மனப்பாடம் செய்துவிட்டு வந்து யாம் உபதேசிக்கவில்லை…!

gnana pokisham 2

மனப்பாடம் செய்துவிட்டு வந்து யாம் உபதேசிக்கவில்லை…! (ஞானகுரு)

 

தினசரி ஞானிகளைப் பற்றி யாம் (ஞானகுரு) உபதேசம் சொல்லிக் கொண்டே வந்தாலும்… அதைக் கேட்ட பின் “உபதேசம் மிகவும் நன்றாக இருந்தது…!” என்று ஒரே வரியில் சொல்கிறவர்களும் உண்டு.

நேற்று சொன்னதைத்தான் இன்றைக்கும் சொல்கிறார். திருப்பித் திருப்பி அதையே தான் சொல்கிறார் என்று சொல்பவர்களும் உண்டு.

ஆனால் நேற்று என்ன சொன்னார்…? அதற்கு அடுத்த நிலை என்ன சொன்னார்…? என்று கேட்டோம் என்றால் முழிக்கிறார்கள். ஏனென்றால் ஞானிகளைப் பற்றி உபதேசம் கொடுப்பது என்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் யாம் (ஞானகுரு) உபதேசம் கொடுக்கும் போது
1.இங்கே எதையுமே நான் முதலில் நினைத்துக் கொண்டு வந்து உபதேசிப்பது இல்லை…!
2.மனப்பாடம் செய்தோ அல்லது மனதில் உருப் போட்டுக் கொண்டு வந்தோ உபதேசிக்கவில்லை..!
3.யார் யார் முன்னாடி வந்து “எதை அறிய வேண்டும்…!” என்று விரும்புகிறார்களோ
4.அதன் அடிப்படை ஆதாரமாக வைத்துத்தான் அந்த உபதேசமே அன்றைக்கு அங்கே வரும்.

ஒரு நூறு பேர் நினைத்திருக்கிறார்கள் என்றால் அந்த நூறு பேருக்குமே (விடைகள்) கிடைக்கும் அளவிற்குத்தான் எம்முடைய இந்த உபதேசம் இருக்கும்.
1.நான் நினைத்துக் கொண்டு வந்தேன்… சாமி சொல்லி விட்டார்…
2.நான் எதைக் கேட்க வேண்டும் என்று வந்தேனோ.. அதைச் சொல்லி விட்டார்.. என்ற
3.இந்த உணர்வு அந்த அத்தனை பேருக்கும் வருகிறது.

அத்தகைய நினைவு வந்தாலும் கூட ஞானிகள் உணர்வை ஆழமாகப் பதித்துக் கொண்ட நிலையில்
1.இந்த வாழ்க்கையை எவ்வாறு வழி நடத்த வேண்டும்…?
2.இந்தக் காற்றில் ஞானிகளின் சக்திகள் எவ்வளவு கலந்து இருக்கிறது…?
3.காற்றில் கலந்துள்ள ஞானிகளின் அருள் உணர்வுகளை எப்படிக் கவர வேண்டும்…?
4.அதை நமக்குள் சேர்க்கும் வன்மை (வலிமை) எப்படி நினைவுபடுத்த வேண்டும்…? என்பதை எல்லாம் அறிந்து கொள்வது ரொம்ப நல்லது.

உபதேசத்தைக் கேட்டுப் படித்துணர்ந்த பின் நாம் எந்தளவுக்கு மீண்டும் அதை உயர்த்திக் கொள்ள வேண்டும்…? அதை எப்படி வலு பெறச் செய்ய வேண்டும்…? ஒவ்வொரு நாளும் அருள் ஞானத்தை எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும்..? என்பதற்குத்தான் வினாக்களை எழுப்பச் சொல்கின்றோம்.

சாமியிடம் வினாக்களைக் கேட்கின்றோமே என்று எண்ண வேண்டாம். இது வரையிலும் பல துறைகளிலேயும் பல முறைகளிலேயும் உபதேசத்தைக் கொடுத்து இருக்கிறோம்.

இதில் நீங்கள் எந்த அளவுக்குப் பதித்து வைத்திருக்கின்றீர்கள்…? உங்கள் மனோநிலை என்ன? அதிலிருந்து நீங்கள் எதை அறிந்திருக்கின்றீர்கள்…? எதை அறிய விரும்புகின்றீர்கள் என்பதற்காக வேண்டித் தான் கேள்விகளைக் கேட்கச் சொல்வது.

ஒருவர் வினா எழுப்பினால் மற்றவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்க வேண்டும். வினாக்களை எழுப்பும் போது ஒருவர் கேட்கும் வினாவை அனைவரும் அதைப் பகிர்ந்து கொள்ள இது உதவியாக இருக்கும். (விருப்பமுள்ளவர்கள் கேட்கலாம்…!)


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply