
நசுக்கினாலே உருவம் தெரியாது போகும் கொசுவிடம் இருக்கும் “வலுவான ஆற்றல்”
கொசுத் தொல்லையாக இருக்கின்றது..! என்று கொசுக்களை எல்லாம் கொல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அது எத்தகைய வேதனைப்படுகின்றதோ அந்த வேதனை உணர்வுகள் கொசுவின் உயிரான்மாவுடன் கலக்கின்றது.
“கொன்று விட்டோம்…!” என்று நாம் எண்ணும் போது எந்த எண்ணம் கொண்டு கொன்றோமோ கொசுவின் உயிர்கள் நம் உடலுக்குள் வருகின்றது.
உதாரணமாக ஒரு கொசு நம் மீது அமர்ந்து அது இரத்தத்தை குடிக்கும் போது உற்றுப் பார்த்து “அதை நசுக்க வேண்டும்…” என்று மட்டும் நீங்கள் எண்ணிப் பாருங்கள்.
நம் கை கொண்டு அடிப்பதற்கு முன்னாடி அந்தக் கொசு பறந்துவிடும். மனிதனை ஒத்த அறிவு அதற்கு இல்லை என்றாலும்
1.மனிதனின் அறிவின் ஞானத்தைப் பெற்ற “இரத்தத்தை” (மனித உணர்வுகள் கலந்த) அது புசிக்கும் போது
2.நாம் எண்ணும் உணர்வுகள் அதற்குள் அந்த உயிர் அதை இயக்கிக் காட்டும்
3.ஆகவே அது தப்பித்துக் கொள்ளும்… இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.
கொசு நம்மைக் கடிக்கும்போது அதில் உள்ள விஷத்தால் நமக்குள் அரிப்பும் தடிப்பும் ஏற்படுகின்றது. ஆயிரம் கொசுக்களை நாம் நசுக்குகின்றோம் அல்லது கொல்கிறோம் என்றால் அந்தத் தடிப்புகள் உடல் முழுவதும் நிச்சயம் வரும்.
சில பேர் அமாவாசை அன்று உடலெல்லாம் தடிப்பு வருகின்றது… மேல் எல்லாம் அரிப்பு வருகின்றது என்று கூடச் சொல்வார்கள். இது எல்லாம் இறந்த அந்தக் கொசுக்களின் நஞ்சு கலந்த நிலைகள் உடலுக்குள் சென்ற நிலையில் இயற்கையின் செயலாக அப்படி உருப்பெறும்.
யானையின் தோல் மிகவும் முரடானது. ஈட்டியால் குத்தினாலும் உடம்புக்குள் இறங்குவது கொஞ்சம் கடினம். ஊசியால் குத்தினாலும் ஊசி வளையுமே தவிர ஊசிக்கு வலு இல்லை என்று கூடச் சொல்லலாம். யானையின் தோலுக்கு அவ்வளவு சக்தி உண்டு.
ஆனால் கொசுவைக் கையால் நசுக்கி விட்டால் அதனுடைய உருவத்தையே நாம் காண முடியாது. அப்படி நசுக்கப்படும் நிலை பெற்றாலும் “தனது மூக்கால்…” ஊசி போல யானையின் தோலுக்குள் ஊடுருவி அதனின் இரத்தத்தைக் குடித்துவிடும்.
கொசுவிற்கு அவ்வளவு பெரிய வலு உண்டு…!
கொசுவின் முகத் துவாரத்தில் இருக்கும் நஞ்சின் தன்மையை அது பாய்ச்சியபின் அந்த யானையின் தோல் விலகுகின்றது. கொசு தன் முகவாயை உள் செலுத்துகின்றது.
உள் செலுத்தி அது தன் மணத்தால் இரத்த நாளங்கள் ஓடும் பாகத்தை நுகர்ந்தறிந்து அந்த இரத்தத்தைக் குடிக்கின்றது.
நாம் நினைக்கின்றோம் யானைக்குத் தான் வலு என்று. யானையைக் காட்டிலும் கொசு மிகச் சிறிதாக இருப்பினும் அதனுடைய வலுவைக் காட்டிலும் அதைப் பிளந்து அது உணவாக உட்கொள்ளும் திறன் அதற்கு உண்டு. கொசுவை எளிதில் மதிக்க வேண்டாம்…!
