
பிறர் படும் கஷ்டத்தை உணர்வதற்காக எனக்குக் குருநாதர் கொடுத்த அனுபவம்
மனித வாழ்க்கையில் மகரிஷிகள் தீமைகளை அகற்றி விண்ணுலகில் எவ்வாறு இன்று சுழன்று கொண்டு இருக்கின்றனர்…? அவர்கள் உடலிலிருந்து தீமையை அகற்றிய நிலைகள் அவர்கள் உடலில் விளைய வைத்த உணர்வலைகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு இன்றும் நம் பூமியில் எவ்வாறு சுழன்று கொண்டிருக்கின்றது…?
அதை நீ எவ்வாறு பருக வேண்டும்…? என்ற நிலையை எமக்கு உபதேசித்து அனுபவம் பெறும் வழியில் நமது குருநாதர் எம்மை வழி நடத்தினார்.
எமது கால்களில் பல ஆணிகள் உண்டு. கால்களில் ஆணி இருப்பவரைக் கேட்டால் தெரியும். சிறிய கல் பாதங்களில் குத்தினால்கூட உச்சி மயிர் நட்டமாக நிற்கும்.
கால்களில் ஆணி உள்ளவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றால் சின்னப் பிரம்பை வைத்து 10 அடிகள் அடித்தால் ஜீவனே பிரிந்துவிடும் என்றால் அதன் உணர்வுகள் எப்படி இருக்கும்…? என்று தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு எமது இரண்டு கால்களிலும் 26 ஆணிகள் உண்டு. யாம் ஒரு காலடி எடுத்து வைக்கவேண்டுமென்றால் முள்ளில் கால் வைக்கிற மாதிரி இருக்கும். ஒவ்வொரு நிமிடத்திலும் இந்த வேதனைகள் தோன்றும்.
எம்மைச் செருப்பே போடக்கூடாது என்று குருநாதர் சொல்லி விட்டார்.
1.செருப்புப் போட்டால் உன் கஷ்டத்தை நீ உணர முடியாது.
2.இப்படி எத்தனையோ பேர்கள் கஷ்டப்படுகிறார்கள்.
3.இந்த உணர்வுகள் எப்படி வேலை செய்கிறது…? என்று நீ உணரவில்லை என்றால் பிறருக்கு நீ உதவியும் செய்ய முடியாது.
4.இதை நீக்கவும் முடியாது என்று குரு சொல்கின்றார்.
உனக்குள் வேதனை எப்படி உருவாகின்றது…? நீ சுவாசிக்கும் உணர்வுகள் உன் உடலுக்குள் என்ன செய்கின்றது…? என்பதையும் உணர்த்துகின்றார்
கால் ஆணி வந்தவர்களின் கால் எப்படி முடமாகின்றது…? நன்றாக இருப்பார்கள் ஆனால் வந்துவிட்டால் உடல் அப்படியே குறுகிக் கால்கள் எல்லாம் நலிந்த நிலைகள் ஆகும்.
அவர்கள் மனதும் வேதனைப்படும் உணர்வாக மாறும். இப்படி மனிதர்கள் எந்தெந்த நிலைகளில் தன்னை அறியாது வேதனைப் படுகின்றனரோ அந்த வேதனையின் உருவாக மாறி விடுகின்றனர்.
இதைப் போன்ற நிலைகளை நீ அறிந்தால் தான் அவைகளை மாற்றி அமைக்கும் சக்திகளை நீ பெற்று மற்றவர்களையும் பெறச் செய்ய முடியும் என்றார் குருநாதர்.
ஆகவே
1.அந்த அருள் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி
2.அகத்தியர் காட்டிய அருள் வழிப்படி
3.வியாசகன் காட்டிய அருள் நெறிப்படி
4.வான்மீகி காட்டிய அருள் நெறிப்படி
5.போகர் காட்டிய அருள் நெறிப்படி நாம் எதை எண்ண வேண்டும்…?
6.எதனை நாம் பருக வேண்டும்…?
7.எதனை நமக்குள் வலுவாகச் சேர்க்க வேண்டும்…?
8.எதனை வினையாகச் சேர்க்க வேண்டும்…?
9.அதை “வினைக்கு நாயகனாக” நமக்குள் எவ்வாறு ஆக்க வேண்டும்…? என்ற நிலைகளில் எனக்கு உணர்த்துவதற்காக
10.என் கால்களில் ஆணி இருக்கின்ற வரையிலும் இப்படி நடக்கச் சொல்லிப் பல நிலைகளைச் செயல்படுத்தினார் நமது குருநாதர்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.