
அனைத்தும் அகண்டம்…! (பூரணத்துவம்)
ஆத்ம சக்தியின் வளர்ச்சிக்கு வானியலாக வழி வகுத்துத் தந்திட்ட “மகரிஷிகள்…” ஒவ்வொரு உயிராத்மாவும் தன் வாழ்வின் உண்மை நிலை உணரும் பொருட்டு…
1.நான் என்பது யார்…? என்ற ஞான முகிழ்விப்பு உதயம் காட்டிட
2.ஆத்ம விழிப்பால் பூரணத்துவ நிறைவைத் தன்னுள் கண்டு… தெளிந்து…
3.அன்பெனும் வித்தை ஊன்றி… ஞான நீரை மனமெனும் நெடு வயல் பாய்ச்சி எதிர் மோதல் களைய
4.பலன் எனும் செழுமை வளர்ப்பை ஆகாரமாகப் புசித்து உலக நலன் நாடும் வழிகாட்டியது
5.அளவுகோல் காணா… “பரிவின் வழி பாசமப்பா…”
உம்மை நீ உணர்ந்து கொண்டிட அளவில் சிறிதாகினும் பிடிப்பின் (உலகப்பற்று) நிலை விலக்கிடப்பா…!
முழுமையாக உம்மை ஆட்கொண்டிட்ட பிறகு… உம்மையே இயக்கும் செயல் சித்தம் தொடர்ந்த பிறகு… ஞானக்கண் திறந்திடவில்லை என்றிட்ட எண்ண (உன்னுடைய) உணர்வே எதிர் மோதல் அமில குணங்களாக வாயு பித்த சிலேத்துமம் என்பதில் ஒன்றின் பிரிவே கிளையாகக் கிளைத்து எழுந்தது உடல் நலிவின் காரணம்.
காயத்தைக் கல்வப்படுத்திடும் மூலிகை அன்றோ அருந்தினாய். காயத்திற்கு ஏது நலிவு…? எண்ணத்தின் சோர்வன்றோ விளையாடியது. “பஞ்சமுக ஒளியின்” பாடம்தான்… எண்ணியதை எண்ணியாங்கு நடத்துகின்ற ஆற்றலன்றோ நீ படைத்திட்டது.
பிரம்மனின் ஐந்து முகத்துள் சிரசின் முகம் உச்சியில் ஈஸ்வரரால் களையப்பட்டதாகப் படித்திருப்பாய். உன்னைச் சுற்றிச் சுழன்றோடும் ஒலி நாதத்தில் கலந்திருக்கும் ஒளியின் ஊடாக ஒலி ஒளியை ஈர்த்தே ஒளியில் கலந்தது என்ற சூட்சும உரையின் பதம்.
உரையின் தெளிவை உயர் ஞான வலுவால் அறிந்திடும் சிறு முயற்சி பதத்தின் உரையைக் காட்டும்…! விரித்தே உரைக்கின்றேன்.
பெற்றுக் கொண்டிட்ட சக்தியின் வளர்ச்சி அளவீடு சித்தன் காட்டிட்ட சித்தின் நிகழ்வாக (உலக நலனுக்காக) மழை வேண்டும் என்று எண்ணத்தை உரைத்திட்டானப்பா. உரையைச் செயலில் விளக்கி விட்டாய்.
மனதின் கூறு மேம்பட… ஈர்த்து வெளிக்காட்டிட தொடர்பு என்ன…? சொல்வது அனைத்தும் பாடம் தான். உன்னில் ஊன்றிப் பார். ஞானவழிச் செல்வங்கள் யாராக இருந்தாலும் அவர்களும் காணட்டும்.
உனது எதிர்புறமும் நேர்புறமும் இடது வலது பக்கங்களிலும் ஜோதியாகக் காண்ப்பது உயிராத்ம சக்தியின் வளர்ப்பு. எண்ணத்தில் உன்னையே நீ ஜோதியாகக் காண்கின்றாய்.
பஞ்சமுக ஜோதியாக விளங்கி விட்டால் பிறப்பின் நிலை ஏது…? அனைத்தும் அகண்டம்…! (பூரணத்துவம்)
ஐம்முகத் தொழிலில் அறிந்து உணர்ந்து செயல் கொள்ளுதல் எல்லாம் விளக்கவொண்ணா ஆனந்த இலயத்தின் பேரருள் செல்வ நிலையில்
1.பிரம்ம சாயுஜ்யம் என்ற உண்மையை உணர்வோன்
2.முத்தொழில் புரியும் படைத்தல் காத்தல் அளித்தல் பிரம்மா விஷ்ணு சிவன் அனைத்தும் தன்னுள்ளே தன்னையே காண்பான்.
3.எண்ணுகின்ற எண்ணம் ஈடேறுதல் சிருஷ்டி – அதுவே படைப்பு
4.எண்ணம் கொண்டு அனுபவித்தல் – காத்தல்
5.தன்னுள் அனைத்தையும் கட்டுக்குள் நிலை நிறுத்தி மோனத்தில் லயித்தல் – அழித்தல்.
6.பின்பு நிலை நிற்பது என்ன…? அதுவே அருளல் என்னும் “ஆதிசக்தியின் சக்தியாகக் கலத்தல் என்பதே… மறைத்தல் தத்துவம்…”
அண்டவெளியின் இயக்க கதியில் ஞானச் செல்வங்கள் உணர்ந்து அனுபவிக்கும் நிலைக்கு வித்திட்டேன்.
1.உயர்ந்து காட்டிடல் வேண்டும் என்ற
2.உமது செயற்பாடே… எமது ஆனந்தக் களி நடனம்.
சொல்லில் மறைபொருள் காட்டுவது… சித்தன் வல்லமை காட்டிய அனுபவித்தல் என்ற எட்டா நிலையை எட்டி விடவே இந்தப் பாடங்கள் அனைத்தும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.