நாம் உடலுடன் இரண்டறக் கலந்த தீமைகளை நீக்க வேண்டுமென்றால் எதிலிருந்து… எப்படி நீக்க முடியும்…?

நாம் உடலுடன் இரண்டறக் கலந்த தீமைகளை நீக்க வேண்டுமென்றால் எதிலிருந்து… எப்படி நீக்க முடியும்…?

 

1.ஈசனால் உருவாக்கப்பட்ட நம் உடலில் தீமையான உணர்வுகள் ஊடுருவி
2.தீமையின் உணர்வுகள் உடலிலே வளர்ந்து விட்டா;ல்
3.உயிரால் உருவாக்கப்பட்ட இந்த ஈசனுக்கே நாம் தீங்கு செய்வது போன்று ஆகும்.

தங்கத்தில் திரவகத்தை ஊற்றித் தங்கதைப் பரிசுத்தப்படுத்துவது போன்று உங்களை அறியாது நல்ல உணர்வுடன் இரண்டற இணைந்த தீமையான உணர்வுகளை அகற்ற இப்பொழுது உங்களுக்குக் கொடுக்கும் இந்தச் சக்தியின் துணை கொண்டு…
1.நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவீர்கள் என்றால்
2.உங்களை அறியாது சேர்ந்த பாவ வினைகளோ சாப வினைகளோ தீய வினைகளோ
3.இவை அனைத்தும் அகல உங்கள் எண்ணம் உங்களுக்குள் உதவும்.

இப்படி… அறியாது சேர்ந்த தீமைகளை நீக்க… அந்தத் தீமைகளை நீக்கிய அருள் மகரிஷிகளின் உணர்வின் சக்தியை… சப்தரிஷி மண்டலத்தில் விளைந்த உணர்வுகள் இங்கே முன்னாடி படர்ந்திருப்பதை நீங்கள் கவருவதற்கே இதை உபதேசிப்பது.

இதைப் பதிவு செய்து கொண்டபின் நீங்கள் “எப்போது எண்ணினாலும்…” அந்தச் சக்தியை எளிதில் பெற முடியும்.

உதாரணமாக சாதாரண ஆண்டனா மூலம் லோக்கலில் ஒளிபரப்பு செய்வதை டி.வி. அதை ஈர்த்து நமக்கு முன் படமாகக் காட்டுகின்றது… நாம் காணுகின்றோம்.

இதைப் போல சப்தரிஷிகளின் அருளாற்றல்களை… சக்தி வாய்ந்த நிலையாக உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கிறோம். அப்பொழுது உங்கள் கண் சக்தி வாய்ந்த ஆண்டனாவாக மாறுகின்றது.

இதை ஏன் சொல்கிறோம் என்றால்… அன்பான குணமோ கோப குணமோ தீய குணமோ உங்களுக்குள் ஏற்கனவே பதிவானதை மீண்டும் எண்ணினால் அது கண்ணின் நினைவிற்கே வருகின்றது.

அப்பொழுது அந்த நினைவின் ஆற்றலை யாருடன் பகைமை கொண்டோமோ யாருடன் அன்பு கொண்டோமோ யாருடன் பரிவு கொண்டோமோ யாருடன் பண்பு கொண்டோமோ இதைக் கவர்ந்து நாம் அறியவும் முடிகின்றது.

ஆனால் தீமைகளை அகற்றிய அருள் ஞானியின் உணர்வை உங்களைப் பெறச் செய்யும்போது…
1.சக்தி வாய்ந்த ஆண்டனாவாக உங்கள் கண் மாறுகின்றது.
2.அதனின் துணை கொண்டு நமக்கு முன் படர்ந்திருக்கும் மகரிஷியின் உணர்வை நுகரப்படும் போது நம் ஆன்மாவாக அது மாற்றுகின்றது
3.பின் அந்தத் தீமையின் உணர்வை அகற்றும் நிலையாக அது நமக்குள் நிலை பெறுகின்றது.

அந்தச் சக்தியைப் பெறுவதற்குத் தான் இப்பொழுது கூட்டுத் தியானத்தில் பலருடைய உணர்வையும் ஒன்றாக இணைத்து… ஒரு நிலை கொண்டதாக உருவாக்கி.. அந்த உணர்வின் சக்தியை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

இது சக்தி வாய்ந்த ஆண்டனாவிற்குப் பொருந்தும்…!

ஆகவே இதனின் துணை கொண்டு உங்கள் முதாதையரை எளிதில் விண் செலுத்தவும் முடிகின்றது. ஏனென்றால் மூதாதையரின் உணர்வு தான் உங்கள் உடலே…!

அவர்களை விண் செலுத்திய பின் ஒளியின் சரீரமாக நிலை கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்தை எண்ணும் போதெல்லாம்… அந்த உணர்வின் ஆற்றல் இங்கே பதிந்திருக்கும்… படர்ந்திருக்கும்… பேரருள் பேரொளி உணர்வின் தன்மையை எளிதில் நுகர முடிகின்றது.

1.ஆகவே நீங்கள் செய்த இந்தச் சக்தியினை விரயமாக்காது
2.ஒவ்வொரு நாளும் இரவிலே தூங்கச் செல்லும் போதெல்லாம் சப்தரிஷி மண்டலங்களை எண்ணி எடுத்து
3.தங்கத்தில் திரவகத்தை ஊற்றிச் செம்பையும் வெள்ளியையும் நீக்குவது போல்
4.மேலுக்குக் (உடல்) குளிப்பது போல் உங்கள் உணர்வைச் சுத்தப்படுத்துங்கள்.

தூங்கச் சொல்லும்போது சப்தரிஷிகளின் அருள்சக்தி நான் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று ஏங்கி அந்தச் சப்தரிஷிகளை எண்ணி கண்ணைத் திறந்தே சிறிது நேரம் ஏங்கி எடுங்கள்.

பின்.. கண்ணை மூடி சப்தரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா பெற வேண்டுமென்று நூறு முறையாவது ஏங்கி எடுங்கள். எவ்வளவு தூரம் இதை எண்ணி எடுக்கின்றீர்களோ அவ்வளவுக்கு லாபம் உங்களுக்கு….!

ஒரு அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீர் ஊற்றும் போது அழுக்கு நீர் குறைந்து கொண்டே வரும். செம்பும் தழும்பாது. ஞானியரின் உணர்வை உங்களுக்குள் சேர்க்கச் சேர்க்கச் சேர்க்க… அது பெருகப் பெருக அந்தத் தீமைகள் தணியும்.

உதாரணமாக ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அது குடிப்போரை மடியச் செய்கின்றது.
1.இதில் பல ஆயிரம் குடம் பாலை ஊற்றும் போது
2.விஷத்தின் தன்மை சிறுகச் சிறுகக் குறைந்து
3.அந்தப் பாலிற்கே வீரிய சக்தியாக இந்த விஷத் தன்மை அமைகின்றது.

இதைப் போல் நமக்குள் விஷம் கொண்ட உணர்வுகள் நமக்குள் பல இருப்பினும்…
1.நஞ்சினை வென்ற அருள் ஞானியின் உணர்வை நாம் நூறு முறையாவது எடுத்துக் கொள்வோம் என்றால்
2.இந்த உணர்வுகள் நமக்குள் ஒரு தூய்மைப்படுத்தும் சக்தியாக மாறும்.
3.நம் நினைவின் ஆற்றலும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடனே ஒன்றுகின்றது.

அதைப் பற்றுடன் பற்றும் நிலையும்… அந்த அருள் ஞான சக்தியை நமக்குள் பற்றுடன் பற்றச் செய்வதற்கும் தான் இதைச் சொல்கிறோம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply