சகஜ மார்க்கம்

சகஜ மார்க்கம்

 

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்பது உங்கள் உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் குருவாக இருப்பது உங்கள் உயிரே.

நாம் எண்ணியது அனைத்தையும் நமக்குள் ஊழ்வினையாகப் பதியச் செய்து… மீண்டும் நினைக்கும் போது “அது குருவாக இருந்து” நமக்குள் அந்த ஒவ்வொரு குணமும் செயல்படுகின்றது.

உதாரணமாக குழந்தை மேல் பாசமாக இருக்கின்றேன். அது உயிரிலே பட்ட பின் ஓ… என்று பிரணவமாகிறது. அடுத்து அது ம்… என்று உடலாகிறது.

மீண்டும் அதே குணத்தை நான் எண்ணும் போது அந்தப் பாசத்தால் அவனுக்குச் செய்ய வேண்டிய “குரு நிலையாக” அவனுக்கு வழி காட்டுகிறது.
1.இப்படித்தான் நாம் எண்ணிய குணங்கள் எதுவோ அது குருவாக நமக்குள் இயங்குகிறது.
2.ஆனால் நாம் எதைக் குருவாக ஆக்க வேண்டும்…?

மெய் ஞானிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி அந்த அரும் பெரும் சக்தியாக அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

அந்த உணர்வின் சக்தியைத் தான் இங்கே உபதேசிக்கின்றோம். நீங்கள் கூர்ந்து கவனிக்கும் போது உங்கள் எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவாகிறது.

1.பதிவாக்கியதை நீங்கள் மீண்டும் நினைவு கூறும் போது
2.அந்த ஞானிகள் உணர்வு குருவாக நின்று உங்கள் வாழ்க்கையில் வரும் இடையூறுகளை நீக்கி
3.மெய்ப் பொருள் காணும் நிலையாகப் பெறச் செய்யும்.

ஆகவே…
1.உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் இடையூறு வருகின்றதோ
2.அந்த நேரத்தை எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் ஆற்றலாக
3.அந்தத் தகுதியாக நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

அத்தகைய தகுதியைப் பெறச் செய்ய வேண்டும் என்பதற்குத் தான் அதைக் குருவாக உங்களை ஏங்கச் செய்வது. “சகஜ மார்க்கம்” என்பது இது தான்.

1.ஞானிகளின் உணர்வைக் கண் புலனறிவால் ஏகி அதனின் உணர்வைப் பருகி
2.அந்த விண்ணுலக ஆற்றலைப் பெற்றவர்கள் உணர்வை நமக்குள் எடுக்கப்படும் போது
3.அவர்கள் உணர்வைக் கவர்ந்து கொள்ள முடியும்.

உதாரணமாக ஒரு உயர்ந்த வித்தை நிலத்தில் ஊன்றி அதற்கு நீரை ஊற்றினால் பூமியின் ஈர்ப்புத் துணை கொண்டு காற்றிலிருக்கும் தன் இனச் சக்தியை எடுத்து நல்ல வித்தினைக் கொடுக்கின்றது.

அதைப் போன்று தான் அருள் ஞானிகளின் வித்தை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அது ஜீவன் பெற உங்கள் நினைவை மீண்டும் கூட்டினால் அந்த உணர்வின் சத்தை காற்றிலிருந்து கவர முடியும்.

அவ்வாறு கவர்ந்து அதனின் உணர்வைத் தனக்குள் வளர்த்து வரும் நஞ்சு கொண்ட உணர்வின் அணுவைப் பிளந்து உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி மெய் ஒளி காணும் மெய் சரீரத்தைக் காண முடியும்.

அதைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்தில் தான் இதை நான் (ஞானகுரு) உபதேசிக்கின்றேன்.
1.நிச்சயம் நீங்கள் பெறுவீர்கள்.
2.உங்கள் மூச்சு இருள் சூழ்ந்த நிலைகளை நீக்கும்.

உங்கள் உணர்வுகள் அனைத்தும் நலமும் வளமும் பெற்று உங்கள் சொல்லைக் கேட்டுணர்ந்தோர் அனைவரையும் இருளை நீக்கி மெய்ப் பொருளைக் காணும் உணர்வுகளாக வளர்ச்சி பெறும்.

அதற்காக வேண்டித் தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று நான் (ஞானகுரு) எண்ணுகின்றேன்… தியானிக்கின்றேன். அந்த உணர்வின் தன்மை எனக்குள் ஊழ்வினையாகப் பதிவாகிறது.

அதை மீண்டும் நான் நினைக்கும் போது
1.உங்களுக்கு என்னென்ன உதவி செய்ய வேண்டும்…?
2.நீங்கள் எப்படி மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற வேண்டும்…?
3.உங்களை அறியாது சேர்ந்த இருளை எப்படி நீக்க வேண்டும்…? என்ற
4.அந்த குரு வழிப்படி உங்களுக்கு உபதேசிக்க வேண்டி வருகிறது.

இது எனக்குள் குருவாக வந்து என்னை இப்படி இயக்குகிறது. குருநாதர் அருள் வழிப்படி இதை உபதேசிக்கின்றேன்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply