ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் – 10

Chanting Meditation.jpg

ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள்

“மந்திரங்கள் ஓதுவது…” என்பது சாங்கிய சாஸ்திரமே – ஞானிகள் அவ்வாறு கொடுக்கவில்லை

ஆலயங்களில் காட்டப்பட்டுள்ள

1.தெய்வ குணங்களை நாம் பெறுகின்றோமா…?

2.தெய்வச் செயலை நாம் செய்கின்றோமா…?

என்ற நிலைகளைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நமக்குள் எண்ணியது எதுவோ அந்த உணர்வின் சக்தியாக நமது உயிர் இயக்குகின்றது. இந்த உணர்வின் செயலாக நாம் எவ்வாறு இருக்க வேண்டும்? என்ற நிலையைத்தான் பித்தனைப் போன்று இருந்த நமது குருநாதர் உணர்த்தினார்.

பகைமையான உணர்வுகள் நமக்குள் எவ்வாறு வளர்கின்றது? பகைமையிலிருந்து எவ்வாறு மீளவேண்டும்? என்று தான் ஊருக்கு ஒரு மாரியம்மனும் தெருவுக்கு ஒரு விநாயகனும் வைத்தது.

நம் வாழ்க்கையில் பிறருடைய கஷ்டங்களைக் கேட்கப் போகும்போது நமக்குள் அது மாறி (மாரி) தீமைகளை விளைவிக்கின்றது.

அதே சமயத்தில், இந்தக் கஷ்டங்களை எல்லாம் நீக்கியவர்கள் மகரிஷிகள் என்று காட்டப்படும் பொழுது விநாயகருக்குப் பின் அரசையும் வேம்பையும் வைத்தது.

மாரியம்மன் கோவிலில் வேப்ப மரத்தை ஸ்தல விருட்சமாக வைத்திருப்பார்கள். அக்னி குண்டத்தையும் காட்டியிருப்பார்கள்.

ஆக, வாழ்க்கையில் கேட்டுணர்ந்த கசப்பான உணர்வை இந்த நிலையை எவ்வாறு மாற்ற வேண்டும் என்பதற்குத்தான் இதையெல்லாம் நமது ஞானிகள் வைத்துக் காட்டியுள்ளார்கள்.

தன் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிடவும் தீமைகள் அணுகினால் அதை அடக்கி ஆட்சி புரியும் நிலைகளுக்கு மகரிஷிகளின் உணர்வைத் தனக்குள் அரசாக்கிடல் வேண்டும்.

ஆகவே, வாழ்க்கையில் வரும் கசப்பினை நீக்கி அதை அடக்கி எவ்வாறு ஆட்சி புரிய வேண்டும் என்ற தத்துவத்தைத்தான் விநாயருக்கு வேம்பையும் அரசையும் வைத்து நமது ஞானிகள் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

அவை தான் சாஸ்திரங்கள்.

ஆனால், இன்று சாங்கிய சாஸ்திரத்தில் நாம் கேட்டுணர்ந்த உணர்வு கொண்டு “இந்த மந்திரத்தை ஜெபித்தால் உனக்கு எல்லாம் கை கூடும்” என்று சொல்கின்றனர்.

“சஷ்டியை நோக்கச் சரவணபவனார் சிருஷ்டிக்கு உதவும்..,”

“முட்டு முட்டு முழிகள் பிதுங்க..,

குத்து குத்து கூர் வடிவேலால்…,”

என்ற பாடலைப் பாடுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

சாங்கிய சாஸ்திரங்களில் ஏற்படுத்தப்பட்டு மந்திர ஒலிகள் கலந்த நிலைகள் கொண்டு சஷ்டிக் கவசத்தைப் படித்தோம் என்றால் இந்த வாழ்க்கையில் உடலின் தன்மை வரப்படும் பொழுது தன்னைக் காத்திடும் உணர்வின் தன்மை விளைகின்றது.

1.இந்த உணர்வின் தன்மையைப் பதிவு செய்து கொண்டு

2.இதையே பாராயணம் செய்து

3.கஷ்டத்தையும் துன்பத்தையும் நீக்குவேன் என்ற நிலையில்

4.முருகனை எண்ணி சஷ்டிக் கவசத்தை ஓதுகின்றனர்.

இப்படி இதையே ஓதி ஓதி வளர்த்துக் கொண்டபின் இறந்தபின் இந்த ஆன்மா எங்கே போகும்…?

இன்னொரு மனிதன் மீண்டும் இதே சஷ்டிக் கவசத்தைப் பாடினான் என்றால் இந்த உணர்வின் ஆன்மா அங்கே அவன் உடலுக்குள் செல்லும்.

உடலுக்குள் சென்று இதனின் உணர்வின் துணையால் அவனுக்குள் நின்று தன்னைக் காத்திடும் நிலையாக இது எதைச் செய்ததோ இதைப் போல அவனுக்குள் நின்று காத்திடும் நிலைகளே வரும்.

ஆனால், அங்கே காத்திடும் நிலைகள் வந்தாலும்

1.தனக்குள் வரும் கோபம் வெறுப்பு என்ற நிலைகள் வரப்படும் பொழுது

2.இந்த உணர்வுகள் “முட்டு முட்டு முழிகள் பிதுங்க…,

3.குத்துக் குத்துக் கூர் வடிவேலால்…” என்ற

4.இந்த விஷத்தன்மையான உணர்வுகளைத் தனக்குள் சேர்க்கும் நிலை ஆகும்.

5.இந்த உணர்வுகளே இவனுக்குள் அதிகமாக விளைந்து தனது எதிரியைத்தான் கொல்லச் செய்யும்.

6ஆனால், நமக்குள் உள்ள நல்ல குணங்களை எதிரியாக மாற்றிவிடும்.

இதை உங்களுக்குள் அறிந்து பார்க்கலாம்.

இந்தச் சஷ்டிக் கவாத்தைப் பாடுபவர்கள் தன் குடும்பத்தைக் காக்கவும் தன் தொழிலைக் காக்கவும் தான் இவர்கள் பயன்படுத்துவார்களே தவிர தனக்குள் வரும்.., “எதிரியின் தன்மையை வளர்த்துக் கொள்வார்கள்”.

இப்படிப்பட்ட நிலையில் நல்ல குணத்தைத் தனக்குள் கவரப்படும்போது நல்ல குணமே தனக்குள் எதிரியாக வரும்.

ஆக, இதைப் போல பல நிலைகள் கொண்டு சாங்கிய சாஸ்திரங்களில் நாம் சிக்கப்பட்டுள்ளோம்.

1.ஞானிகள் கொடுத்த “மனித உடலைக் காக்கும் முறையையே”

2.இப்படி சாங்கிய நிலைகளாக உருவாக்கிவிட்டார்கள்.

அரசர்கள் ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களை மந்திர ஒலிகளாக உருவாக்கி சாங்கிய சாஸ்திரங்களாக மாற்றிவிட்டார்கள்.

இன்று அந்த அரசர்கள் உருவாக்கிய நிலைகளைத்தான் நாமும் விடாப்பிடியாகப் பிடித்து சாங்கியங்களைச் செய்யவில்லை என்றால் நமக்கு ஆகாமல் போய்விடும் என்று செய்து கொண்டிருக்கின்றோம்.

ஆகவே, வெறுமனே மந்திரங்களை ஓதுவது 108, 1008, 100008 என்பது மறுபடியும் இன்னொருவர் உடலுக்குள் தான் அழைத்துச் செல்லும். இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

1.அருள் சக்திகளை எண்ணி பேரருள் பேரொளி உணர்வுகளை

2.நுகர்வதற்காக.., கவர்வதற்காக…, உயிர் வழி சுவாசிப்பதற்காக…, தன் உடலுக்குள் உருப்பெறச் செய்வதற்காகக்…, கொடுக்கப்பட்ட நிலைகளை

3.வெறும் “ஒலிகளை எழுப்பும்…” மந்திர நிலையாக மாற்றிவிட்டார்கள்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபடவேண்டும் என்பதற்காகத்தான் குருநாதர் இந்த உண்மைகளை உணர்த்தினார்.

தங்கத்தில் உள்ள செம்பும் வெள்ளியை நீக்க வேண்டும் என்றால் திரவகத்தை ஊற்றுகின்றோம். செம்பும் வெள்ளியும் ஆவியாகின்றது. தங்கம் பரிசுத்தமடைகின்றது.

நாம் உடுத்தியுள்ள ஆடைகளில் உள்ள அழுக்கினை நீக்க வேண்டும் என்றால் சோப்பைப் போட்டு நுரையே ஏற்றும் பொழுது நூல்களில் இணைந்துள்ள அழுக்குகள் அகற்றப்படுகின்றது. ஆடை தூய்மை அடைகின்றது.

சோப்பைப் போடவில்லை என்றால் என்ன தான் சுத்தமான நீரில் அலசினாலும் துணிகளில் உள்ள அழுக்குப் போகாது.

இதைப் போன்று தான் நம் அன்றாட வாழ்க்கையில் நல்லதை எண்ணிச் சென்றாலும் அந்த நல்லதைக் காத்திட நாம் எடுக்கும் கோபம் ஆத்திரம், வேதனை, சலிப்பு, வெறுப்பு போன்ற உணர்வுகள் நம் நல்ல குணங்களுடன் இரண்டறக் கலந்துவிடுகின்றது.

இரண்டறக் கலந்த அந்தத் தீமைகளை அகற்றவில்லை என்றால் நல்ல குணங்கள் குறைந்து கொண்டே வரும். நல்லதைக் காண முடியாது போய்விடும். ஆகவே,

1.நமக்குள் இரண்டறக் கலந்துள்ள அத்தகையை தீமைகளை அகற்றிடத்தான்

2.அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் சேர்த்திடத்தான்

3.அருள் ஒளியின் அணுக்களாக நமக்குள் உருவாக்கிடத்தான்

4.நம் உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றிடத்தான்

அன்று ஞானிகள் கோவிலை அமைத்தார்கள்.

 


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply