
தொழில் செய்யும் இடங்களில் டென்சன் (TENSION) ஆகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்…?
தொழிலுக்கு அதிபதியாக நான் இருக்கிறேன். தொழில் நடக்கும் இடங்களைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வருகின்றேன் என்று வைத்துக் கொள்வோம்.
என்னுடைய உணர்வின் வேகத்தால் அங்கே வேலை பார்ப்பவர்களைக் கடுமையாகப் பார்க்கிறேன். என் சொல் அங்கே அவர்களிடம் படுகின்றது.
அந்தத் தொழிலாளியின் செவியிலே பட்டபின் என்னை உற்றுப் பார்ப்பான்.
1.உற்றுப் பார்க்கப்படும் போது நான் எந்த வெறுப்பின் நிலை அடைந்தேனோ
2.அது அவனிடம் பட்டு அடுத்து முதலாளி என்ற அச்ச உணர்வுகள் இருப்பின்
3.இந்த உணர்வின் தன்மை அது அவன் செயலைப் பலவீனப்படுத்தும் நிலையாகவே அங்கு வருகின்றது.
முதலாளி வந்து பார்த்துவிட்டுச் சென்றார் என்று அந்தத் தொழிலாளி எண்ணினாலும் அடுத்த கணம் நகர்ந்தபின்
1.நான் எப்படி வெறுப்பின் தன்மை கொண்டு இருந்தேனோ
2.அதே வெறுப்பான உணர்வுகள் கொண்டு அவன் இயந்திரத்திலோ மற்றதிலோ கணக்கிலேயோ உற்றுப் பார்க்கப்படும் போது
3.இவன் உணர்வுக்கொப்பதான் கண்ணின் புலனறிவு ஓடும்.
ஒரு தறியை நெய்கிறான் என்றால் அந்த இயந்திரத்திலே இருக்கும் நாடா துரித நிலைகளில் ஓடினாலும் அதற்குள்ளும் ஒரு ஈர்ப்பின் தன்மை உண்டு.
இயந்திரமோ நாடாவோ எல்லாவற்றுக்குள்ளும் காந்தப் புலன் உண்டு. எந்த உணர்வின் தன்மை கொண்டு அதை உற்று நோக்குகின்றோமோ அவனின் வெறுப்பான உணர்வலைகள் அதிலே பட்டபின் பார்க்கலாம்.
1.அந்த நாடா குதித்து ஓடும்
2.ஏனென்றால் அது சீராக ஓடுவதை இந்த வெறுப்பின் உணர்வுகள் இயக்கி இந்த நிலையைச் செய்யும்.
நான் முதலாளி பார்த்து விட்டு வந்தேன் என்றாலும் என்னிடம் வேலை செய்பவனைக் கடுமையாக வெறுத்துப் பேசும் பொழுது
1.முதலாளி என்ற உணர்வுகள் அவனிடம் கலந்து
2.அந்தச் சோர்வின் தன்மை அங்கே இயக்கி நாடா வெளியே ஓடும்.
இப்படி…. மற்றவர்களினுடைய நிலைகளில் ஒவ்வொரு செயல்களையும் நாம் உற்றுப் பார்த்தாலும் அந்த உணர்வுக்குத் தக்கவாறு நம் தொழிலும் படுகிறது. ஆனால் நாம் யாரும் தவறு செய்யவில்லை.
நமக்குள் விளைந்த உணர்வின் தன்மை கலந்து கலந்து மற்றவர்களின் உணர்வின் தன்மை
1.நம்மிடம் எதிர்பார்ப்பவர்களிடத்திலும் கலந்து
2.நமக்கே அது எதிரியாக்கிவிடுகின்றது.
நாம் வீட்டிலே அமர்ந்திருக்கும் பொழுது இதே போன்று எண்ணிக் கொண்டிருந்தால் அந்த இடத்தில் இத்தகைய உணர்வுகள் அதிகமாகப் பதிந்து விடுகின்றது.
சூரியனின் வெப்ப காந்த சக்தியின் அலைகள் படரப்படும் பொழுது பதிந்த உணர்வுகள் மீண்டும் அலைகளாகப் படர்ந்து மீண்டும் நமது ஆன்மாவில் கலந்து அதையே (எதை அதிகமாக எண்ணிக் கொண்டிருந்தோமோ) அதிகமாக நினைவு கூறும் தன்மை வந்து விடுகின்றது.
“தொழிலிலே நஷ்டம்…நஷ்டம்… கஷ்டம்…கஷ்டம்…!” என்று எண்ணத்தை எடுத்துக் கொண்டால் வீட்டிலே அமர்ந்திருக்கும் போது அதையே நினைத்துக் கொண்டிருப்போம்.
நஷ்டம் நஷ்டம் என்று எண்ணி எதை உடலுக்குள் விளைய வைத்தோமோ இந்த உணர்வுகள் ஆழமாக நம் வீட்டிலே பதிந்து
1.அது மீண்டும் நினைவாற்றலாக நமக்குள் வந்து
2.அந்தச் சங்கடத்தையும் சலிப்பையும் உண்டாக்கச் செய்கின்றது.
இப்படித்தான் நம் சாதாரண வாழ்க்கையில் இருள் சூழ்கின்றது.
யதார்த்தமான நிலைகளில் பிறர் செய்யும் தவறுகளை உணர்ந்தறிகின்றோம். இத்தகைய சூழலில் இருந்து நாம் விலகிச் செல்ல வேண்டும் என்ற அறிவின் தன்மையும் இருக்கின்றது.
இருந்தாலும் சந்திரனை மற்ற கோள்கள் மறைக்கும் பொழுது அதற்குப் போகும் ஓளிக் கற்றைகளைத் தடுத்து சந்திரனின் ஒளி மங்குகின்றதோ இதைப் போன்று தான் நமக்குள் இருக்கும் நல்ல உணர்வின் தன்மை தடைபடுகின்றது.
நாம் தவறு செய்யாமலே இப்படி ஒன்று வருகின்றது. இதைத் தடுக்க வேண்டுமல்லவா…!
அதற்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பற்றிச் சொல்லி உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.
உங்கள் வாழ்க்கையில் இருள் சூழும் சந்தர்ப்பங்களில் அதிலிருந்து விடுபட துருவ நட்சத்திரத்தினை எண்ணி அதிலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் சேர்க்க வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் பெருகிய பின்
1.இருள் சூழச் செய்யும் உணர்வுகளைச் செயலற்றதாக்கி
2.ஒளியான உணர்வின் அறிவாக ஞானமாக இயக்கச் செய்து
3.சிந்தித்துச் செயல்படும் தன்மையாக நம்மை இயக்கும்
அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கு நம்மில் வந்து மோதும் உணர்வுகளுக்கொப்ப அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்ற நிலையும் நல்லதாக்கச் செய்யும் பரிபக்குவ நிலையும் நமக்குள் வரும்.
நம் சொல் செயல் புனிதம் பெறும். மற்றவர்களையும் அது தெளிந்திடும் நிலையாக இயக்கச் செய்யும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.