
துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டுதான் தீமைகளை வடிகட்டுதல் வேண்டும்
உதாரணமாக அழுக்குத் தண்ணீரில் நல்ல நீரைத் தொடர்ந்து ஊற்றிக் கொண்டே இருந்தால் என்ன ஆகும்…? அழுக்கு நீர் குறைந்து கடைசியில் காணாமல் போய்விடும்.
அதே போல் நல்ல தண்ணீரில் அழுக்கு நீரை ஊற்றிக் கொண்டே இருந்தால் என்ன ஆகும்…? அது அழுக்காக மாறும். இப்படி இது இரண்டும் மாறி மாறி எது அதிகமோ அதன் வழி தான் செயல்படும்.
இதைத் தான் குருநாதர் எம்மை (ஞானகுரு) சாக்கடை அருகே அமரச் செய்து பன்றியின் செயலாக்கங்களையும் உணர்த்தி “கடவுள் என்றால் யார்…?” என்று காட்டுகின்றார்.
1.உன் உயிரே உள்நின்று இயக்குகின்றது… அது கடவுள்…!
2.நீ நுகர்ந்த உணர்வே உள்நின்று… அதுவும் கடவுளாக இயக்குகின்றது
3.நுகர்ந்த உணர்வு உள்நின்று இயக்கும் போது அதுவும் கடவுள் தான்.
ஆகவே சுவாசிக்கும் உணர்வின் தன்மை உள்நின்று உணர்த்துவது… இந்த “உயிர் தான் கடவுள்…” என்று உணர்ந்தபின்
1.ஆறாவது அறிவு கொண்டு வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கத் தெரியவில்லை என்றால்
2.நுகர்ந்த உணர்வின் வலு எதுவோ அதன் வழிதான் உன் வாழ்க்கை வழி நடக்கும்…! என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
நேற்றைய செயலாக இன்று நாம் மனிதச் சரீரம் பெற்றிருந்தாலும் இன்றைய செயலால் தான் நாளைய சரீரம் உருவாகிறது என்ற பேருண்மையைச் சாக்கடையில் அமரச் செய்து எனக்கு உணர்த்தினார் குருநாதர்.
இதை எல்லாம் குரு எமக்குச் சொல்லச் சொல்ல… அவர் உபதேசம் கொடுக்கக் கொடுக்க… அங்கே எத்தனையோ நாற்றம் இருந்தாலும்
1.நாற்றத்தையே காணோம்… எங்கேயோ போய்விட்டது
2.சாக்கடை அருகில் அமர்ந்து இருந்தாலும் எந்த நாற்றமும் எனக்கு வரவில்லை
3.எங்கேயோ அழைத்துச் செல்கின்ற உணர்வு தான் இருந்தது.
அப்பொழுதுதான் வான மண்டலத்தின் உணர்வுகளை எடுக்கச் செய்கிறார் குருநாதர்.
வானிலே ஒன்றை ஒன்று வென்று ஒன்றின் உணர்வு ஒன்றுக்குள் ஆகி… விஷத்தின் தன்மை தணிந்து… “ஞானத்தின் உணர்வு ஒளியாக எப்படி மாறுகின்றது…?” என்று வான மண்டலத்தைக் காட்டுகின்றார் குருநாதர்.
இந்தப் பிரபஞ்சம் எப்படியோ அப்படித்தான் உன் உயிர் உன் உடலுக்குள்ளும் பிரபஞ்சத்தைப் போன்று உருவாக்குகிறது. அந்தந்த உறுப்புகளாக உருவாகிறது.
நாம் நுகர்ந்த (சுவாசிக்கும்) உணர்வுகள் உடல் உறுப்புகளில் கலக்கப்பட்டாலும்
1.தீமை என்று வந்தால் அதை நீக்கும்… அதை வடிகட்டும் தன்மை நமக்குள் இல்லை என்றால்
2.மீண்டும் தேய்பிறையாகி மனிதனல்லாத பிறவிக்குப் போய் விடுவோம் என்று காட்டுகின்றார்.
ஆனால் அந்தத் தீமைகளை வடிகட்ட வேண்டும் என்றால் குருவின் பலம் வேண்டும். குருவின் பலம் பெற வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை இங்கே சேர்க்க வேண்டும்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் தன்மை கொண்டுதான் வடிகட்டுதல் வேண்டும் என்று உணர்த்துகின்றார்.
ஆகவே நம் உயிரை ஈசனாக மதித்து… உயிரைக் குருவாக எண்ணி… ஆறாவது அறிவின் துணை கொண்டு நாம் எடுக்கும் அந்த அருள் ஒளியைக் குருவாக்கினால் இருளை நீக்கிப் பொருள் காணும் சக்தியை நாம் ஒவ்வொருவரும் பெற முடியும்.
அத்தகைய நிலையைக் காட்டுவதற்குத் தான் குருநாதர் அடிக்கடி எலெக்ட்ரிக் போஸ்டில்.. கல்லைக் கொண்டு தட்டிக் கொண்டே இருப்பார்.
ஏன் சாமி…? போஸ்டில் கல்லைக் கொண்டு தட்டுகிறீர்கள் என்று கேட்டேன்.
எவன்டா கேட்டான்…? நீ தான்டா கேட்கின்றாய்…! என்பார். நான் தட்டுகிறேன்… ஆனால் ஏன்…? என்று நீ கேட்கிறாய்.
நான் டெலிஃபோன் செய்கிறேன்… தந்தி கொடுக்கின்றேன்…! “ஆண்டவனுக்கு…” என்பார்.
அதாவது தட்டும் ஓசை என்பது… உயர்ந்த உணர்வின் தன்மை கொண்டு ஒலி ஆக்கப்படும் போது
1.காதிலே படுகிறது… உணர்வு ஒளியாகிறது.
2.அந்த உணர்வின் தன்மை இருளை நீக்குகிறது
3.எல்லோருக்கும் இந்த ஒளியான உணர்வு கிடைக்க வேண்டும் என்று நான் தட்டுகின்றேன்…! என்றார்.
போஸ்டில் (பைத்தியம் போல்) தட்டுவதை வைத்து இப்படியெல்லாம் நொடிக்கு நொடி எனக்கு உபதேசித்தார் குருநாதர்…!
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.