
நீங்கள் சந்தோஷப்பட வேண்டும் என்ற நோக்கத்திலே தான் உபதேசிக்கின்றேன்
நம் உடலில் நல்ல அணுக்களை எப்படி வளர்க்க வேண்டும்…? தீய அணுக்கள் வராதபடி தடுக்கும் சக்தியாக நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நம் உடலில் உள்ள ஜீவணுக்களை எப்படிப் பெருக்க வேண்டும்…? என்று தான் உங்களுக்குப் பயிற்சி கொடுக்கின்றேன்.
பயிற்சி கொடுத்தும் உடல் ஆசை வந்தால் ராவணனாக மாறி விடுகின்றது. ராவணனாக மாறிவிட்டால் நல்ல குணங்களை அது சாப்பிட்டு விடும். அசுர குணங்கள் கொண்ட அடுத்த உடலாக உயிர் மாற்றிவிடும்.
1.ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தால்
2.உயிரைப் போன்றே ஜீவணுக்களை மாற்றி உடலுக்குப் பின் அழியா ஒளிச் சரீரம் பெறுகின்றோம்.
இன்று நடக்கும் யுத்தங்களால் எத்தனையோ கடுமையான விஷங்கள் வந்தாலும் உலகமே அழிந்தாலும் இந்த உயிர் அழியாது நெருப்பிலே பட்டாலும் “உயிர் அழிவதில்லை…” உடல் கருகுகிறது. கருகிய உணர்வுகளாக மாறுகின்றது.
பிறிதொரு உடலுக்குள் சென்றால் கருகிடும் உணர்வின் இயக்கத்தை அங்கே செயல்படுத்துகின்றது. அடுத்து வேதனைப்படும் உடலாக ஈர்த்து அந்த உடலைப் பெறுகின்றது.
உடல் பெறும் சந்தர்ப்பம் பெரும்பகுதி புழுவாகவும் பூச்சியாகவும் பாம்பாகவும் வாழக்கூடிய நிலைதான் வருகின்றது. விஷ அணுக்கள் பரவும் பொழுது மனித உடலிலே இது படர்ந்து விட்டால் இந்த உடலுக்குப் பின் கிருமிகள்தான் அதிகமாகும்… பூச்சிகளாகத்தான் உருவாகும். மனித நிலைப் பெறுவது கடினமாகிவிடும்.
ஆகவே
1.இன்று கவலையும் சஞ்சலத்தையும் சங்கடத்தையும் துரத்தி விடுங்கள்.
2.கவலையும் சஞ்சலமும் சோர்வும் பெரும் பிசாசாக மாறி நல்ல குணங்களை அழித்திடும் அத்தகைய நிலைகளை அப்புறப்படுத்துங்கள்.
கவலையும் சோர்வும் வரும் பொழுது தாங்க முடியவில்லை என்றால் கோபமும் பழி தீர்க்கும் உணர்வுகளையும் கூட்டி வெறுப்புணர்வாகி இந்த உடலையே வெறுக்கும் நிலை வருகிறது. வெறுத்து மற்றவர்களைத் தாக்கும் உணர்ச்சிகளையும் கொண்டு வருகின்றது.
இதிலிருந்தெல்லாம் நீங்கள் விடுபட வேண்டும்.
1.குரு அருள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று தான் உபதேசித்துக் கொண்டு வருகின்றேன்.
2.வீட்டுக் கவலையும் சலிப்பையும் சங்கடத்தையும் விட்டு விடுங்கள்.
3.குருநாதர் காட்டிய வழியில் தியானிப்போம் என்ற நிலைக்கு வாருங்கள்.
4.எல்லோருக்கும் என் மீது நல்ல அன்பு வளரட்டும்.
5.குடும்பத்தில் அனைவரும் நல்லவராக வளரட்டும்… ஒன்றுபட்டு வாழும் நிலை பெற வேண்டும்
6.உலக மக்கள் அனைவரும் நல்ல உணர்வு பெற வேண்டும் என்று எண்ணித் தியானித்துப் பாருங்கள்.
யாம் உபதேசித்த உணர்வுகள் அனைத்தும் இங்கே இருக்கின்றது அந்தப் பதிவு உங்களிடம் இருக்கின்றது… உபதேசித்த உணர்வுகள் அலைகளாகக் காற்றிலே பரவி உள்ளது… உலகம் முழுவதும் உள்ளது.
1.அதை நீங்கள் எடுத்து வளர்த்துக் கொள்ள வேண்டும்… அதற்குண்டான சந்தர்ப்பத்தைத் தான் உருவாக்குகின்றோம்.
2.நீங்கள் அனைவரும் சந்தோஷப்பட வேண்டும் என்ற நோக்கிலே நான் குரு வழியில் இதை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.