
எமது உபதேசங்களை அடிக்கடி கேட்க வேண்டும்… நூல்களையும் படிக்க வேண்டும்
வக்கீல்கள் எல்லாம் சட்டத்தைப் படித்து விடுவார்கள். ஆனால் அவரிடம் ஏராளமான நூல்கள் இருக்கும். கால நிலை வரும் பொழுது அதனுடைய உணர்வுக்கொப்பப் படித்துக் கொண்டே இருப்பார்கள்.
அதைப் போல நமது குருநாதர் கொடுத்த நூல்களைப் படித்துக் கொள்ளுங்கள். அதைப் படிக்கப்படும் பொழுது நினைவாற்றலைக் கூட்டிப் பகைமைகளைப் புகவிடாது உங்களின் வலிமை கொண்டு பகைமைகளை மாற்றியமைத்து விடலாம்.
1.அதே சமயத்தில் நூல்களைப் படித்து விட்டோம்… தெரிந்து கொண்டோம் என்பதைக் காட்டிலும்
2.“அந்தந்தக் காலங்களில்” புத்தகங்களைத் திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும்.
3.நாம் அனைவரும் என்றுமே பேரருளுடன் ஒன்றி வாழ்தல் வேண்டும்.
துரித நிலை கொண்டு உங்களை உருவாக்க வேண்டும் என்று தான் இதைச் செய்வது. நீங்கள் அருள் வழியில் தயாரானால் அனைவரையும் காக்கும் நிலை வருகின்றது.
ஒரு நெல்லை வைத்துப் பல நெல் என்று சொல்லிக் கொண்டு சமைக்கலாம் என்றால் அது முடியாது. ஒரு நெல்லைப் பல நெல்லாக உருவாக்குதல் வேண்டும். அதனைப் பெறச் செய்ய எமது அருளும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கின்றது.
உங்கள் உயிரான ஈசனை நேசியுங்கள்.
1.உயர்ந்த குணங்களை உங்களுக்குள் எடுக்கும் பொழுது உங்கள் உயிரான குரு மெச்சுகின்றது.
2.அதே சமயத்தில் உயர்ந்த குணங்களை எண்ணும் பொழுது அதுவே குருவாக இருந்து நம்மை நல்வழிப்படுத்துகின்றது.
அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் உருவாக்கி மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது “அதுவே குருவாகி” நம்மைத் தெளிவாக்கும் தன்மை பெறுகின்றது.
சாமி நன்றாகப் பேசுகின்றார்… எங்கள் சாமிக்கு எல்லாம் தெரியும்…! என்று சொல்லி அப்படி விட்டு விடக்கூடாது. யாம் எல்லாம் தெரிந்து கொள்ளவில்லை.
1.எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்திலேதான் இருக்கின்றோம்.
2.நீங்கள் அனைவரும் இந்த வாழ்க்கையில் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்திலேதான் யாம் இருக்கின்றோம்.
அந்த ஆசையினால் காலத்தையும் அறிந்து அந்தப் பருவம் கண்டு உங்களுக்குள் பதிவாக்குகின்றோம். ஆகவே இதைப் போன்று நீங்கள் உங்கள் குடும்பத்திலும் இந்தப் பதிவினை ஏற்படுத்துங்கள். பற்றுடன் வாழும் பண்பினை வளர்த்துக் கொள்ளுங்கள்.
உபதேசிக்கும் சொற்களை ஏற்கும் பருவம் நமக்கு வரவேண்டும். முதலில் கடினமாக இருக்கும். கால நிலைகளுக்கொப்பச் சொல்லி விட்டால் சிறிது சிந்திக்கச் செய்யும்…! “கேட்க வேண்டும்” என்ற உணர்வுகளை ஊட்டும்.
ஆகையால் நாம் ஒவ்வொருவரும் உயிரை ஈசனாக மதித்து உடலை அவன் வீற்றிருக்கும் ஆலயமாக மதித்து அதைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் ஆன்மாவைச் சுத்தப்படுத்த தபோவனத்தில் வெளியிடப்பட்டுள்ள அருள் ஞானப் புத்தகங்களைத் தனித்த நிலைகளில் படியுங்கள். கூட்டமைப்புடன் இருந்து அந்த அலைகளைப் பாய்ச்சுங்கள்.
குடும்பத்திற்குள் இணைந்து வாழும் நிலைகளை உருவாக்குதல் வேண்டும். இது தான் மனித நேயம் என்பது. ஆன்ம நேயத்தை நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.
1.உங்களுடைய செயலாக்கங்களைப் பார்த்து நானும் இணைய வேண்டும் என்ற உணர்வை ஊட்டி இணைத்தால் அது நலம் பெறும்.
2.ஆகவே நம்முடைய ஆர்வத்தை இதிலே தான் கூட்ட வேண்டும்.
3.ஆன்ம ஞானத்தைக் கொண்டு நமக்குள் ஒன்றி வாழும் உணர்வுகள் வரவேண்டும்.
கேட்போர் உணர்வுகளில் அருள் ஞான உணர்ச்சிகளை ஊட்டும் உணர்வுகளை நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.
இயற்கையின் உண்மையின் உணர்வினை அறிய வேண்டும் என்பதற்காக இந்த நூல்களைக் காலப் பருவம் அறிந்து அமைதி கொண்ட நேரத்தில் படித்துக் குடும்பத்தினரைக் கேட்க வையுங்கள்.
குழந்தைகளுக்கும் இதைச் சொல்லுங்கள். தாய் தந்தையருக்குப் படிப்பறிவு இல்லை என்றால் படித்துச் சொல்லுங்கள் கேட்க மறுக்கும் பொழுது படிக்க வேண்டாம். ஏற்புடைய உணர்வு வரும் பொழுது படிக்க வேண்டும்.
இதன் வழியில் தான் அருள் ஞானத்தை வளர்க்க முடியும். ஆர்வத்தின் தன்மை கூட்டும் பொழுது வேகம் கூட்டலாம்.
கண்ணாடி போன்றது ஆத்மா. அதில் எழுத்துக்களைப் பதிக்க வேண்டும் என்றால் சிதையாது பாதுகாக்க வேண்டும். ஆன்மாவிற்குள் இதன் உணர்வுகள் அழுத்தத்தின் தன்மை அதிகமாகி விட்டால் ஆன்மா சிதைந்து வெறுப்பின் தன்மை பெருத்துவிடும். பதியும் தன்மை இழந்து விடுகின்றது.
1.இதையெல்லாம் தெரிந்து அமைதி கொண்டு அருள் ஞானத்தைப் பெருக்குங்கள்.
2.உங்கள் வாழ்க்கையில் உங்கள் அனுபவம் பெரிதாகின்றது.
3.அருள் ஞானத்தைப் பெருக்கும் அனுபவமாக மாறுகின்றது.
அருள் வாழ்க்கை வாழும் தன்மை வருகின்றது, இருள் சூழ்ந்த நிலைகளிலிருந்து இருளை அகற்றிப் பொருள் காணும் நிலைகளை நாம் பெறுகின்றோம்.
குரு வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற நாம் தியானிப்போம்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.