
தீமைகளைப் பற்றித் தெரிந்து கொள்வது பெரிதல்ல… தெரிந்த பின் உடனே அதை நீக்க வேண்டும்
நாம் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருப்பினும்… ஒருவர் வேதனைப்படுவதைப் பார்க்காமல் இருக்க முடியாது. அவர் சொல்லைக் கேட்காமல் இருக்க முடியாது.
ஒருவன் குற்றம் செய்கிறான் என்றால் அதைப் பார்க்காமல் இருக்க முடியாது. குற்றம் செய்தவர்களால் நேர்முகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் வேதனைப்படுவதையும் நாம் பார்க்கத்தான் செய்கின்றோம்.
1.அதையெல்லாம் அறிவால் அறிகின்றோம். அறிந்த உணர்வு நமக்குள் பதிவாகின்றது.
2.எத்தகைய உணர்வுகளைப் பார்த்தாலும் அறிந்து தெரிந்து கொண்டாலும்
3.கார்த்திகேயா என்று தெரிந்திடும் அறிவு இருந்தாலும் “அதை நீக்கிடும் அறிவு வேண்டும்…”
நம் உடல் ண்ஹாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் இருக்கும் நஞ்சினை மலமாக மாற்றி விட்டு நல்ல உணர்வினை உடலாகச் சேர்க்கின்றது. அந்த நல்ல உணர்வால் நாம் இடும் மணத்தால் நல்ல எண்ணங்கள் கொண்டு தீமையை அகற்றிடும் நிலைகளை உருவாக்குதல் வேண்டும்.
1.நல்லவைகள் எதுவாக இருப்பினும்
2.தீமைகளைப் பற்றித் தெரிந்திடும் அறிவு இருந்தாலும்
3.தெரிந்த பின் அந்தத் தீமையை நீக்க வேண்டும் அல்லவா.
வேலை செய்கின்றோம்… கை அழுக்காகின்றது. அதை நாம் கழுவாதபடி அடுத்து உணவை உட்கொள்வோமா…? அப்படி உட்கொண்டால் அழுக்கின் சுவையே தான் வரும்… உணவு சுவையற்றதாக மாறி உடலுக்கும் தீங்கு விளைவிக்கின்றது.
இதைப் போன்று தான் மகிழ்ச்சி கொண்டு மற்றவர்கள் கஷ்டத்தைக் கேட்டறிந்தாலும்… அதைத் தெரிந்து கொள்ளும் அறிவு இருந்தாலும்…
1.அவருடைய தீங்கு நம் நல்ல அறிவுடன் இணையும் பொழுது
2.அதைத் துடைக்கவில்லை என்றால் அவரின் தீமையின் உணர்வே நமக்குள் விளையும்.
துடைக்கா விட்டால் உடலில் நோயின் தன்மையாகிவிடும். மீண்டும் நல்ல உணர்வை எடுக்க முடியாதபடி தவிக்கும். அப்பொழுது சிந்தனைகள் சிதறும். சிதறும் பொழுது உடலில் நடுக்கமும் நடுக்கத்தால் வரும் கோபமும் சிந்தனையற்ற செயல்களாக நம்மை இயக்கி விடுகின்றது.
இதைப்போன்ற நிலையில் இருந்து நாம் மீள்தல் வேண்டும்.
ஆகவே… சந்தர்ப்பத்தால் எத்தகைய தீமைகள் புகுந்தாலும் அந்தத் தீய வினைகளை உடனுக்குடன் துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
அதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குத் தியானமும் ஆத்ம சுத்தி பயிற்சியும் கொடுக்கின்றோம்.
எந்த நேரம் ஆனாலும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து
2.உடனுக்குடன் தீமை செய்யும் உணர்வுகளை நீங்கள் அகற்றிட முடியும்.
3.உங்கள் நல்ல எண்ணங்களை உணர்வுகளை வலுப்படுத்திக் கொள்ள முடியும்.
அந்த ஞானிகள் பெற்ற அறிவின் ஞானத்தையும் நாம் நமக்குள் வளர்த்து இந்த வாழ்க்கையில் என்றுமே பொருளறிந்து செயல்படும் திறனாக அருள் வழியில் வாழ முடியும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.