தன்னைத் தான் அறியும் (அகத்தியம்) நிலை பற்றிய சித்தர் பாடல் – 4
நடுவு நில்லாது இவ்வுலகம் சரிந்தது
கெடுகின்றது எம்பெருமானென்ன ஈசன்
நடுவுள அங்கி அகத்தியா நீபோய்
முடுகிய வையத்து முன்னிர் என்றேனே
மனித உடல் பெற்ற நிலையில் உயிரான ஈசன் இந்த உடலில் இல்லை என்றால் இந்த உடல் என்ற உலகம் நீசமாகின்றது. மண்ணுடன் மண்ணாகப் போய்விடுகின்றது.
அது மட்டுமல்லாது உயிரே ஈசனாக இயக்கிக் கொண்டிருக்கின்றான் என்ற மெய்யை நாம் அறியாது
1.உடலுக்காகவே வாழும் நிலையில்
2.நுகர்ந்த உணர்வின் இயக்கமாக வாழும் வாழ்க்கையில் எந்த நன்மையும் இல்லை.
அதாவது
1.தன்னையும் தான் அறியாது
2.தனக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றலையும் அறிய முயற்சி செய்யாது
3.உண்டு கழித்து உறங்கி இறந்து… மீண்டும் பிறந்து வாழும் சுழற்சியிலேயே மீண்டும் மீண்டும் சுழன்று வரும் பொழுது
4.பரிணாம வளர்ச்சியில் நம்மை முழுமுதல் கடவுளாக உருவாக்கிய ஈசனின் சக்தியை
5.சரியான வழியில் பயன்படுத்தாது நாம் வீணாக்கிவிடுகின்றோம்.
வீணாக்குதல் என்றால் நாம் சுவாசிக்கும் உணர்வுகள் உடலிலே விளைந்து அதனின் சத்தை வடித்து உயிர் தன்னுடைய அணைப்பில் உயிராத்மாவாக ஆக்கிக் கொண்டு அதற்குத் தக்க தான் அடுத்த உடலை உருவாக்குகின்றது.
உயிராத்மாவில் நல்ல மணங்கள் இருந்தால் தான் அடுத்து நல்ல உடல் பெற முடியும். சலிப்பையும் சஞ்சலத்தையும் விரக்தியையும் வேதனையும் வாழ்ந்த வாழ்க்கையில் எந்த நிறைவையும் அடையவில்லை என்றால் அடுத்து நாம் மனித உடலைக் கூடப் பெற முடியாது. விஷத் தன்மை கொண்ட உயிரினமாகத்தான் பெற முடியும்.
உடலில் வாழும் காலத்தில்
1.மனிதனுக்கு அடுத்த உயர்ந்த நிலையான ஞானத்தின் வழியில் சென்று
2.மெய் ஞானியாக வளர்ந்து ஒளியின் சுடராக ஆத்ம ஜோதியாகி
3.விண்ணிலே அழியாத நிலையில் ஒளிரும் நட்சத்திரமாக ஆகும் தகுதி பெற்றிருக்கிறோம் என்பதை உணர்ந்து வாழ வேண்டும்
ஏனென்றால் நம்மைப் போன்று மனிதனாக உருவான நிலையில்
தன்னை அறிந்து
அகத்தை அறிந்து
அணுவை அறிந்து
அண்டத்தை அறிந்து
ஆதிசக்தியின் இயக்கத்தை அறிந்த அகஸ்தியன் இன்று விண்ணிலே துருவ நட்சத்திரமாக உள்ளான், அகத்தை அறிந்துணர்ந்து அகத்தின் இயல்பை (அவன்) இயம்பியதே அகத்தியம்…!
அவனே நம் பூமியையும் முன்னொரு காலத்தில் சமப்படுத்தினான். விண் சென்ற முதல் மனிதனும் அவனே. இன்று மெய் ஞானத்தின் தத்துவத்தை மனிதனுக்கு வழி காட்டிக் கொண்டிருப்பவனும் அவனே.
நம்முடைய மூதாதையான ஆதியிலே தோன்றிய அந்த அகஸ்தியன் இந்த உலகுக்கே வழிகாட்டியாக ஒரு முன்னோடியாகத் திகழ்வது போல் நாம் ஒவ்வொருவருமே உலகுக்கு எடுத்துக் காட்டாக வளர வேண்டும்.