
நம்மைத் திட்டிக் கொண்டே இருப்பவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்வது…?
நம்மை அறியாமல் பிறர் கோபமாகப் பேசினாலும் “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.
உடலுக்குள் நினைவைச் செலுத்திவிட்டு உங்களைத் திட்டியவர்கள் அவர்கள் எங்களைப் பார்க்கும் பொழுது நல்ல சொல்லாகச் சொல்லும் ஆற்றல் அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
அவர்கள் எதையெல்லாம் பேசி எதையெல்லாம் உங்களுக்குச் சங்கடமாக எண்ணுகின்றனரோ அதே சமயம் நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு
1.அவர்கள் எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகின்றனரோ அது அவர்களுக்கு நடந்து
2.அவர்கள் உணரும் ஆற்றல் பெறட்டும் என்று நீங்கள் எண்ணுங்கள்.
இப்பொழுது உங்களை ஒருவர் திட்டிக் கொண்டே இருக்கிறார் என்று சொன்னால் நாம் சுத்தமாக அதைக் கேட்டுக் கொண்டேயிருந்த பின்
1.திட்டியது அனைத்தையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்
2.எனக்கு அது வேண்டாம்…! என்று நாம் அவரிடம் சொல்லி விட்டால் அது நம்மைப் பாதிக்காது.
நீங்கள் ஆத்ம சுத்தி செய்து விட்டுத் திட்டியவரிடம் நீங்கள் எப்படி எப்படியெல்லாம் திட்டினீர்களோ அதையெல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் எனக்கு வேண்டாம் என்று சிரித்த முகத்துடன் சொல்லுங்கள்.
அந்த உணர்வுகள் உங்களை ஆட்டிப் படைக்காது.
நாம் ஆத்ம சுத்தி செய்து இவ்வாறு சொன்னவுடன் “ஆ…” என்று அவர்கள் இழுத்தால் போதும்.
1.அவர்கள் அறியாமல் செய்த தவறை
2.நாம் விட்ட மூச்சலைகள் அவருக்குள் ஊடுருவிச் சென்று அவர்கள் செய்த தவறை உணர்த்தும்.
இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.
இதைப் போன்று குடும்பத்திலோ மற்ற நிலைகளிலோ ஒவ்வொருவரும் தம்மையறியாத நிலைகளில் இப்படி அடிக்கடி பேசுகின்றனர். அவர்கள் உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வின் சத்துக்கள் அவர்கள் உடலில் வேலை செய்து விடுகின்றது. அதை அவர்கள் கட்டுப்படுத்த வேண்டுமென்றாலும் முடியவில்லை.
ஒவ்வொருவரும் நம் அனுபவத்தில் பார்க்கலாம். பையன் மேல் நாம் வெறுப்பாக இருப்போம். அவன் நல்லது செய்துவிட்டு வந்தாலும் கூட லேட்டாகி விட்டது என்கிற போது அவனை நினைத்தவுடன் “அவன் எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான் இருக்கிறான்…” என்போம்.
பையன் ஒரு காரியத்திற்குப் போனால் லேட்டாகி அந்தக் காரியத்தை முடித்து விட்டு வருவான். ஜெயித்துவிட்டு வந்தால் கூட நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
1.அவன் சென்று வந்த காரியம் என்ன…? என்று கேட்டறியாதபடி
2.“அவன் இப்படித்தான் எப்பொழுது சென்றாலும் லேட்டாக வருவான்…!” என்று அவனைத் திட்டவும் பேசவும் ஏசவும் செய்வோம்.
அவன் உண்மையைச் சொன்னாலும் கூட ஏற்றுக் கொள்ள மாட்டோம். “பொய் சொல்கின்றான்” என்ற எண்ணம் தான் தோன்றும். அதைக் கேட்டறிவதற்குத் தாமதமாகும்.
1.நாம் நல்லது நினைத்தாலும் கூட நம்மையறியாமல் அந்த உணர்வுகளை நிற்கச் செய்யும்.
2.அந்த உணர்வின் தன்மை அவனைக் கெட்டவனாக மாற்றச் செய்யும்.
இதைப் போன்று ஒவ்வொரு குடும்பத்திலும், ஒருவர்பால் கெடுதலான எண்ணங்களை வைத்து விட்டால் அந்த உணர்வின் பார்வையிலே பேசும் பொழுது நாம் எத்தனை நல்லது செய்தாலும் அந்த எண்ணங்களுக்குத் தப்பாகத்தான் தெரியும்.
ஆகையினால இதைப் போன்ற நிலைகளை நாம் மாற்ற வேண்டும்.
நாம் ஆத்ம சுத்தி செய்து முடித்தவுடன் நம்மைத் திட்டியவர்கள் பேசிய முறைகள் செய்த முறைகள் அனைத்தையும் அவர்கள் உணர்ந்து அவர்களே அதை அனுபவித்துத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் பெறட்டும் என்ற இந்த உணர்வின் நிலைகளை நீங்கள் மனதில் எண்ணிக் கொள்ளுங்கள்.
வாயிலே சொல்லிவிடாதீர்கள்… சொன்னால் வம்பு வந்துவிடும். உங்கள் எண்ணத்தால் வளர்க்கச் செய்யும் பொழுது அந்த உண்மையின் தன்மையை அவர்களும் அறியும் தன்மை வந்துவிடும்.
ஏனென்றால் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு சோர்வோ மனச் சஞ்சலமோ வெறுப்போ அடைந்தால் அந்த உணர்வுகள் நம்மைப் பாதிக்காது. நாம் எடுக்கும் இந்த ஆத்ம சுத்தியின் நிலைகள் அறியாமையிலிருந்து மீட்க நமக்கு அந்தச் சக்தி உதவும்.
குடும்பத்திற்குள் இதைப் போன்ற நிகழ்ச்சிகள் நிறைய உண்டு.
1.மாமியாருக்கும் மருமகளுக்கும் பிடிக்காது.
2.மகனுக்கு அப்பாவைக் கூடப் பிடிக்காது.
3.அந்த அளவுக்கு இன்று பெரும் பகுதி ஆகிவிட்டது.
4.இன்றைக்கு குழந்தைப் பருவத்திலிருந்தே இந்த நிலைதான்.
நம் உணர்வலைகள் மாறாமல் இருப்பதற்கு, ஒவ்வொரு நிமிடமும் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தத் தவறாதீர்கள்.
யாம் “வெறும் வார்த்தையிலே சொல்கிறோம்…” என்று எண்ணி விடாதீர்கள்.
1.உங்களுக்குள் வரக்கூடிய எத்தகைய துன்பத்தையும் போக்குவதற்கு
2.ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை வாக்காகக் கொடுத்து உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.