
மனதை அழகுபடுத்தி மகிழ்ச்சியாக வாழ்வது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!
ஒவ்வொரு மனிதனும் தன் நிலை உணர்ந்து வாழ வேண்டும். நாம் சந்தோஷ நிலை கொண்டு இருக்கும் பொழுது நாம் உண்ணும் உணவு நல்ல மணமாகவும் நல்ல சுவையும் கூடியதாக நம் நாவிற்கும் மனதிற்கும் தெரிகிறது.
அந்நிலையில் உண்ணும் உணவு நம் உடம்பிற்கு “அமிழ்தமாக… அரும் பெரும் சுவை கூடியதாக… நம் உள்ளமும் உடலும் ஏற்கிறது…!”
ஆனால் நாம் நமக்குள் பல கலக்கங்கள் பல கஷ்ட நிலைகள் சோர்ந்த நிலை கொண்டு மனச் சங்கடத்துடன் உள்ள பொழுது நாம் உண்ணும் உணவெல்லாம் நம் உடலும் மனமும் பெரும் சங்கடத்துடனே ஏற்று அதிலுள்ள சுவையும் நம் நாவிற்கு ஏற்றுக் கொள்ளும் நிலை இல்லாமல் நம் உடல் நிலையும் அதனால் பாதிக்கப்படுகின்றது. நோய் வரக் காரணமாகின்றது.
1.ஒன்று போல் உணவை எல்லோரும் உண்டாலும்
2.அவரவர்கள் நம் மன நிலையைப் பொறுத்துத்தான் உடல் அவ்வாகாரத்தை எடுத்து நம் ஆத்மாவிற்கு அளிக்கிறது.
அதைப் போன்று தான் ஒவ்வொருவரும் தன் சுவாச நிலையும் எண்ண அலைகளும் கொண்டுதான் இவ்வுயிர் இவ்வுடலை இயக்கி வாழ்கின்றோம்.
எப்படி ஒரு பொருளையோ நாம் சமைக்கும் சமையலையோ நம் எண்ணத்தை அதன் மேல் செலுத்திப் பக்குவப்படுத்திப் பதம் பார்த்துச் செய்கின்றோமோ
1.ஏனென்றால் எந்த ஒரு சமையலையும் செய்யும் பொழுது
2.அதன் பதம் அறிந்து செய்தால்தான் அது முழுமை அடைகிறது.
அதைப் போலத்தான் இவ்வுடல் என்னும் கூட்டை
1.இவ்வுள்ளத்தினாலும் இச்சுவாசத்தினாலும் தான் இவ்வுடலுக்குப் பதம் அறிந்து
2.சந்தோஷ நிலை – கோப நிலை என்ற நிலையில் நாம் நம்மைச் சமமாக நிலைப்படுத்திக் கொண்டு
3.இவ்வுடலையே பக்குவப்படுத்தி பதம் அறிந்து
4.நாம் நம் உயிராத்மாவை வணங்கி வாழும் நிலைக்கு நம்மை நாம் பதப்படுத்தி வாழ்ந்திட வேண்டுமப்பா.
நம்மில் நம்மைச் சுற்றி இருக்கும் பல அணுக்களின் உந்தலுக்கு நாம் அடிபணிந்து வாழ்ந்திடாமல் “நமக்கு நாம் அடிபணிந்து வாழ வேண்டும்…!”
1.நாம் எடுத்திடும் சுவாச நிலைகள் எல்லாம் நம் உடலுக்கு எந்தெந்த நிலையில் நாம் எடுக்கின்றோமோ
2.அதைக் கொண்டுதான் நன்மையும் தீமையும் அமைகின்றது என்பதனை உணர்ந்து
3.நம்மை நாம் பக்குவப்படுத்திச் சமப்படுத்தி வாழ வேண்டும்.
இப்பாட முறை கொண்டு நீங்கள் பகுத்தறிந்து உணர்ந்து நமக்கு முன் உபதேசித்த பல மெய் ஞானிகளின் அருள் வழியில் நடந்து ஏற்றமுடன் நல் எண்ணம் கொண்டே பதப்படுத்தி வாழ்ந்திடுங்கள் பக்குவ நிலையில்.
1.நாம் வேறல்ல இவ்வுலகம் வேறல்ல
2.இவ்வுலகனைத்திலும் உள்ள உயிரணுக்கள் வேறல்ல.
3.அச்சக்தியின் அருளில் உருளும் இவ்வுலகத்தில் உதித்துள்ள உயிரணுக்கள் எல்லாமே ஒரே சொந்தம் தான்.
நம்மை நாம் பிரித்து வாழ வேண்டியதில்லை. நம்முள் கலந்ததுதான் எல்லாமே. அந்த எல்லாவற்றிலும் கலந்துள்ளவர் தாம் நாமுமே.
“நான்…!” என்ற தனி நிலை இல்லாத நாம் இவ்வுருளுகின்ற உலகுடன் உலகமாகச் சுற்றி நாம் பெற்ற அருளை நம்முள் ஈர்த்து வாழ்ந்திடுவோம் வாழ்ந்திடுவோம்.
நல் மனத்துடனும் அன்பு கொண்டு வாழ்ந்திடுவோம்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.