ஒரு சமயம் காட்டிற்குள் கொசு தாக்காமல் இருப்பதற்காக சில உணர்வலைகளைப் பரப்பச் செய்தார் குருநாதர். அப்பொழுது என் அருகில் கொசுக்கள் வரவில்லை.
காட்டுக் கொசுவிற்கு வலிமை ஜாஸ்தி. மற்ற மிருகங்களின் இரத்தத்தைக் குடித்துப் பழகி இருப்பதனால் மனிதனக் கடித்தால் மிகக் கடுமையான வேதனைகள் வரும்.
குருநாதர் காட்டிற்குள் என்னை (ஞானகுரு) அழைத்துச் சென்றார். முதலிலே அவர் சில் அலைகளைப் பாய்ச்சி விட்டார். அதனால் நான் படுத்து உறங்கும்போது அந்தக் கொசுக்கள் கடிக்காதபடி ஆனந்தமாகத் தூங்கினேன்.
சிறிது நேரத்தில் குருநாதர் என்ன செய்தார்…? அவர் செயலைக் காட்டி விட்டார்…!
1.கொசுக்கள் வராதபடி செய்த அலைகளை எடுத்து விட்டார்.
2.எல்லாக் கொசுக்களும் ஏகக் காலத்தில் என்னைக் கடிக்கத் தொடங்குகின்றது.
என் இரத்தத்தைப் பூராமே அது குடிக்கின்றது. என் உடல் முழுவதும் அரிப்பு எடுத்து விட்டது. என்னால் வேதனை தாங்க முடியவில்லை. கல்லை வைத்துத் தேய்க்கின்றேன்.
இரத்தம் ஒழுகினாலும் தேய்க்கத் தேய்க்க அதன் மேல் ஆனந்தம் வருகின்றது. அரிப்பின் தன்மை தாங்காது நகத்தால் சுரண்டினாலும் அதற்கு அவ்வளவு ஆனந்தம் வருகின்றது.
அப்பொழுது தான் குருநாதர் சொல்கிறார்…! நீ வலு பெற்றவனாக இருக்கின்றாய்.. இருந்தாலும் அந்தக் கொசுக்களின் செயலாக்கங்கள் எவ்வாறு இருக்கின்றது என்று பார்…!
அதே சமயம் அதை எல்லாம் நீ தேய்த்துக் கொல்லும்போது அதனுடன் கலந்த விஷத்தின் உணர்வின் தன்மை உன் உடலுக்குள் எவ்வாறு புகுகின்றது…?
உடலில் உள்ள இரத்தத்துடன் கலந்தபின் அதுவும் (கொசுவின் உயிர்) கலந்து அது குடி கொண்டு இருக்கும் காலத்தில் இன் இரத்தத்தைத் தனதாக மாற்றி… அது எப்படி ஜீவ அணுவாக மாறுகின்றது…? என்று காட்டுகின்றார்.
ஒரு தட்டாம்பூச்சி தன் உடலில் விளையும் கருவின் தன்மையை அது மற்ற தாவர இனங்களில் இட்டுவிட்டால் அதனின் சத்தை இது நுகர்ந்து அதனின் உணர்வின் செயலாகப் பட்டாம் பூச்சியாக அது விளையும்.
1.தாவர இனத்தின் சத்தை எடுத்து அந்தப் பூச்சி உருவாவது போல…
2.நம் உடலுக்குள் வந்த இந்தக் கொசுவின் உயிரான்மா
3.அது எத்தகைய நிலையைச் செயல்படுத்தி தன் உணர்வின் நிலைகளை பரப்பி
3.இரத்தத்தையே மாற்றி அது அதன் உணவாக எப்படி எடுத்துக் கொள்கின்றது…? என்ற நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றார்.
இந்த உணர்வின் தன்மை மாற்றம் அடையும் போது கொசு மனிதனுக்குள் மனிதனாக உருப்பெறும் அணுவாக மாறுகின்றது.
முதலில் நஞ்சைப் பாய்ச்சுகின்றது. தன் உணவைத் தேடுகின்றது. நம் உடலில் உள்ள உணர்வின் தன்மை அதனின் உணர்வுகள் மாற்றமடைந்து மனிதனில் உருவாகும் கருவாக மாறுகின்றது.
இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்…!
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.