நாரதன் கொடுக்கும் ஞானக்கனியின் விளக்கம்

நாரதன் கொடுக்கும் ஞானக்கனியின் விளக்கம்

 

ஒரு மாங்கனி அது இனிப்பாக இருக்கும்பொழுது, அந்தச் சுவையின் மணத்தையே வெளிப்படுத்தும். காயாக இருக்கும் பொழுது புளிப்பின் உணர்ச்சியைத் தூண்டும்.

இதைப் போல மனிதனாக இருக்கும் நாம் காயின் பருவத்தில் இருக்கும் பொழுது கனியாகும் உணர்வின் தன்மையை நாம் கவர்ந்தால் கனியும் தன்மையை அடைகின்றோம்.

ஆனால் கனியாவதற்கு முன் வெப்பத்தின் தணல் அதிகமாக இருந்தால் வெம்பி மரத்திலிருந்து விழுந்து விடும். வெம்பிய நிலைகள் கொண்டு வித்து உருவாகாது… அதனுடைய சத்தும் நமக்குள் நல்லது ஆகாது.

ஆகவே “வெம்பாத நிலைகள் கொண்டு…”
1.கனியின் தன்மையை அடைந்த கனியைப் போல
2.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு மெய்ஞானியின் உணர்வைத் தனக்குள் வளர்த்து
3.உணர்வுகள் அனைத்தும் கனியாகி உயிருடன் ஒன்றிய கனியின் தத்துவமாக
4.ஏழாவது நிலையாக ஒளிச் சரீரம் பெற வேண்டும்..

இதைத்தான் கந்த புராணத்தில் தெளிவாகக் காட்டப்பட்டது.

நாரதன் கனியைக் கொண்டு வந்து, சிவனிடம் கொடுக்கின்றான். சிவன் யார்…? நமது சரீரமே.

நாரதன் கனியைச் சிவன் கையில் கொடுத்து உலகை எவர் ஒருவர் முதலில் வலம் வந்து விடுகின்றாரோ அவருக்கு இந்தக் கனியைக் கொடுத்துவிடு என்று சொல்கின்றான்.

அப்பொழுது… ஆறாவது அறிவின் தன்மை உலகை அறிந்து கொள்ளும் நிலைகள் கொண்டு…
1.எண்ணத்தில் விரிவடைந்து புற உலகத்தை எண்ணுவோமேயானால்
2.”உலகைச் சுற்றத்தான்…” அந்த உணர்வு செல்லும்.

இந்த ஆறாவது அறிவு “தெரிந்து கொண்டேன்…” என்ற நிலை வரப்பபடும் பொழுது “எனக்கு வசதி இருக்கிறது…” என்று எண்ணத்தால் எண்ணினாலும் ஒன்றை மறந்து விடுகின்றான்.

எவ்வாறு மறந்து விடுகின்றான்…? ஞானம் இருந்தும், தான் உணர முடியாத நிலைகள் எவ்வாறு ஆகுகின்றது…? என்று காட்டுகிறார்கள்.
1.‘நான் ஒரு நொடியில் உலகை வலம் வந்து விடுகின்றேன்’ என்று
2.எண்ணத்தால் வேகமாகச் சென்று விடுகின்றான் முருகன் (ஆறாவது அறிவு).

அதே சமயம்… சிவன் அருகில் விநாயகன் இருக்கும் பொழுது
1.பேரண்டமும் பெரு உலகமும் உன் அன்னை தந்தைதான்.
2.பேரண்டம் சுழல்வதற்கும்… அந்தப் பேரண்டத்தின் ஆற்றல் உன் அன்னை தந்தைக்குள் இருக்கின்றது.
3.இது தான் உனக்கு உலகம்.
4.அவர்களைச் சுற்றி… நீ இந்த வினையாகச் சுற்றி… நிலைக்கு வந்து சேர்.
5.அந்தக் கனியின் தன்மையை நீ பருகலாம்…! என்று நமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

கனி – நாரதன் என்று உணர்த்தப்படுவது என்ன…?

ரிஷியின் மகன் நாரதன். மனிதனின் உயர்வின் தன்மை கனியாக்கியவன் அந்த மகரிஷி. அந்தக் கனியின் தன்மை அங்கிருந்து வரப்படும் பொழுதுதான்… “நாரதனைக் கனியாக்கி”
1.கனியினைச் சிவனிடம் கொடுக்கப்படும் பொழுது பேரண்டமும் பேருலகமும் அன்னை தந்தை
2.அந்த உணர்வுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு நீ அந்தக் கனியைப் பெறு.
3.அதனைக் கொண்டு நீ கனியாகு.

உன் ஆறாவது அறிவு கொண்டு… “எங்கே இருக்கும்…?” என்றும் “எங்கோ இருக்கும்…!” என்றும் கடவுளைத் தேடாதே…!

உனக்குள், உயிரான நிலைகள் அன்னையாகவும் தந்தையாகவும்… அதனின் உணர்வின் சத்து உனக்குள் தாயாகவும் சிவசக்தியாகவும் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உடலை மறவாதே…!

சிவனையும் நமக்குள் இருக்கும் சக்தியையும் நமக்கு எவ்வளவு தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள் ஞானிகள்…? எதை வினையாகச் சேர்க்க வேண்டும்…? விநாயகன் யார்…?
1.அந்த ஞானியின் உணர்வை உனக்குள் வினையாக்கி அதை நீ கனியாக்கு
2.கனியானவன் அவன்…! என்று தெளிவாக எடுத்துரைத்தான் அந்த மகாஞானி.

நாம் இங்கே என்ன செய்கின்றோம்…? அந்த உட்பொருளைக் காணாதவாறு, கதையைக் கதையாகத்தான் காணுகின்றோமே தவிர… மெய்ப்பொருளைக் கண்டுணரும் ஆறாவது அறிவைத் தனக்குள் செலுத்தி… உட்பொருளைக் கண்டுணரும் நிலைகள் இல்லை.

மெய்ப்பொருளைக் கண்டுணர வேண்டும் என்று கவிப்புலமை கொண்டு, உணர்வின் வேட்கை கொண்டு நாதங்களின் சுருதியாக அதற்குள் பிரித்தாலும்… கவிப்புலமைகள் பல வந்தாலும்… புலமை பெற்றவருக்கே தெரியும்.

அருணகிரிநாதர்… “நாத விந்துகள் ஆதி நமோ நமோ…” என்று பாடினார்.
1.உடலுக்குள் எந்த உணர்வின் தன்மையை எடுத்தோமோ நமது உயிருக்குள் சேர்க்கப்படும் பொழுது அது ஆவியாகின்றது.
2.அந்த உணர்வின் தன்மை நமது உடலாகும் பொழுது “நாத விந்துகள் ஆதி நமோ நமோ…!”

நாம் எதையெல்லாம் எடுக்கின்றோமோ எந்த குணத்தை எடுக்கின்றோமோ
1.அந்த உணர்வின் சத்து உடலுக்குள் சேர்க்கும் பொழுது, “ஆதி…”
2.உடலாகச் சேர்க்கும் பொழுது “நமோ நமோ…”

பாடலின் உட்பொருள் தெரியாமல் பாடிக் கொண்டு போய் விடுகின்றோம். இவையெல்லாம் நமது ஞானிகள் கண்ட பேருண்மைகள். நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் நலம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply