்ணாக மாற்றுகின்றார் பெண்ணை ஆணாக மாற்றுகின்றார்.

அதே சமயத்தில் மனித உடலில் வருகின்ற நோய்களைப் போக்குவதற்குப் பாம்பு தேள் மாடு போன்றவைகளில் பல இரசாயனங்களைக் கலந்து அதில் மருந்தினைத் தயாரிக்கின்றனர்.

நமது நுரையீரல் கெட்டுப் போய்விட்டது… இருதயம் கெட்டுப் போய்விட்டது என்றால் இப்பொழுது அஞ்ச வேண்டியதில்லை. பல நவீனக் கருவிகளின் துணை கொண்டு செயற்கை உறுப்புகளை நமது உடலில் பொருத்திப் பழுதுபட்ட உடல் பாகங்கள் மேலும் சிறிது நாளைக்கு வேலை செய்யும்படியாக அமைத்து விடுகின்றார்கள்.

இத்தகைய விஞ்ஞான நிலைகள் இருந்தாலும் இந்த உடலில் எத்தனை நாள் வாழப் போகின்றோம்…? மேலும் சிறிது காலம் வாழுவதற்கே இதைச் செய்கின்றனர்.

இப்படி மாற்று உறுப்புகளை பொருத்திக் கொண்டவர்கள் மற்றவர்கள் மாதிரிச் சந்தோஷமாக இருக்க முடியாது.

ஏனென்றால் மாற்று உறுப்புகளைப் பொருத்திக் கொண்டபின் முன் போன்று நமது பணிகளைச் செய்ய முடியாது. டாக்டர்கள் சில விதிகளைக் கொடுத்து இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று கூறிவிடுவார்கள். இப்படித்தான் நமக்கு மருந்துகளையும் மற்ற நிலைகளையும் கொடுத்துச் சமப்படுத்துகின்றனர்.

இப்படிச் சமப்படுத்தி வாழும் நாம் மற்றொருவர் கடுமையான காய்ச்சலில் இருக்கும் பொழுது அவரை உற்றுப் பார்த்து அவருடைய வேதனையைக் கேட்டறிந்தால் உடனடியாக நமக்குள் பல நிலைகள் வரும்.
1.ஆகவே நாம் எல்லாவற்றிற்கும் அஞ்சி வாழ்ந்து
2.நம்முடைய நிலைகளில் சோர்வடைந்து நிம்மதி என்பதை இழந்திருப்போம்.

சர்க்கரைச் சத்து வியாதிக்கு இனிப்பைச் சாப்பிடக்கூடாது மற்றும் அதைச் சாப்பிடக் கூடாது இதைச் சாப்பிடக் கூடாது என்று டாக்டர்கள் அறிவுறுத்தியதால் நாம் விரும்பியதைச் சாப்பிட முடியாமல் நமக்குள் வேதனை வளர்ந்து கொண்டே வரும்.

ஆகவே எவ்வளவு நிலையானாலும்
1.மனிதர் துரித நிலையில் மடியும் தன்மைதான் வருகின்றதே தவிர மனிதர் நீடித்த நாள் வாழும் சக்தி உள்ளதா…?
2.இந்த மனித உடலில் நாம் முழுமையாக இருக்க முடிகின்றதா…? இல்லை.

குறுகிய காலம் வாழ்வதற்காகப் பல உணர்வுகளை நாம் சேர்த்துக் கொண்டேதான் வாழுகின்றோம்.

இதே போன்று ஆஸ்த்மா உள்ளவர்கள் பழங்களைச் சாப்பிட்டால், உடனே அவர்களுக்கு ஆஸ்துமா தொல்லை அதிகமாகிவிடும். குளிர்ந்த பானத்தைச் சாப்பிட்டாலும் இதே போன்று வந்துவிடும்.

ஒரு ஊர் விட்டு மற்றொரு ஊருக்குச் சென்றால் அந்த ஊரின் தண்ணீரைச் சாப்பிட்டால் எதிர் நிலையான கிருமிகள் உண்டாகி ஆஸ்துமா தொல்லை அதிகமாகி விடுகின்றது. ஆகவே மனிதருக்குள் இத்தகைய வினைகள் வந்து கொண்டே இருக்கின்றது.

குடும்பத்தில் ஒருவருக்கு ஆஸ்துமா நோய் இருக்கிறதென்றால் அந்தக் குடும்பத்தில் மற்றவர்கள் பேசும் பேச்சின் உணர்வுகளை அவர்களது குடும்பத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண் உற்றுக் கேட்டு நுகர்கிறதென்றால் அந்தக் கர்ப்பிணிப் பெண்ணின் கருவில் வளரும் சிசுவினிடத்தில் ஆஸ்துமாவை உருவாக்கும் அணுக் கிருமிகள் உருவாகி விடுகின்றன.

குழந்தை தவறு செய்ததா…? இல்லை.

இதே போன்று ஒரு குடும்பத்தில் சர்க்கரைச் சத்து உள்ளவரை ஒரு கர்ப்பிணிப் பெண் அதிகமாகக் கவனித்து அவருடைய சொல்லைக் கேட்டுச் செயல்பட்டுக் கொண்டிருந்தால் அந்தக் கர்ப்பிணிப் பெண்ணின் கருவிலிருக்கும் குழந்தைக்கும் சர்க்கரைச் சத்து வந்துவிடும்.

இதனைப் பரம்பரை நோய் என்று சொல்லுகின்றார்கள்.

இன்று உலகில் எடுத்துக் கொண்டால் நூற்றுக்கு முப்பது சதவீதம் பேர் ஆஸ்துமாவில் வாடுகின்றனர். நூற்றுக்கு முப்பது சதவீதம் பேர் சர்க்கரை வியாதியால் வாடுகின்றனர். நூற்றுக்கு முப்பது சதவீதம் பேர் இரத்தக் கொதிப்பால் வாடுகின்றனர்.

இப்படி… குடும்பத்தில் ஒருவருக்கு நோய் இருந்தும் உணர்வின் வழி மற்றவருக்கும் பரவுகின்றது.

இதைத்தான் இராமாயணத்தில் ஒரு அசுரன் இறந்தால் பல அசுரர்கள் எழுகின்றனர் என்று கூறுகின்றனர். இதனை மெய்ப்பிக்கும் நிலையாக நமது குருநாதர்
1.ஒரு மனித உடலுக்குள் வேதனை என்ற நிலை உருவாகி
2.அந்த அசுர உணர்வுகளால் அந்த மனிதர் மடிந்தார் என்றால்
3.அந்த உடலில் விளைந்த உணர்வின் அலைகளை நுகர்ந்தவர்கள் எவர் எவரோ
4.அந்த உடல்களைக் கொல்கின்றது…! என்பதை எமக்கு உணர்த்தினார்.

மனித உடலில் எடுத்துக் கொண்ட வீரிய உணர்வுகளுக்கொப்ப தேள் பாம்பு கொசு போன்ற நிலைகள் மனித உடலில் இருந்து பிறக்கும் தன்மை வருகின்றது.

மனிதரை முழுமுதல் கடவுள் என்று விநாயகரை வைத்து ஞானிகளால் காண்பிக்கப்படுகின்றது. மனித உடலில் இருந்து வெளிப்படக் கூடிய உணர்வுகள் எதுவோ அதற்குத்தக்க ஒவ்வொரு உடலிலும் சேர்க்கப்படும் பொழுது இந்த நிலை ஏற்படும்.

சலிப்பும் சஞ்சலமும் ஒருவரிடம் அதிகமானால் அவர்களுடைய தலையில் பேன்கள் உருவாகும். பேன்கள் தலையில் அதிகமாக உள்ளவர்கள் பத்து நாளைக்குத் தொடர்ந்து சந்தோஷமாக இருந்து பாருங்கள். உங்கள் தலையிலுள்ள பேன்கள் தன்னால் மறைந்து போகும்.

இது போன்று சலிப்பு சஞ்சலம் வேதனை உணர்வுகளால் உருவாகும் தீமைகளில் இருந்து மீள்வது எப்படி…?

மனிதராகப் பிறந்து நஞ்சை வென்றவர் அகஸ்தியர்
1.அகஸ்தியர் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானார்.
2.நமது பிரபஞ்சத்திலிருந்து மட்டுமல்ல… அகண்ட அண்டத்திலிருந்து எங்கிருந்து நஞ்சு வந்தாலும்
3.அதை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது துருவ நட்சத்திரம்.
4.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நுகர்ந்து நமது உடலில் உருவாக்கி விட்டால்
5.இந்த உடலில் தீமையை நீக்கிடும் சக்தியினை நாம் பெறுகின்றோம்.

மனித உணர்வுகளின் இயக்க உண்மைகளை அறிந்து மெய் ஞானிகள் காண்பித்த அருள் வழியில் செயல்பட்டுத் தம்மிடத்தில் அறியாது சேரும் தீமைகளை அகற்றி இருளான உணர்வுகளை நீக்கி… மெய்பொருள் காணும் நிலையாக வாழ்ந்து வரும் அன்பர்கள் அனைவரும் இருளினை வென்று பேரருள் பெற்று பேரொளி பெற்று… உங்கள் பேச்சால் மூச்சால் பார்வையால் மற்றவர்களின் தீமைகளை நோய்களை நீக்கும் அருளாற்றல் பெற்று… இந்த வாழ்க்கையில் பெருவீடு பெருநிலை பெறும் நிலையாக பேரின்பப் பெரு வாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட… எமது அருளாசிகள்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply