எமது உபதேசங்களைப் படித்து… அதனின் நினைவாற்றலைக் கூட்டிக் கொண்டு தியானிக்க வேண்டும்

எமது உபதேசங்களைப் படித்து… அதனின் நினைவாற்றலைக் கூட்டிக் கொண்டு தியானிக்க வேண்டும்

 

தாய் கருவிலே வளர்ந்த அந்த உணர்வின் ஆற்றல் தான் நஞ்சின் தன்மையை அடக்கும் சக்தியாக சிறுகச் சிறுக வளர்ச்சி அடைந்து…
1.அகண்ட பேரண்டத்தில் வரும் நஞ்சின் இயக்கத் தொடரைக் காணும் திறன் பெற்றான் துருவன் (அகஸ்தியன்).
2.அவனில் விளைந்த உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
3.ஒவ்வொரு நொடியிலும் உங்களைச் சாடும் தீமையான உணர்வுகளை அது மாற்றிக் கொண்டே இருக்கும்.

இப்பொழுது இதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். அடுத்து நீங்கள் வேறு பக்கம் செல்லும் பொழுது என்ன நடக்கிறது…?

யாரும் உங்களைத் திட்டவே வேண்டாம். சும்மா இருக்கும் போது ஒருவன் மற்றவனைக் கடுமையாகச் சாடிப் பேசுகின்றான். அதை நாம் கேட்க நேர்கின்றது அந்த ஒலிகள் பட்டு அதைச் சுவாசித்த பின் நம்மை அறியாமலே அதே உணர்வுகள் இயக்கி விடுகின்றது… அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

இது ஒரு பக்கம்.

இன்னொருவன் கடுமையான ஆயுதத்தைக் கொண்டு மற்றவனைத் தாக்குகின்றான். அடிபட்டவன் அலறி ஓடுகின்றான். அந்த உணர்வை நாம் நுகர்ந்தால் நமக்குப் பதட்டமாகின்றது. நம்மை அறியாமலே நடுக்கமும் பயமும் வருகின்றது.

அந்த உணர்வு தான் நம்மை இயக்குகின்றது. ஆனால் நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் உயிர் ஓ… என்று ஜீவணுவாக மாற்றித் தன்னுடன் அரவணைத்துக் கொள்கிறது.

பின் அவனில் விளைந்த உணர்வின் தன்மை நமக்குள் ஊழ்வினையாகப் பதிவாக்கப்படும் பொழுது வினைக்கு நாயகனாக… நினைவு வரும் பொழுதெல்லாம் இந்த உணர்வுகள் தூண்டிக் கொண்டே இருக்கின்றது.

நினைவு வரும் போது இயக்கினாலும் நினைவு இல்லாத பொழுது அதனுடைய வலிமை என்ன செய்யும்…?
1.புலனடங்கிச் சாந்தமாக… வேலை இல்லாது அமைதியாக ஒரு இடத்திலே உட்கார்ந்து இருந்தோம் என்றால்
2.இந்த உணர்வுகள் தூண்டப்பட்டு அது வலிமை பெற்றுவிடும்.
3.அடுத்து எந்த வேலைக்கும் போக விடாது…! பிரமை பிடித்த மாதிரி ஆகிவிடும்
4.நுகர்ந்த உணர்வு அதனுடைய வளர்ச்சி அதிகமாகும் பொழுது இப்படி இயக்கத் தொடங்குகிறது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

சில குடும்பங்களில் வளர்ச்சி பெறும் குழந்தைகளின் உள்ளங்களில் இது போன்ற உணர்வுகளைக் கண்டு விட்டால் அது இயக்கிவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நீங்கள் விடுபட வேண்டும்.

நீங்கள் நுகர்ந்த அருள் உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து… யாருடன் பேசினாலும் கேட்போர் உணர்வுகளிலும் அந்த அருள் உணர்வுகள் பதிவாகி அவர்களையும் இருள் சூழ்ந்த நிலையிலிருந்து மீட்டிடல் வேண்டும்.

அத்தகைய நிலைகள் உங்களுக்குள் வந்தால் பிறிதொரு உணர்வுகளை உங்களுக்குள் இந்தத் தீமை நம்மை இயக்கிடாது அதை அடக்கும் ஆற்றல் பெறுகின்றீர்கள்.

அதைப் பெறச் செய்வதற்குத் தான்
1.அருள் ஞானிகளின் உணர்வுகளை ஊழ்வினையாக உங்களுக்குள் பதிவாக்கி
2.அந்த உணர்வின் வலிமை பெறச் செய்வது.

இந்த நினைவை நாம் வளர்க்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

கூட்டுத் தியானங்களில் யாம் வெளிப்படுத்திய உபதேசக் கருத்துக்கள் அடங்கிய புத்தகங்களை எடுத்து அடிக்கடி படிக்க வேண்டும். கேட்டது நினைவில் இல்லை என்றாலும் அது வலுப்பெறுவதற்கு
1.அந்த அருள் ஞான நூல்களை மீண்டும் படிக்க வேண்டும்… நினைவாற்றலை மீண்டும் பெருக்க வேண்டும்.
2.கூட்டமைப்பில் மற்றவர்கள் செவிகளிலும் இது கலக்கப்பட வேண்டும்.
3.தியானத்தில் ஒருவர் இன்று படித்தார் என்றால் அடுத்து மற்றொருவரைப் புத்தகத்தைப் படிக்கச் சொல்ல வேண்டும்.

அவருக்குள் விளைந்த உணர்வுகள் நமக்குள்ளும் கலக்கின்றது. கூட்டமைப்பில் எல்லோரும் சேர்த்துத் தியானிக்க வேண்டும்.

சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட பயத்தால் ஒரு சிலர் பயமான உணர்வுடன் இருப்பார்கள். அப்போது மனிதனை உருவாக்கிய மகிழச் செய்யும் அணுக்கள் பலவீனம் அடையப்படும் பொழுது… தனக்குள் இனம் புரியாதபடி நோய்கள் வருவதும் பிறர் வேதனைப்படும் உணர்வுகள் சிறுகச் சிறுக வந்து கடும் நோயாக விளையச் செய்து… நம்முடைய நினைவுகளை திசை மாற்றிக் கொண்டிருக்கும்.

அது போன்ற நிலைகளை நாம் அடக்க வேண்டும் என்றால்… அதற்கு அவசியம் யாம் வெளிப்படுத்திய அருள் ஞானப் புத்தகங்களை எடுத்துப் படியுங்கள்.
1.ஒரு பத்து பேர் இருந்தாலும் படிக்க வேண்டும்… ஐந்து நிமிடம் அல்லது பத்து நிமிடம் படியுங்கள்.
2.ஒருவரே என்று இல்லாதபடி தினமும் ஒருவரைப் படிக்கச் சொல்ல வேண்டும்.

அது போன்ற கூட்டமைப்பாக அமைத்துத் தியானித்து முடிந்த பின் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் அவர் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் காணும் சக்தி பெற வேண்டும்… அவர் உடலில் அறியாது சேர்ந்த தீயவினைகளால் விளைந்த நோய்கள் நீங்க வேண்டும் என்ற இந்த உணர்வினை அனைவரும் சேர்த்து அந்தப் பயந்தவரின் செவிப்புலனில் இயக்கப்படும் பொழுது வலிமை மிக்கதாக இது மாறி அவர் உடலில் இருக்கக்கூடிய பிணிகளை நீக்கும்.

தனித்த நிலையில் யாரும் இதைச் செய்ய வேண்டாம். காரணம்… ஒருவருக்குக் கடுமையான நோய் இருந்தாலும் அல்லது இன்னொரு ஆவி உடலுக்குள் புகுந்து இருந்தாலும் அதனுடைய வேகம் அதிகமாக இருக்கும்.

அதனுடைய உணர்ச்சிகளை பார்க்கப்படும் பொழுது அங்கிருக்கும் வெறுப்படைந்த உணர்வுகள் வேகத்தின் உணர்வுகள் அதற்கு வலு ஜாஸ்தி.
1.நமக்குள் நல்லதை எடுக்க விடாது முன் பகுதி இருந்து கொண்டு தடைப்படுத்தும்.
2.நல்ல உணர்வுகளை எடுக்கவில்லை என்றால் என்ன செய்வது…?
3.இதைப் போன்ற வருவதைத் தடைப்படுத்துவதற்கு கூட்டமைப்பின் தன்மைகளை வலுப் பெறச் செய்தல் வேண்டும்.

நாம் நுகரும் உணர்வின் தன்மை உயிலே பட்டுத் தான் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குச் செல்லும். ஆக அந்த்த் தீமை புகாது தடுப்பதற்குத் தான் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை வலுப்பெறச் செய்து உங்கள் வலிமையைக் கூட்டுகின்றோம்.

ஆனால் இந்த வலிமை வருவதற்கு முன் தீமையின் வலு சேர்ந்து விட்டால் நல்லது நமக்குள் வராதபடி ரிமோட்… தள்ளிவிட்டுக் கொண்டே இருக்கும். அப்போது நல்லதை நுகர்வது எங்கே…? அந்த அறிவின் ஞானம் வருவது எங்கே…? இந்த வலிமையைப் பெறுவது எங்கே…?

ஆக நாம் எண்ணியதை உயிர் எவ்வாறு இயக்குகின்றது…? என்பதை நீங்கள் அறிவதற்குத் தான் அகஸ்தியனைப் பற்றிச் சொல்வது. அவன் தாய் கருவிலே பெற்ற சக்தியின் துணை கொண்டு அணுவின் ஆற்றலை அறிந்தவன்… நஞ்சை ஒடுக்கியவன்… ஒளியின் சுடராக இருப்பவன்…! அதை நாமும் பெறுதல் வேண்டும்.

ஏனென்றால் மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம். சாமி சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார் என்று எண்ணுவார்கள்.
1.உங்களுக்குள் அதை இணைத்து “அவர்கள் பெற்ற வளர்ச்சியை” உங்களுக்குள் நினைவுபடுத்தியே ஆக வேண்டும்.
2.அப்போது அந்த உணர்வின் “தொடர்வரிசையாக” மீண்டும் உங்களுக்குள் அது இயங்கும்.

பலகாரம் சுடுபவர்கள் ஒரு தரம் மாவைப் போட்டுப் பிசைந்தார்கள் என்றால் அடுத்தடுத்து அதே மாவைப் போட்டுப் பிசைந்து சுட்டுக் கொண்டுதான் இருப்பார்கள்.

ஏன் இப்படி திரும்பத் திரும்ப மாவைப் பிசைகின்றார்கள் என்று சொல்லக்கூடாது. முதலில் போட்ட அதே அளவுகளை மீண்டும் போட்டு அதைக் கொண்டு வரும் பொழுது தான் அதே ருசி… அதே மணம்… எல்லாமே ஒன்று போல் வரும்.

அவர்கள் எப்படிப் பலகாரங்களை மீண்டும் மீண்டும் சுவையாகச் சுடுகின்றார்களோ இதைப் போன்று தான் ஒவ்வொரு சமயத்திலும்
1.அந்த அருள் உணர்வுகளைச் சுவை மிக்கதாக வளர்த்ததை உங்களுக்குள் இணைத்து
2.உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு உணர்ச்சிகளைத் தூண்டி
3.அதை வளர்க்கச் செய்வபதற்குத் தான் திரும்பத் திரும்ப யாம் சொல்வது.

அதாவது… பிறிதொரு உணர்வுகள் உங்கள் ஆன்மாவிலே கலந்துவிடாதபடி
1.அருள் உணர்வுகளைக் கூட்டி மற்ற தீமையின் வலுவைக் குறைக்கச் செய்வதற்கு தான் இவ்வாறு செய்வது.
2.எமது குருநாதர் எனக்கு இப்படித்தான் செய்தார்… அதே வழியில் தான் உங்களுக்குள்ளும் பதிவு செய்வதும் திரும்பத் திரும்பச் சொல்வதும்.

ஏனென்றால்
1.இந்த மனித உடல் நமக்குச் சதமானது அல்ல.
2.உயிர் தான் சதம் என்று நமக்குத் தெரிகின்றது.
3.அதனுடன் உணர்வுகளைச் சதமாக்கி இன்னொரு உடலுக்குள் புகுந்து விடாது அழியா ஒளியின் சரீரம் பெற வேண்டும்.

அதற்குத் தான் பல வகைகளிலும் உங்களுக்கு விளக்க உரையாகக் கொடுத்துக் கொண்டே வருகின்றேன்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply