
மனிதனுக்கு மனிதன் “எதிர்த்துத் தாக்கும் உணர்வை எடுத்து வளர்த்தால்” நம்மை அது இருள் சூழச் செய்துவிடும்
உதாரணமாக பாம்பு வந்தால் பாதுகாப்புக் கருதி அதை நாம் அடித்துக் கொல்கிறோம். கொன்ற பின் பாம்பின் உயிர் நம்முள் வந்து மனிதனாகப் பிறக்கும் தகுதி பெறுகின்றது.
ஆனால் முதலில் பாம்பைப் பார்த்தவுடன் “பாம்பு நம்மைக் கொத்தி விடுமே…” என்று அஞ்சிடும் உணர்வுகளைத் தான் எண்ணுகின்றோம்.
1.பயமான உணர்வுகளை எடுத்தால் “நடுக்கத்தை உருவாக்கும் அணுக்கள்…” நமக்குள் உருவாகத் தொடங்கி விடுகின்றது
2பாம்பை நினைத்தாலே பயமும் பதட்டமும் வருகிறது
3.அடிக்கடி இந்த உணர்வுகளை நுகர்ந்தால் நடுக்க வாதம் வந்து விடுகிறது.
ஆகவே இது போன்ற சந்தர்ப்பங்களில் நாம் எதைச் செய்ய வேண்டும்…?
நாம் அமைதியாக சாந்தமாக இருந்தாலும் பாம்பினைச் சும்மா விட்டால் தாங்காது. அதை அடித்துத்தான் ஆக வேண்டி இருக்கும். அதை அடித்துக் கொன்றாலும் அந்த உயிர் நமக்குள் வந்து அது பரிணாம வளர்ச்சிக்கு வருகின்றது.
ஆனால் “நாம் எடுத்த அஞ்சிடும் உணர்வோ” நடுக்கத்தை உருவாக்கும் அணுக்களாக உயிர் உடலுக்குள் உருவாக்கி விடுகின்றது. இது ஒரு வகை…!
இதுவே… மனிதனுக்கு மனிதன் வெறுப்பு கொண்டு பகைமை குரோதம் என்ற உணர்வுகளை அதிகமாக வளர்த்து விட்டால் உடலில் சீக்கிரம் நோயாக மாறுகின்றது.
அது மட்டுமல்ல…! நோயாகி உடலை விட்டுச் சென்ற பின் யார் மீது பகைமையானதோ அந்தப் பகைமை கொண்ட உடல்களுக்குள் நம் ஆன்மா சென்று
1.அவனை வீழ்த்திடும் உணர்வுகள் பெற்று… மனிதனாக உருப்பெற்ற உணர்வுகளை வீழ்த்தி விட்டு
2.அடுத்து அந்த உடலை விட்டு வெளியே வந்தால் மனிதனல்லாத நிலைகளாகச் செயல்படுத்தி விடுகின்றது.
இத்தகைய நிலைகளுக்கு நம் எண்ணங்கள் செல்லாதபடி நாம் மாற்ற வேண்டும். ஏனென்றால்
1.மற்ற உயிரினங்களை அடித்தால் அது நம் உடலுக்குள் வந்து மோட்சம் பெறுகின்றது.
2.மனிதனைத் தாக்கினால் பழி தீர்க்கும் உணர்வு கொண்டு உடலுக்குள் வந்து நம்முடைய சிந்தனைகளை அழித்து விடுகின்றது…
3.நம்முடைய மனித உடலையே மாற்றிக் கீழான நிலைகளுக்குக் கொண்டு சென்று விடுகிறது
4.(உயிரினங்களுக்கும் மனிதனுக்கும் உண்டான இந்த வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்)
அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பெற வேண்டும் என்று அதை உருவாக்கினால் மற்ற மனிதரின் உணர்வுகள் நமக்குள் வளராது நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
தீமைகள் உருவாகாதபடி தடுக்க நம் மனதை எங்கும் செலுத்தாதபடி… உயிர் என்ற ஒளி கொண்டு உணர்வினை ஒளியாக்கி ஒளியின் சரீரமாக நிலை கொண்டிருக்கும்… மனித வாழ்க்கையில் தீமைகளை வென்றிடும் உணர்வுகளை வளர்த்துக் கொண்ட… அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரத்திமான உணர்வுகளை நமக்குள் எடுத்து வளர்த்தல் வேண்டும்.
குடும்பத்தில் எத்தகைய நிலை வந்தாலும் கணவன் மனைவி இருவருமே… தான் பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி தன் மனைவி பெற வேண்டும் என்றும்… தான் பெற்ற துருவ நட்சத்திரத்தின் சக்தி சக்தி தன் கணவன் பெற வேண்டும் என்றும்… இருவரும் அருள் ஒளி பெற்றால் ஒளியின் தன்மையாக வளரும் பருவம் பெறுகின்றீர்கள்.
ஆகவே இரு உணர்வும் கொண்டு பிறருடைய தீமைகள் நமக்குள் புகாது அவர்கள் தெளிந்த நிலை பெற்று வாழ்வார்கள் என்று நாம் எண்ண வேண்டும்.
1.யார்… எந்தத் தவறு செய்கின்றார்களோ அதுவே அவருக்குள் விளைந்து
2.அந்த உண்மைகளை அவர்களே உணர்வார்கள்…! என்று நாம் நினைத்தால் அவருடைய தீமை நம்மைச் சாராது.
பிறரைக் கெடுக்க வேண்டும் என்றோ… பிறருக்குத் தொல்லைகள் கொடுக்க வேண்டும் என்று ஒருவன் எண்ணினால்
1.அவன் உணர்வை அவனே பெறட்டும்..! என்று இந்த உணர்வைப் பரப்பி விட்டால் நமக்குள் அது புகாது தடுக்கப்படுகிறது
2.அதே சமயத்தில் அவன் எடுத்த உணர்வுகள் அவனுள்ளே விளைந்து அவணே அதை அனுபவிப்பான்.
3.நாம் அவர்களுடைய உணர்வுகளைப் பெற வேண்டியது இல்லை.
ஆனாலும் அடுத்து நாம் எண்ண வேண்டியது
1.அறியாத நிலையில் இருந்து அவன் விடுபடுதல் வேண்டும்
2.அவன் உடலைக் காத்திடும் நிலை வர வேண்டும்
3.அவனுக்குள் இருக்கும் உயிரான ஈசனை மதிக்கும் சக்தி வரவேண்டும்.
4.ஈசனால் உருவாக்கப்பட்ட மனித உடலை அந்தச் சிவத்தை அவன் மதித்து நடக்க வேண்டும் என்று
5.இத்தகைய உணர்வினை நாம் எடுத்துக் கொண்டால் நமக்குள் பகைமை உணர்வுகள் வராது.
அவனின்று அவன் தெளிவு பெற… நமக்குள் அருள் சக்தி உருவாகி… நம் மனம் தீமையின் பக்கம் நாடாது… உயிர் என்ற நிலைகள் கொண்டு நாம் எண்ணிய நல்ல உணர்வு… நமக்குள் ஒளி என்ற நிலையாக உருவாக்கும் தன்மையும்… பகைமையற்ற உணர்வுகள் கொண்டு வாழ்ந்திடும் சக்திகளைப் பெறுகின்றோம்.
ஆறாவது அறிவு… சேனாதிபதி என்று பாதுகாக்கும் நிலை கொண்டு அருள் ஒளியின் உணர்வினை நமக்குள் உருவாக்கப்படும் பொழுது பகைமைகள் புகாது அதை அருள் ஒளியாக மாற்றிடும் பக்குவம் பெறுகின்றோம்.
1.இந்த வழியிலே நாம் வாழ்ந்திட வேண்டும்
2.குரு காட்டிய வழியில் அருள் வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும்.
அதனால் தான் “என் நினைவை எங்கெங்கோ அலையவிட்டு… என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாது… என்னுள்ளே என்றும் நீ இருந்து விடு ஈஸ்வரா…!” என்று உயிரிடம் வேண்டும்படிச் சொல்கின்றோம்.
அவன் அப்படிச் செய்கின்றான்… இப்படிச் செய்கின்றான்… என்று மற்றவரை அப்படி எண்ணாதபடி அந்த உயிரை ஈசனாக மதித்து உடலைச் சிவமாக மதித்தல் வேண்டும்.
இப்படி மதித்து விட்டால் நம் உயிர் நமக்குள் ஈசனாகவும்… நம் உடல் சிவமாகவும்… அது தெளிந்த நிலையாக உருவாகின்றது.
பிறர் தவறு செய்தாலும் அவர்கள் அறியாத இருளிலிருந்து விடுபட வேண்டும். அந்த அருள் ஒளி பெரும் தகுதி அவர்கள் பெற வேண்டும். அவனுக்குள் இயங்கும் ஈசன் என்ற உயிரை உணரும் பருவம் பெற வேண்டும்.
1.அவர்கL அறிவால் அறியும் அறிவைக் கொண்டு அவருள் அறியாத இருள் நீங்கும்
2.இருள் நீக்கும் உணர்வுகளை அவர்கள் பெறுவார்கள் அதைப் பெறும் தன்மைகள் வர வேண்டும் என்று
3.நாம் இப்படி எண்ணிப் பழகுதல் வேண்டும்.
ஆனால் தவறு செய்தோரை அல்லது தீமை செய்தோரை எதிர்த்து நாம் சொன்னோம் என்றால் “அது நம்மைப் பாதிக்கும்… இன்னும் கொஞ்சம் அவர்களுக்குள் சூடு தான் அதிகமாகும்…”
ஆனால் யாம் (ஞானகுரு) சொன்ன உணர்வு பிரகாரம் செய்தால் எப்போது தாக்கும் உணர்வு வருகிறதோ (யாரிடமிருந்து வந்தாலும் சரி) அங்கே அறியாமையிலிருந்து அவரை விடுபடச் செய்யும். நம்மைப் பாதிக்காது…!
செய்து பாருங்கள்…!
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.