
கெட்ட கனவுகள் வரக் காரணம் என்ன…?
அன்றாட வாழ்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும் சண்டை போடுபவர்களை… வெறுப்படைபவர்களை… கோபப்படுபவர்களை… குரோதப்படுபவர்களை… எல்லோரையும் நாம் பார்க்க நேர்கிறது. அந்த உணர்வுகளை எல்லாம் நாம் நுகர்கின்றோம்.
அவர்களுக்கும் நமக்கும் நேரடியான சம்பந்தமே இல்லை. இருந்தாலும் பதிவு ஆகிவிட்டால் இரவு தூக்கத்தில் கனவுகளாகப் பார்க்கலாம்.
பகலில் நல்ல இடத்திலே… எப்படிச் சண்டை போட்டார்கள்…? என்று
1.“தூங்குவதற்கு முன்…” இந்த உணர்வலைகள் வரும்.
2.அடுத்து தூக்கத்தில் பார்த்தால் நாம் யாருடனோ சண்டை போடுகின்ற மாதிரி கனவுகள் வரும்… முழிப்பாகி விடும்… எழுந்து விடுவோம்…!
3.யார்… என்ன…? என்ற நிலையில் தெரியாது… உருவமும் தெரியாது
4.நம் எண்ணமும் இந்த உணர்வுகளும் சேர்த்துச் சரியான உருவம் தெரியாதபடி நமக்கு அதிர்ச்சியாகிவிடும்
5.யாரோ நம்மைத் தாக்க வருகிறார்கள்…! என்று கனவிலே வரும்.
ஏனென்றால் நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் இரத்தத்தில் கலந்து இதே உணர்வுகள் “மற்ற அணுக்களுக்கு எதிர்மறையாக வரும் போது…” இந்தப் பதட்டமும் பயமான உணர்ச்சிகளும் தூண்டப்பட்டுத் திடீரென்று இரவிலே எழுந்து விடுவோம்.
இது எல்லாம் எது செய்கின்றது…? பகலில் நுகர்ந்த உணர்வுகளை நமது உயிர் இயக்கிக் காட்டுகிறது.
அந்த உணர்ச்சியின் தன்மை அந்தந்த அணுக்களுக்கொப்ப அதனதன் உணர்வுகளை நுகரப்படும் பொழுது அந்தச் செயல்களை உணர்ச்சிகள் வழி தான் செயலுக்கு வருகின்றது.
இந்த இயற்கையின் நிலைகளை அறிந்து கொள்ள வேண்டும்.
காரணம் பகலில் எல்லாவற்றையும் நாம் பதிவு செய்து விடுகின்றோம். இரவு தூக்கத்திலே அந்த மாதிரி நம்மை இயக்குகிறது.
நம்மை ஒருவன் திட்டிவிடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அதற்கடுத்து மற்ற வேலைகளைச் செய்கிறோம். வேலையில் சோர்வடையும் பொழுது… தன்னை அறியாமலே அந்தத் திட்டியவனின் நினைவு வரும்.
என்னை இப்படி எல்லாம் பேசினான்… செய்தான்… என்று எண்ணினால் அந்த நேரத்திலே செய்யக்கூடிய வேலை கெட்டு விடுகின்றது… வேலையைச் சரியாகச் செய்து முடிக்க முடியாது.
அப்போது வீட்டில் ஏதாவது ஒன்றைச் சொன்னார்கள் என்றால் அவர்களிடம் சண்டைக்குச் செல்வோம்… நண்பர்களிடத்திலும் பகைத்துக் கொள்வோம்.
அதாவது மிகவும் பழகிய நண்பர்களாக இருந்தாலும் கூட வீட்டிலோ வெளியிலோ வெறுப்பாக இருந்தால் தமாஷாக ஏதாவது சொன்னால் போதும். இரண்டு பேருக்கும் நிஜமாகவே சண்டை கடுமையாகிவிடும்.
சந்தோஷமாக இருக்கும் போது ஒன்றும் இருக்காது. ஆனால் சங்கடமாக இருக்கும் பொழுது… வெறுப்பாக இருக்கும் பொழுது… என்னைக் கிண்டல் செய்கின்றாயா…? என்று இந்த நல்லவன் மீது… உதவி செய்தவர்கள் மீது… சண்டை வந்துவிடும்… பார்க்கலாம்… எதிரியாகவே மாற்றிவிடும்.
ஆகையினால் தமாஷாக… விளையாட்டாக… எப்போதும் நாம் செயல்படுத்தக் கூடாது. அன்புடன் அரவணைத்து ஒரு அர்த்தத்துடன் நாம் சொல்லி
1.நீங்கள் இப்படிச் செய்ததால் தான் தீமையின் விளைவுகள் இப்படி உங்களுக்கு வந்தது
2.அதற்குப் பதிலாக இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னால்
3.அந்த நேரத்தில் நல்ல நிலைகளைக் கொண்டு தீமைகளை மாற்றி அமைக்க முடியும்.
ஆகவே இந்தத் தியானத்தை கடைப்பிடிப்பவர்கள் கேலியாகப் பேசுவதோ கிண்டலாகப் பேசுவதோ அல்லது அடுத்தவர்களைச் சிரிக்க வைப்பதற்காகச் செயல்படுத்துவதோ அந்த வழிக்கே நாம் போகக் கூடாது. கடும் எதிரியாக மாறிவிடும்… சிந்திக்கும் தன்மையை இழக்கச் செய்துவிடும்.
வேதனையாக இருக்கிறார் என்ற சிந்தனை இல்லாதபடி அவர்களை நாம் கேலி செய்வோம்… கிண்டல் செய்வோம்…
1.உடனே அவர்கள் நம் மீது சீறிப்பாய்வார்கள்… கடும் சண்டையாகும்…
2.நம்மை அறியாமலே… நாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் நமக்கு எதிரியாக மாறி வரும்.
3.பின் வேதனையாகி உடலில் கடும் நோயாக மாறி நம்மைத் தீமையின் எல்லைகளுக்குக் கொண்டு சென்றுவிடும்.
இதையெல்லாம் நாம் தெரிந்து… அவைகளை நாம் மாற்றிப் பழகுதல் அவசியம். அதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களிடம் பதிவு செய்கிறோம்.
எந்த நேரத்திலும் இந்த ஆயுதத்தை எடுத்துச் சீராகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பகைமை இல்லாது வேதனை வராது மகிழ்ந்து வாழும் சக்தி பெறுங்கள்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.