தோஷம்

தோஷம்

 

கோடிப் பணம் சம்பாதித்து விட்டோம் என்றால் “நிம்மதியாக இருந்து விடலாம்…” என்று நினைப்பார்கள்.

அவ்வாறு நிம்மதியாக இருக்கும் போது இவர் மிகவும் “நல்லவர்.. என் சொந்தக்காரர்…” என்று எல்லாம் சொல்லிக் கொண்டு நம்மைத் தேடி வருவார்கள்.

என் பையன் சேட்டை செய்கிறான் என்று சொல்வார்கள். பக்கத்தில் இருக்கும் வீட்டுக்காரன் சதா தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறான். நீங்கள் தான் நிவர்த்தி செய்து தர வேண்டும் என்பார்கள்.

இவர் கேட்பார். உடனே அதே உணர்வு இங்கு வரும். இவர் மேலே பாசமாக இருந்து அதையெல்லாம் எடுத்துக் கொள்வார்.

முதலில் இவர் அமைதியாக இருந்தார். செல்வம் எல்லாம் தேடி வந்தது. சம்பாரித்தார்…, நன்றாக இருக்கின்றார்.

இவர் நன்றாக இருப்பதைப் பார்த்து மற்றவர்கள் வந்து அவரவர் கஷ்டங்களையும் எல்லாம் சொல்ல ஆரம்பிக்கின்றார்கள்.

ஏனென்றால் இவர் மற்றவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கிறார். அவர்களுக்கு வேண்டிய உதவியும் செய்தார். அப்புறம் என்ன நடக்கின்றது?

உடலில் இல்லாத வலியெல்லாம் வரும்.
இடுப்பு வலிக்கிறது…
மேல் வலிக்கின்றது…
தலை வலிக்கின்றது…
சர்க்கரைச் சத்து வந்து விட்டது…
இரத்தக் கொதிப்பு வந்து விட்டது என்பார்கள்.

ஏனென்றால் தன்னை நாடி வருபவர்கள் சொல்வதை எல்லாம் இவர் கேட்பார். நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை – இது இந்த மாதிரி வந்துவிடும்.
1.நாம் சுவாசித்த உணர்வுகள் உயிரிலே படுவது நந்தீஸ்வரன்.
2.சிவனான இந்த உடலில் அந்தக் கணக்குள் கூடுகின்றது.

தவறே செய்யவில்லை. உதவி கேட்டு வருகின்றனர். அவர்கள் கஷ்டத்தைச் சொல்கிறார்கள்.

நல்ல மனதுடன் இவர் கேட்கிறார். நுகருகின்றார். உமிழ்நீராக மாறுகின்றது. சாப்பாட்டில் கலக்கிறது. நுரையீரலுக்குப் போகின்றது. கல்லீரலுக்குப் போகின்றது. கிட்னிக்குப் போகின்றது. இருதயத்திற்கு வருகின்றது.

1.பின்னர் இருதயம் பட…படா.. பட…படா… என்று வரும்.
2.அத்தனை பேருடைய கஷ்டத்தையெல்லாம் கேட்டு
3.அதற்குப் பஞ்சாயத்து செய்வதற்குப் போனார்.
4.இந்த உணர்வு பட…படா… என்று வரும்.

கடைசியில் இந்த மாதிரி ஆனவுடனே “சீனி சாப்பிடாதே…, காரத்தைச் சாப்பிடாதே… உப்பைச் சாப்பிடாதே… எண்ணெயைச் சாப்பிடாதே…” என்று டாக்டர்கள் சிபாரிசு செய்வார்கள்.

அவர் தவறு செய்யவில்லை.
1.செல்வம் இருக்கிறது.
2.ஆனால் அமைதி இருக்கின்றதோ…?

நாம் சுவாசித்த பிறருடைய உணர்வுகள் இவ்வாறு தோஷமாக வந்து விடுகின்றது. அதைத் தான் நந்தீஸ்வரா…! என்று காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

நந்தீஸ்வரன் (சுவாசிப்பது)) என்றால்
1.நாம் ஒவ்வோரு நொடியிலும் சுவாசிப்பதை உயிரான ஈசன் உருவாக்கும்.
2.நம் உடலுக்குள் போனவுடன் அதே குணத்தை உருவாக்கும்.

நந்தீஸ்வரன் எதுவாக இருக்க வேண்டுமென்றால்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று நந்தி நமக்குள் சென்று அவன் எப்படித் தீமைகளை நீக்கினானோ அதைப் போல நாமும் நமக்குள் தீமைகளை நீக்க வேண்டும்.

அப்படி நீக்குவதற்கு நாம் எப்படிச் சுவாசிக்க வேண்டும்…?

காலை நான்கு மணிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி… உயிரான ஈசனிடம் நினைவினைச் செலுத்தி…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
2.எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று
3.நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு இப்படிச் சாப்பாடு கொடுக்க வேண்டும்.

அப்பொழுது நம் உடலில் உள்ள அணுக்கள் எல்லாம் உற்சாகம் அடையும். நோயாக மாற்றாது… பகைமையை உருவாக்காது… ஏகாந்தமான உணர்ச்சிகள் வரும்.

இதுதான் தோஷத்தைக் கழிக்கும் முறை…!


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply