
நம் “சுவாச நிலையும்… தியான நிலையும்…” ஒன்றுபட வேண்டும்
சூட்சம உலகத்திற்கு வருபவர்கள் எல்லாம் ஜெப அருளைப் பெற்று ஜெபத்தில் இருந்தால் மட்டும் தான் வருவார்கள் என்பதல்ல.
இந்த மானிட உலகில் பிறந்தவர்கள் ஜெப நிலையை அறியாமல்
1.தன் எண்ணத்திலும் செயலிலும் ஆண்டவன் அருளைப் பெற்று
2.அந்த ஆண்டவனுக்காக அஞ்சித் தன் வாழ்க்கை முறையில் பல நற்காரியங்கள் செய்து
3.தன்னையே “தான்…” என்ற கர்வமில்லாமல் தன்னால் இந்த உலகிற்கு என்ன பயன்…? என்று புரிந்து கொண்டு வாழ்பவனும்
4.தன் நிலை என்ன…? என்றே… தனக்கே தெரியாமல் பல வகை இன்னல்பட்டு மக்களுக்காகப் பல நன்மைகளைச் செய்பவர்களும் உள்ளார்கள்.
அதே போல் பல புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகள் உள்ளார்கள். அந்த விஞ்ஞானிகள் எல்லாம் என்ன எண்ணுகிறார்கள்…?
1.தான் ஆண்டவனை நினைத்துத் தன் அறிவை உபயோகப்படுத்துவதாகவும்
2.அப்படிப்பட்ட தன் முயற்சியினால் தான் பல புதிய வார்ப்புகளையும் படைப்புகளையும் கண்டுபிடிப்பதாக…!
3.ஆனால் அதுவல்லப்பா அவர்கள் நிலை…!
இந்த மனித உடலில் உள்ள எல்லோருமே விஞ்ஞானியாகலாம்… மெய் ஞானியாகலாம்.. மகரிஷியாகவும் ஆகலாம்… பல கீழான நிலைக்கும் செல்லலாம்….!
அவனவன் ஆண்டவனை எண்ணும் நிலையில் அவன் அறிவை உபயோகப்படுத்தும் பொழுது அவன் நிலையில் சூட்சம உலகத்திற்குச் சென்ற ஆவி நிலையோ அல்லது அவன் நிலையில் விட்டுச் சென்ற விஞ்ஞானியோ அவன் உடலுக்குள் புகுந்து விடுகிறது.
அது புகுந்த பின் தான் ஒவ்வொரு விஞ்ஞானிக்கும் அவர்கள் பல வழிகளைக் காட்டுகின்றார்கள். ஆனால் அந்த விஞ்ஞானி என்பவன் தான் பெற்ற அருளைச் சிதறவிடாமல்
1.எந்த நிலையில் ஆண்டவனை எண்ணி ஒரு நிலையை ஆரம்பித்தானோ
2.அந்நிலை வரை அவன் நிலைக்கு அவன் உடலில் உள்ள அந்தச் சூட்சம அருள் பெற்ற அச்சித்தனின் அருள் செயல்படுகிறது.
என்றைக்கு அவன்… “தான்…!” என்ற எண்ணத்திற்கு வருகிறானோ அன்றே அவன் செயலும் அவன் எடுத்த முயற்சியும் வீணாகிறது.
“எல்லாமே அவன் செயல்…” என்று எண்ணுபவனுக்கு என்றுமே அவன் அருள் உண்டு. இந்நிலையில் உள்ளவர்களும் அந்நிலைக்கு வருகின்றார்கள் சூட்சம நிலைக்கு.
இப்படித்தான் பல பாடகர்களைப் பார்த்திருப்பாய். அவர்கள் பாடலில் இனிமை எங்கிருந்து வருகிறது…? பல கை தேர்ந்த மருத்துவர்களைப் பார்த்திருப்பாய். அந்த மருத்துவர்களின் திறன் எங்கிருந்து வருகிறது..?
இந்த உலகில் உள்ள பல கோடானு கோடி நல்லோர்களின் உயிரான்மாக்கள் மறு பிறவி எய்தாத நிலையில் பூமியிலே சுழன்று கொண்டுள்ளார்கள்.
இந்த உலகில் ஜீவித்த காலத்தில் உடலுடன் இருக்கும் காலத்தில் நடத்திச் சென்ற பாதையை அவ்வுலகுக்குச் சென்றும் சூட்சம உலகத்திலிருந்து தன் எண்ணத்திற்கு உகந்தபடி உதவியும் செய்கிறார்கள்.
எந்நிலை கொண்டு…?
இந்த மானிட உலகில் உள்ள மனிதன் எவனொருவன் அந்த ஆண்டவனை நினைக்கும் பொழுது எந்த வழிக்கு ஆண்டவனை நினைக்கின்றானோ… வேண்டுகின்றானோ… அந்த வழிக்கு அச்சூட்சம உலகத்தில் உள்ள பலரின் நிலைகள் செயல்பட்டுப் பல உதவிகளைச் செய்கின்றனர்.
இப்படிப்பட்ட அருள் பெற்றவர்கள் எல்லோருக்குமே
1.என்று அவர்களுக்குத் “தான்…” என்ற கர்வம் வருகின்றதோ
2.அன்றுடன் அதுவரை அவர்கள் பெற்ற பேறுகளும் மடிந்து விடுகின்றது.
3.அவர்களின் நிலைக்கு (மறைமுகமாக) உதவி செய்த அந்தச் சித்தர்களின் நிலையும் மறைகிறது.
ஆகவே சூட்சம உலகத்திற்குச் செல்பவர்கள் எல்லாம் ஜெபத்திலிருந்து… ஜெப அருளினால் மட்டும் தான்… செல்ல வேண்டும் என்பதல்ல.
இந்தப் பாட நிலையைப் புரிந்து கொண்டால் இஜ்ஜெப நிலையில் இருப்பவருக்கு இவ்வுலக நிலையில் உள்ள பொழுதே
1.தான் யார்…? நான் என்பது யார்…? என்று புரியும் நிலை வந்துவிடும்.
2.தான் பிறவி எடுத்த பயனும் தன் நிலைக்குத் தன் உயிர் நிலைக்கு ஒரு நிலைப்படுத்த எடுக்கும் இந்த ஜெப நிலை அருள் புரிகின்றது.
நம்முடைய சுவாச நிலையும் ஜெப நிலையும் ஒன்றுபட்டால் இந்த உலக நிலையையும் பல கோடிச் சித்தர்களின் நிலையையும் அறிந்து பல மண்டலங்களின் நிலையும் அறிந்து கொள்ள முடியும்.
1.உயிர் மட்டும் அழியாத உயிரல்ல…
2.உடலையும் அழியாது பாதுகாத்துத் தான் பிறவி எடுத்த பயனை அடைந்து
3.என்றுமே அதை இந்த உலக மக்களுக்காக உபயோகப்படுத்தலாம்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.