
பகைமையை அகற்றினால்தான் மகிழ்ந்து வாழ முடியும்
ஒன்றுடன் ஒன்று இணைந்து இயங்கும் தன்மை பேரண்டத்தில் இல்லையென்றால் இந்தப் பிரபஞ்சமே இல்லை.
அதே போல் மனிதனின் வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் “சகோதரத் தத்துவத்துடன்” வாழவில்லை என்றால் மகிழ்ச்சியும் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.
ஒன்றை நாம் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
1.ஒருவர் மிகவும் நெருக்கமாக இருப்பினும் அதில் சிறு பகைமை ஏற்பட்டு விட்டால் அது கடும் விஷ வித்தாக நம்முள் பதிந்து
2.நம்மை அறியாமலே அவர்களைப் பகைத்து தீமையின் உணர்வாக நம்முள் வளர்ந்து கொண்டிருக்கும்.
இவ்வாறு பகைமையுணர்வுகள் நம்முள் வளரும் பொழுது அது நம்முள் உள்ள நல்ல குணங்களையும் பகைமையாக்கிக் கொண்டே இருக்கும்.
1.நமது உடலுக்குள் உணர்வுகள் ஒன்றுக்கொன்று பகைமையாகும் பொழுது
2.நமது உடலின் தன்மை குன்றுகின்றது.. நம்முடைய எண்ணங்களும் மாறுகின்றது.
எனவே சூரியக் குடும்பம் ஓர் ஒழுங்குடன் அமைதியாக இயங்குவதைப் போன்று நாமும் பகைமை உணர்வுகள் இல்லாமல் ஒற்றுமை உணர்வுடன் மகரிஷிகளின் அருள் சக்தியின் துணை கொண்டு வாழத் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாம் வாழும் தெருவில் உள்ள அனைவரையும் நமது குடும்பத்தினரைப் போலக் கருதி
1.அவர்களும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்,
2.இருள் நீங்கிப் பொருள் காணும் திறன் பெற வேண்டும்,
3.வாழ்வில் என்றும் மகிழ்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணி
4.நமது தெருவில் வாழும் மற்ற குடும்பத்தினருக்காகத் தியானிக்கும் பொழுது
5.அவர்களும் நம்முடன் ஒன்றுபட்டு வளரும் நிலை உருவாகிறது.
நாம் அனைவரும் ஒன்று கூடிக் கூட்டுத் தியானமிருந்து இதனின் எண்ண அலைகளை ஒருமித்த நிலையாக வெளியிடும் பொழுது… “இதனைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இந்த பூமியில் படரச் செய்கின்றது…”
மேலும் இந்த உணர்வின் அலைகள் இவ்வுலக மக்களின் உணர்வில் கலந்து அவர்களிடத்தில் மகிழ்ச்சியின் தன்மையை வளர்க்கின்றது. பகைமையற்ற மனிதர்களாக அவர்களை மாற்றுகின்றது.
பேரண்டத்திலும் பூமியிலும் மனிதரிடத்திலும் நடைபெறும் இயற்கையின் இயக்கங்களை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காண்பித்த அருள் வழியில் உங்களுக்கு உபதேசித்து வருகின்றோம்.
இதில் உங்களின் கருத்தினைச் செலுத்தி உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். இந்த ஊரும் நாடும் உலகமும் என்றும் மகிழ்ந்த நிலையாக இருக்க வேண்டும் என்ற உணர்வினை வளர்த்துக் கொள்ளுங்கள்.
ஊரும் நாடும் உலகமும் மகிழ்ந்த நிலை பெற வேண்டும் எனும் பொழுது மகிழ்ச்சியின் உணர்வுகள் உங்களிடத்தில் பெருகுகின்றது.
மகிழ்ந்த உணர்வின் துணை கொண்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்துடன் நாங்கள் அனைவரும் இணைய வேண்டும் என்று
3.இவ்வாறு இந்த உணர்வின் எண்ணங்களை நாளும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
நாளும் நல்ல உணர்வுகளை வளர்ப்போர் அனைவருக்கும் எமது ஆசீர்வாதங்கள்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.