
துருவ நட்சத்திரத்தின் ஆயுள் மெம்பராக உங்களை எல்லாம் இணைக்கின்றோம்
பிறருக்குத் தர்மம் செய்கின்றேன் என்று சொல்வார்கள். அவர்கள் வேதனைகளில் ஆயுள் மெம்பராகச் சேர்ந்து அவர்களைக் காப்பாற்றப் போகின்றேன் என்று சொல்வார்கள்.
அந்த வேதனைகளில் ஆயுள் மெம்பராகச் சேர்ந்து அந்த வேதனைகள் எல்லாம் இவருக்குள் விளைந்து யார் மேல் பற்று கொண்டாரோ அவரின் உடலுக்குள் செல்வார். அந்த உடலுக்குள் சென்று அந்த ஆயுள் மெம்பராகிவிடுவார்.
“தர்மம் செய்வது தப்பா…?” என்று கேள்வி கேட்காதீர்கள். தர்மம் செய்யவேண்டும். அதே சமயத்தில்
1.தீமை நமக்குள் வராதபடி
2.துருவ நட்சத்திரத்தின் ஆயுள் மெம்பர்களின் கூட்டத்துடன் இருக்க வேண்டும்.
நீங்கள் காசு கொடுத்து தர்மம் செய்தாலும் அவனுக்கு நல்ல ஒழுக்கம் இல்லையென்றால் அவன் சாப்பிட்டுவிட்டுக் குறும்புத்தனம் செய்வான்.
பார்த்தால் நமக்கு வேதனை வரும்.
நல்லது செய்தாலும்… அதில் ஒருவர் தவறு செய்யும் பொழுது “இப்படிச் செய்கின்றார்களே…” என்று இரண்டு மடங்கு நாம் வேதனைப்படுவோம்.
அப்பொழுது வேதனையின் உணர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஆயுள் மெம்பராகச் சேர்கின்றார்கள். ஆகவே எந்தத் தர்மத்தைச் செய்தாலும் “வேதனை என்ற உணர்வுகளைச் சுத்தப்படுத்தும் உணர்வுகள்” நமக்குள் வரவேண்டும்.
1.நாம் பரிவும் பண்பும் கொண்டு
2.பிறரைக் காக்கும் நிலை இருந்தாலும்
3.வெறுப்படையும் வேதனைப்படும் உணர்வுகளை எடுத்து
4.நம்மைப் படுபாதாளத்திற்குத் தள்ளும் நிலையிலிருந்து விடுபடவேண்டும்.
அதற்காகத்தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். பதிவு செய்ததை நீங்கள் மீண்டும் எண்ண வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் பெறவேண்டும் என்று உடலுக்குள் நினைவைச் செலுத்திப் பழக வேண்டும்.
இவ்வாறு செய்தோம் என்றால் யாரால் நமக்குக் கோபம் வந்ததோ அவர்களுக்குச் சிந்திக்கும் தன்மை வரும்.
நாங்கள் சிந்தித்துச் செயல்படும் தன்மை பெறவேண்டும், எங்கள் பார்வை எல்லோருக்கும் நன்மை பயக்க வேண்டும் என்ற இந்த உணர்வை நாம் எடுத்துக் கொண்டோம் என்றால்
1.நமக்குள் வரும் வேதனை கோபம், ஆத்திரம் போன்ற உணர்ச்சிகளைத் தடைப்படுத்தி
2.நோய் வராது நம்மைக் காக்கும்.
விஞ்ஞான அறிவு கொண்டு T.V. ரேடியோ அலைகளை ஒளிபரப்பு செய்கின்றார்கள். எந்த அலைவரிசையில் ஒளிபரப்பு செய்கின்றார்களோ அதே அலைவரிசையை வைத்து நம் வீட்டில் பார்க்கின்றோம்.
அதே மாதிரி நீங்கள் கோபமாக இருக்கக்கூடிய நிலையை எடுத்துக் கொண்டால் நாம் அமைதியாக அமர்ந்திருந்தாலும்,
1.நாம் சோர்வுடன் இருக்கும்பொழுது
2,இந்தக் கார உணர்ச்சிகள் முன் வந்தவுடன்
3.”நமக்கு இப்படியெல்லாம் இடைஞ்சல் செய்தார்கள்…” என்ற எண்ணம் வரும்.
நமக்கு இடைஞ்சல் செய்தவன் எங்கோ இருப்பான். அதை எண்ணும்பொழுது நமது பல் கடு கடுப்பாகிவிடும். இது மாதிரி நேரங்களில் நாம் தியானத்தில் அமர்ந்தால் அந்த எண்ணம் தான் வரும். தியானம் வராது.
1.நான் தியானமிருந்தேன்
2.”எனக்கு வரவே மாட்டேன் என்கிறது…” என்பீர்கள்.
3.காரணம் அந்த உணர்வுகள்தான் நம்மை இயக்குகின்றது.
நமக்கு இடைஞ்சல் செய்தவன் எங்கிருந்தாலும், அவன் உணர்வு வந்தவுடன் அவன் உருவம் நமக்கு நிழற் படமாகத் தெரியும். T.V ஐ எந்த அலைவரிசையில் வைக்கின்றோமோ அந்தப் படம் தெரியும். அந்த உணர்ச்சியின் தன்மை நமக்குள் எண்ணமாக வரும்.
இதே மாதிரி அருள்சக்தி உங்களுக்குள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
1.நீங்கள் நினைத்தவுடன் அதை எடுத்து இந்த உணர்வுகளை மாற்றமுடியும்.
2.அந்த மாதிரி மாற்றுவதற்குண்டான சக்தி நீங்கள் பெறுவதற்குத்தான்
3.துருவ நட்சத்திரத்தை உங்களுக்குள் பதிவு செய்வது.
நம் குருநாதர் துருவ நட்சத்திரத்தை எடுத்தார். அவரை எண்ணி எடுக்கும்பொழுது அந்த அருளை நான் பெற முடிகின்றது.
அதே சமயத்தில் அவர் குரு வழியில் ஒளியின் சரீரமாக இருக்கின்றார். அதன் உணர்வை எடுத்து ஆயுள் மெம்பராகச் சேருகின்றீர்கள்.
1.தீமைகளை நீக்கக்கூடிய ஆயுள் மெம்பராகச் சேருகின்றீர்களேயொழிய
2.தீமைகளை வளர்த்துக் கொள்ளும் ஆயுள் மெம்பராக அல்ல.
ஆகவே நாம் எந்த ஆயுள் மெம்பராக இருக்க வேண்டும்? துருவ நட்சத்திரத்தின் ஆயுள் மெம்பராகச் சேர்ந்தால் தீமையை நீக்கிவிடும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.