
எதிரி எங்கே இருக்கின்றான்…?
ஒவ்வொரு மனிதனும் தான் தவறே செய்யவில்லை என்றாலும் திடீரென்று மற்றவர்கள் எதையாவது சொல்லிவிட்டால் அது நமக்குள் ஆழமாகப் பதிந்து விடுகின்றது… அவரவர்கள் உணர்வுக்குத் தக்கவாறு…!
அப்படிப் பதிவாகி விட்டால் “என்னை இப்படிச் சொன்னானே… என்னை இப்படிச் சொன்னானே…!” என்ற உணர்வுகள்
1.நமக்குள் அது எதிரியை வளர்த்துக் கொண்டே வருகின்றது.
2.நல்ல குணங்களுக்கு இரையே கொடுப்பதில்லை… அதை வளர்ப்பதும் இல்லை.
3.நல்ல குணங்கள் வலு இழக்க நாமே காரணமாகின்றோம்.
ஆகவே அந்த நல்லதைக் காப்பதற்குத்தான் தத்துவ ஞானிகள் சாதாரண நிலையிலும் விநாயகர் தத்துவத்தைக் கொடுத்தார்கள். இது அகஸ்தியனால் காட்டப்பட்டது.
1.அவன் தனக்குள் கண்டுணர்ந்ததைத் தன் இன மக்கள் பெறுவதற்காக இம்முறையை வகுத்தான்.
2.அவன் துருவ மகரிஷியாகத் துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த ஆற்றலை நாம் பருகினோம் என்றால்
3.எத்தகைய தீமையைக் கண்டுணர்ந்தாலும் மாற்றிக் கொள்ளலாம்.
ஒருவர் திட்டி விடுகின்றார் என்றால்… இதே உயிர் தான் இழுத்து இந்த உணர்வினை உணர்ச்சிகளாக இயக்கி… செயலுக்குக் கொண்டு வருகின்றது. இதே உயிர் தான் அதை அணுவாகவும் மாற்றி விடுகின்றது.
அவன் எவ்வளவு வேதனைப் படும்படிச் சொன்னானோ அந்த வேதனையை உருவாக்கும் அணுவாக இங்கே விளைந்து விடுகின்றது. இது தான் விஷ்ணு (உயிர்) வரம் கொடுக்கின்றான்… விஷ்ணுவுக்கு பிறந்த பிரம்மா அதை உருவாக்குகின்றார். அதாவது வேதனை என்ற விஷத்தின் தன்மை உருவாகி விடுகின்றது. அது தன் இனத்தை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.
பிரம்மாவின் மனைவி சரஸ்வதி… எந்த வேதனையை உருவாக்கும்படிச் சொன்னானோ அதனால் உருவான உணர்வுகள் பிரம்மனாக தன் இனத்தை மீண்டும் சிருஷ்டிக்கும் வன்மை பெற்றதனால் “அந்த ஞானத்தின் வழிகளில் செயல்படும்…!”
இயற்கையின் உண்மை நிலைகளை நாம் கண்டு கொள்ள இவ்வளவு கருத்துடன் இதைக் கொடுத்திருக்கின்றார்கள்.
ஒரு விஷச் செடி காற்றிலிருந்து தன் இனமான விஷத்தையே நுகர்ந்து விஷச் செடியாக வளர்கின்றது.
அதைப் போல் உடலில் உருவான அந்த வேதனைப்படச் செய்யும் அணு…
1.எந்த மனிதன் வேதனைப்படச் செய்தானோ அவனின்று வரும் இந்த உணர்வை நமக்குள் அதைக் கிளர்ந்து சுவாசித்து
2.அதனுடைய மலத்தை நம் உடலிலே இடும்பொழுது தான் நல்ல அணுக்களுக்கும் அது வேதனை தாங்காது
3.அதனுடைய செயலைக் குறைக்கச் செய்து உடலிலே நோயாக வருகிறது.
என்னை வேதனைப்படச் செய்கின்றான்… அவனை விடுவேனா…? என்று கோபத்துடன் பதிலுக்குச் செய்தாலும் விஷத்தன்மையான அணுக்கள் மீண்டும் அவர்களை எண்ண எண்ண நோயாகவே விளைகின்றது.
அப்பொழுது எதிரி எங்கே இருக்கின்றான்…?
1.நமக்குள் எதிரிக்கு இடம் கொடுத்து விட்டோம்…
2.நம்மை மறந்து விட்டோம் என்ற நிலை தான் வருகின்றது.
குருநாதர் எனக்கு இதை அனுபவபூர்வமாகக் கொடுத்ததனால் அதை மீண்டும் மீண்டும் உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.
அந்த மெய் ஞானிகளின் உணர்வை நீங்கள் அதன் வழி தியானித்தல் வேண்டும்.
1.எத்தகைய வேதனைப்படும் நிலைகள் வந்தாலும் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் பல முறை செலுத்துதல் வேண்டும்.
அதன் பின் நாங்கள் பார்ப்போருக்கெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் என்று மற்றவர்கள் உணர்வுகள் வராது நாம் இப்படி மாற்றிப் பழகுதல் வேண்டும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.