
“வேதனை அதிகமாக இருக்கும் நேரத்தில் தான்” பேராற்றல் மிக்க சக்தியை நாம் எடுக்க முடியும்
அன்று மெய் ஞானியான அகஸ்தியன் மனித உடல் அது எப்படி உருப்பெற்றது…? என்பதனைத் தாய் கருவிலே பெற்ற நஞ்சினை வென்றிடும் ஆற்றல் கொண்டு ஒவ்வொன்றாகத் தனக்குள் வளர்ச்சியாகித் “தன்னை அறிந்தான்…” தனக்குள் விளைந்த உணர்வின் வலுக் கொண்டு “அகண்ட பேரண்டத்தையும் அறிந்தான்…”
அவனுக்குள் விளைய வைத்த உணர்வுகள் நம் பூமியில் பரவி உள்ளது. அதனை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது இயற்கையின் உண்மையின் வளர்ச்சியை உங்களுக்குள் வலுவாக்கி அதன் உணர்வால் உருவாக்கும் ஆற்றலை நீங்கள் பெறுகின்றீர்கள்.
1.நமது குருநாதர் அவர் உருவாக்கியது போல அவர் நமக்குள் உருவாக்கிட
2.அவரைப் போன்றே நினைவினை நான் செலுத்தப்படும் பொழுது
3.அந்த உணர்வின் தன்மை கருவாக்கி உருவாக்கும் அந்த வலிமை பெறுகின்றது.
4.அதே வலிமையின் உணர்வுகளை உங்களுக்குள் இந்த உபதேச வாயிலாகச் சொல்லப்படும் பொழுது
4.நீங்கள் கூர்மையாகக் கவனித்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகி இந்த நினைவினை உங்களுக்குள் வளர்க்க இது உதவும்.
5.ஆகவே… நம்முடைய நினைவாற்றல் குருநாதர் காட்டிய வழியில் அந்தத் துருவன் வழி செல்ல வேண்டும்.
நம்முடைய எல்லை எது…?
துருவன் பெற்ற அந்த எல்லையை அடைய வேண்டும் என்ற நினைவைக் கூட்டினால் இதனின் வரிசைத் தொடரில் அது வளர்ச்சியாகி பிறவி இல்லாத நிலை அடைந்து அந்த எல்லையை நாம் அடைகின்றோம்.
இல்லை…! என்னை இப்படிப் பேசினான்… அப்படிச் செய்தான்…! என்ற இந்த உணர்வினை வளர்த்துக் கொண்டால் இதனின் உணர்வுகள் வளர்ச்சியாகி… இந்த வேதனை நம்மை மீண்டும் கீழான நிலைகளுக்கு அழைத்துச் சென்றுவிடும்.
இதனின் வளர்ச்சி அதிகமாகி விட்டால் இப்போது உபதேசித்த இந்த உணர்வுகளை அது மேலே மூடிவிடும்.
ஆக… அப்படி ஆகாதபடி ஊழ் வினையாக இந்த உபதேச வாயிலாக அதை அமுக்கச் செய்து… இந்த உணர்வினை அணுவாக்கப்படும் பொழுது உங்களுடைய நினைவின் ஆற்றல் அந்த மெய் ஞானி சென்ற பாதையில் செல்லும்.
இந்தக் காற்று மண்டலத்தில் மனிதனின் இச்சை கொண்ட உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது
1.துருவ நட்சத்திரத்தினை நினைவுக்குக் கொண்டு வந்தால்
2.உங்கள் உடலுக்குள் தீமை இயக்காது அதை இது மறைத்துவிடும்.
குப்பைக்குள் ஒரு மாணிக்கம் கிடந்தால்… மாணிக்கம் இருக்கிறது என்று கண்களுக்குத் தெரியுமா…? அந்தக் குப்பையை நீக்கி விலக்கிப் பார்த்தால் தான் அதற்குள் இருக்கும் ஒளிகளை நாம் காண முடியும்.
இதே போல இப்பொழுது உபதேச வாயிலாகப் பதிவு செய்யும் அருள் ஒளியின் உணர்வுகளை…
1.குப்பையைப் போன்று வாழ்க்கையில் அதனைக் கொண்டு மூடி மறைத்து விட்டால்
2.அந்த ஒளியின் தன்மை மின்னும் நிலையோ அதன் உணர்வின் தன்மை பளிச்சிடும் நிலையில்
3.அதன் அருகில் இருக்கக்கூடிய பொருளைக் காணும் நிலையோ தடுக்கப்படுகின்றது காண முடியாது.
ஆகவே அதைக் காணும் ஆற்றல் கொண்ட ஞானிகள் உணர்வினை இப்பொழுது பதிவாக்கி… அகண்ட பேரண்டத்தின் நிலைகளையும் துருவன் கண்ட நிலைகளையும் அவனில் அறிந்துணர்ந்ததையும் பெற்று… இனி எந்த இருளிலும் சிக்காது ஒளியின் தன்மையாக மாற்றிய உணர்வுகள் உங்களில் விளைய வேண்டும் என்பதற்குத் தான் உபதேசிக்கின்றேன்.
குருநாதர் எமக்குள் அதனை உருவாக்கினார்… அதை வளர்த்துக் கொண்டே இருக்கிறேன்.
1.அதையெல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்று ஏங்கிக் கொண்டே இருக்கின்றேன்.
2.நான் பெற வேண்டும் என்று அல்ல நீங்கள் பெற வேண்டும் என்று…!
“அந்த உணர்வின் ஒளியாக நீங்கள் பெற வேண்டும்” என்று ஏங்கப்படும் பொழுது
1.உங்களிடம் இருக்கக்கூடிய தீமைகளை நான் எண்ணுவதில்லை.
2.உங்களை அறியாது இயக்கும் கஷ்டங்களை நான் எண்ணுவதில்லை.
3.உங்களை அறியாத வந்த நோய்களை நான் எண்ணுவதில்லை.
யாம் உபதேசித்த வழியில் நீங்கள் அந்த அருள் ஞானத்தைப் பெற்றால் அந்தத் தீமைகள் அனைத்தும் அகன்று ஓடிவிடும்.
1.உங்களுக்குள் இருக்கும் கஷ்டத்தையும் துன்பத்தையும் நான் அறிய முற்பட்டு அதை அறிந்து கொண்டிருந்தால்
2.இந்த உணர்வின் தன்மை எனக்குள் இது தான் அதிகமாக வளரும்.
ஆகவே நாம் எண்ண வேண்டியது என்ன…? “தனக்குள் நோய் வந்தாலும்” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதை வளர்த்தல் வேண்டும்.
அதே சமயத்தில்
1.எது எவ்வளவு வேதனையாகின்றதோ அந்த நேரத்திலே
2.அருள் ஒளி எனக்குள் பெற வேண்டும்
3.இருளாக்கும் தீய வினைகள் நீங்க வேண்டும்
4.மெய்ப்பொருள் காணும் உணர்வுகள் தனக்குள் வளர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.