இந்தத் தியான வழியினை யாருக்கும் கட்டாயப்படுத்தி நாம் சொல்லக் கூடாது

இந்தத் தியான வழியினை யாருக்கும் கட்டாயப்படுத்தி நாம் சொல்லக் கூடாது

 

எப்பொழுதெல்லாம் உங்கள் மனம் தெளிய வேண்டுமோ அப்பொழுதெல்லாம் எம்முடைய அருள் ஞான நூல்களை எடுத்துப் படியுங்கள் எமது உபதேசங்களைக் கேளுங்கள்.

உங்கள் நண்பர்களுக்கும் எடுத்து ஓதுங்கள்… அவர்களுக்குள் பதிவாக்குங்கள்… நினைவாக்குங்கள். அவர்களையும் அந்த அரும்பெரும் சக்தியைப் பெறச் செய்யுங்கள்.

அந்தத் துணிவு உங்களுக்கு வரவேண்டும்.

1.நீங்கள் கண்ட உண்மைகளை எடுத்துச் சொல்லுங்கள்… கேட்காதவரிடம் சொல்ல வேண்டியதில்லை.
2.ஒரு சிலர் கேட்க மறுப்பார்கள். அவர்களிடம் நாம் இதைப் பேச வேண்டியது இல்லை.
3.அவர்களுக்கும் நல்ல காலம் வரும் நல்வழி நடப்பார்கள்… என்று நாம் அவர்களுக்காகத் தவம் இருக்க வேண்டும்.

மீறிச் சொன்னால் நம்மைக் கிண்டலாகச் சொல்வார்கள். அது தான் நடக்கும். பரவாயில்லை… ஒரு காலம் உங்களை அறியும்… உண்மைகளை அறியும் அந்தச் சக்தி நீங்கள் பெறுவீர்கள் என்று சொல்லி விடுங்கள்.

1.உலக மக்களுக்காக நீங்கள் பேசும் இத்தகைய அருள் உணர்வுகள் உங்களுக்குள் விளைகின்றது… உங்களுக்குள் பரவுகின்றது.
2.அவர்கள் முதலிலே கேட்க மறுத்தாலும் கூடச் சங்கடம் வரும் பொழுது உங்களை எண்ணுவார்கள்… உடலில் பதிவானது நினைவுக்கு வரும்.

நாம் சொன்னதைச் செய்தால் நல்லது வரும் என்ற சிந்தனை அவர்களுக்கும் வரும். அப்பொழுது அந்த உணர்வுகளை நுகர்ந்து நம்மை அணுகி வருவார்கள்.

முதலில் சொல்கின்றோம் ஆனால் அவரிடம் “விவாதிக்கும் தன்மைக்கு” நாம் போகக்கூடாது… அதை விட்டு விட வேண்டும். நீங்கள் நன்மை பெறுவீர்கள் நல் வழி நடக்கும் நீங்கள் நுகர்ந்த இந்த உணர்வுகள் உங்களுக்கு நல்வழி காட்டும் என்று மட்டும் நாம் சொன்னால் போதும்.

1.அடுத்து அழுத்தமாக இதைப் பெற்றே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது.
2.யாருக்கும் கட்டாயப்படுத்தி இந்தச் சக்தியைத் திணித்து அவர்களைப் பெறச் செய்ய முடியாது.

அன்புடன் அரவணைத்து உண்மையின் உணர்வை எடுத்துச் சொல்லத் துணிவு வேண்டும்.

இந்தத் தியானத்தை கடைபிடிப்போர் அனைவரும் உலக மக்கள் நலமாக இருக்க வேண்டும் என்ற உணர்வுகளை நாம் அடிக்கடி வெளிப்படுத்துதல் வேண்டும். இந்த உணர்வுகள் பூமியிலே படரும்.

ஒருவரிடம் சொல்கின்றோம் அவர்கள் நினைவானால் கவரும் சந்தர்ப்பம் வருகின்றது. சிந்திக்கும் ஆற்றல் அவர்களுக்குள் வரும். உங்கள் சொல்லும் வீணாகாது.

ஆனால் ஏற்கும் பருவம் கொண்டு அவருக்குள் பதிவு செய்து ஏற்க வைத்து விட்டால்
1.நாளைக்கு ஒரு சிரமம் வரும் பொழுது உங்கள் நினைவு வரும்.
2.நீங்கள் எடுத்துக் கொண்ட உணர்வு இங்கே இருக்கும்… அதைப் பெற வேண்டும் என்ற நினைவு அவருக்கு வரும்.

ஆனால் கட்டாயப்படுத்த கட்டாயப்படுத்த வெறுப்பின் தன்மை தான் வளரும்… ஏற்றுக்கொள்ளும் பருவமே இழக்கப்படுகிறது.

ஒரு பொருளில் விஷம் கலந்தால் அது எல்லாம் விஷமாகத்தான் மாறும். ஆகவே கட்டாயப்படுத்தி யாருக்கும் சொல்ல வேண்டாம்.

அரவணைத்து அன்புடன் ஞானத்தைப் பதிவு செய்தால் சந்தர்ப்பம் வரும் பொழுது மற்றவர்களும் இந்த அருள் ஞானத்தைப் பெறுவார்கள். ஆகவே அந்தத் தகுதியைப் பெறச் செய்யுங்கள்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply