“அபிஷேகத்தின் தத்துவம்” சாதாரணமானதல்ல

“அபிஷேகத்தின் தத்துவம்” சாதாரணமானதல்ல

 

கோவிலில் தெய்வச் சிலையை அலங்காரம் செய்வதற்கு முன்னாடி அபிஷேகம் செய்கின்றார்கள். சிலை மீது பாலை ஊற்றுகின்றார்கள் சந்தனத்தை ஊற்றுகின்றார்கள் கனி வர்க்கங்களைக் கரைத்து ஊற்றுகின்றார்கள் கடைசியில் நன்னீரை விட்டுக் கழுவுகின்றார்… அப்புறம் பன்னீரை ஊற்றுகின்றார்கள்.

சிலைக்கு எதற்காக இதைச் செய்கின்றார்கள்…? ஆனால் அப்போது நாம் என்ன செய்கின்றோம்…?

இங்கே வீட்டிலே கோரிக்கை வைக்கின்றோம். எப்படி…?

என் பிள்ளை சொன்னபடி கேட்கவில்லை என்று பாலாபிஷேகம் செய்யப் போகிறோம். விவசாயம் சரியாக வரவில்லை… என்னிடம் வாங்கிச் சென்றவன் பணத்தைத் திரும்பத் தரவில்லை என்று அதற்காக வேண்டி ஆண்டவனுக்குப் பஞ்சாமிர்தத்தை ஊற்றி அபிஷேகம் செய்து… குறைகளை எல்லாம் அங்கே சொன்னால் “அவன் பார்த்துக் கொள்வான்” என்று அவனை (தெய்வத்தை) திருப்திப்படுத்துவதற்காகச் செயல்படுத்துகின்றோம்

இருந்தாலும்… இந்தத் தெய்வம் நல்லதைச் செய்யும் என்று தான் சிலையாக அங்கே வடிக்கப்பட்டுள்ளது. அந்தச் சிலை மீது தான் இத்தனையும் ஊற்றுகின்றார்கள்… பார்க்கின்றோம். ஏன்…?
1.ஊற்றுவது பால் என்று தெரிகிறது… பாலைப் போன்ற மனம் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா.
2.மகிழ்ந்து வாழும் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
3.என் பையனுக்குத் தீமையை நீக்கிடும் பாலைப் போன்ற அந்தத் தெளிந்த மனம் பெற வேண்டும்.
4.கணவன் மனைவிக்குள் சில குறைபாடுகள் இருக்கும். என் கணவருக்குப் பாலை போன்ற தெளிந்த மனம் பெற வேண்டும்.
5.அவர் சொல்லிலே இனிமை வர வேண்டும். சந்தனத்தைப் போன்ற நல்ல நறுமணம் பெற வேண்டும் என் கணவருக்கு.
6.இந்த ஆலயம் வருவோர் குடும்பங்கள் அனைவருக்கும் அந்தப் பாலை போன்ற மனம் பெற வேண்டும் என்று
7.பாலாபிஷேகம் செய்யும் பொழுது யாராவது இப்படி நினைக்கின்றீர்களா…?

ஏனென்றால் அப்படிச் சுவாசித்தால் நம் உயிருக்கு அந்த அபிஷேகம் நடக்கின்றது. இந்த உணர்வுகள் இரத்தத்திலே கலந்து அமுதாக… உடலை உருவாக்கிய அணுக்களுக்கு ஆகாரமாக அது கிடைக்கின்றது. நல்ல வீரிய சக்தியாகக் கிடைக்கின்றது.

1.கண்களிலே பார்ப்பது துவைதம்.
2.அதிலிருந்து வரக்கூடிய மணத்தை நுகர்ந்தால் அத்வைதம்.
3.நுகர்ந்து உயிரிலே பட்டால் விசிஷ்டாத்வைதம்.

நாம் எந்த மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ணினோமோ அந்த உணர்வுகள் இயக்கப்பட்டு ஆகாரத்துடன் சேர்த்து உடலாக மாறுகின்றது. உயர்ந்த குணங்களை உனக்குள் உருவாக்கு… “துவைதம் உடல்…”

தெரியாத மக்களுக்குத் தெரிய வைக்க… “சூட்சுமத்தில் நடக்கும் உண்மைகளை” உருவம் அமைத்து அந்த உணர்வின் சக்தியை நாம் பெறுவதற்கு ஞானிகள் அதை உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள்.

யாராவது கொஞ்ச நேரம் இவ்வாறு எண்ணி எடுக்கின்றோமா…? நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

என் கணவருக்குப் பாலை போலச் சந்தனத்தைப் போல பன்னீரைப் போன்ற தெளிந்த மணம் பெற வேண்டும். எனக்கும் அந்த தெளிந்த மணம் பெற வேண்டும். கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் இப்படி எண்ணி எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இந்த மணம் கிடைக்க வேண்டும் என்று இப்படித்தான் எண்ணி எடுக்கும்படி… ஆபிஷேகிக்கும்படிச் சொல்லி உள்ளார்கள்.

யாருக்கு…? “நம் உயிருக்கு…!”

அதற்குத்தான் இந்தத் தெய்வம் நல்லது செய்யும் என்று காட்டியுள்ளார்கள். காரணப் பெயரை வைத்துச் சிலையை வைத்து ஊற்றும் பொழுது அந்தச் சக்தி நாங்கள் பெற வேண்டும் எண்ணி ஏங்குவதற்குத் தான் நறுமணமானதை அங்கே ஊற்றினார்களே தவிர… ஊற்றி முடித்த பின் அந்தத் தீர்த்தத்தைப் பிடித்துச் சென்று குடிப்பதற்கு அல்ல… அதை பிடித்து நம் வீட்டிற்குக் கொண்டு வருவதற்கு அல்ல…!

இதை நமக்குள் எடுத்து இந்த உணர்வின் தன்மையை நமக்குள் செலுத்துவதற்குச் செய்தான் ஞானி.

இன்று டாக்டர்கள் என்ன செய்கின்றார்கள்…? நோய் என்று தெரிந்தால் இன்ஜெக்க்ஷனைப் போட்டு இரத்தத்தில் தான் அந்த மருந்தைக் கலக்கும்படி செய்கின்றார்கள்.

அது ஜிர்ர்… என்று போய் நல்ல அணுக்களுக்கு வீரியத்தை ஊட்டுகின்றது. அதற்குண்டான உணவைக் கொடுத்து ஆகாரத்துடன் கலக்கப்படும் பொழுது அதனுடன் இணைத்து நோய்க்குக் காரணமான அணுக்களை வலு இழக்கும்படி செய்கின்றார்கள்.

ஆனால் ஞானிகள் என்ன செய்தார்கள்…? அங்கே தெய்வத்திற்கு அபிஷேகம் செய்யும் பொழுது
1.உற்றுப் பார்த்து அந்த உயர்ந்த மணத்தை நாம் சுவாசித்து
2.உயர்ந்த சக்திகளை நம் இரத்தத்திலே எப்படிக் கலக்க வேண்டும்…? என்று அபிஷேகம் செய்து காட்டுகின்றார்கள்.

அவ்வாறு அதை நுகர்ந்து எடுத்தால் நம் உயிரான ஈசனுக்கு அபிஷேகம் ஆகின்றது. மகிழ்ச்சியூட்டும் உணர்வின் உணர்ச்சிகளாக அதன் வழி நம்மை இயக்குகின்றான்.

நாம் இப்படி எண்ணும் உணர்வுகள் நினைவாக்கப்படும் பொழுது உயிரிலே படும் பொழுது அரங்கநாதன். எந்த உணர்ச்சியின் உணர்வோ ஆண்டாள். “அந்த உயர்ந்த உணர்வுகள் நம்மை ஆளத் தொடங்குகிறது…”

“நம்முடைய எண்ணமே நம்மை ஆளுகின்றது” என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

1.நமது சாஸ்திரங்களில் பொய்யில்லை.
2.ஆனால் நாம் மெய்யைப் பொய்யாக்கி விட்டு… பொய்யைத் தான் இன்று மெய்யாகச் செய்து வாழ்ந்து கொண்டுள்ளோம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply