விநாயகர் தத்துவம் நமக்குக் காட்டும் பேருண்மை

விநாயகர் தத்துவம் நமக்குக் காட்டும் பேருண்மை

 

இந்த மனித வாழ்க்கையில் நாம் சுவாசிப்பது மூஷிகவாகனா. ஒருவன் கோபமாகப் பேசுகிறான் என்றால் அதைச் சுவாசித்தால் உயிரிலே பட்டு அந்த உணர்வின் வேகமாகத் துடிக்கும் பொழுது காளி.

காளி கோவிலிலே புலியைத்தான் வாகனமாகப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்.
1.மனிதன் தவறு செய்கிறான் என்றால் அதனைப் பார்க்கும் பொழுது நமக்குக் கோபம் வருகிறது.
2.அந்த கோபத்தைச் சுவாசித்தால் உயிரிலே பட்ட பின் காளியாக அது மாறுகின்றது.
3.உடலான சிவனோ ருத்ர தாண்டவமாக… “இருடா நான் பார்க்கின்றேன்” என்று இது போன்ற ஆட்டங்கள் ஆடுகின்றது.

அந்தக் கோபத்தின் உணர்வுகளால் அழிக்கும் செயலாக வந்தபின் அவன் பதிலுக்கு எதிர்த்து விட்டால் மீண்டும் அதே வேகங்கள் வருகின்றது.

அந்த வேகத்தால் அவனை அடித்து உதைக்கும் உணர்வைச் சுவாசித்தால் அத்தகைய அணுக்களின் தன்மை இந்த உடலிலே பெருகிச் சிறுகச் சிறுக விளைந்து இரத்தக் கொதிப்பாக மாறி விடுகின்றது.

1.அதன் அடிப்படையில் அடிக்கடி கோபங்கள் வந்தே தீரும்.
2.அவ்வாறு கோபமாகப் பேசப் பேச… கோபத்தை ஊட்டும் உணர்வின் அணுக்கள் உடலிலே விளைந்து நல்ல அணுக்களைக் கொல்லும்.

உதாரணமாக ஒரு விஷச் செடியின் மணத்தை மனிதன் நுகர்ந்து விட்டால் அது விஷமான அணுக்களாக உடலிலே விளைந்து விடுகின்றது. அத்தகைய விஷ அணுக்கள் நல்ல அணுக்களைக் கொன்று புசிப்பது போல…
1.கோபமான உணர்வுகளை அதிகமாகச் சுவாசித்து விட்டால் அந்த உணர்ச்சிகள் மேலோங்கி
2.நம் உடலில் உள்ள நல்ல குணங்களுக்கும் அதற்கும் போர் முறையாகின்றது.

இரத்தக் கொதிப்பு வந்தோரைப் பாருங்கள். மேல் வலிக்கின்றது கை வலிக்கின்றது தலை வலிக்கின்றது தலை சுற்றுகிறது என்று எல்லாமே வரும்.

இது எல்லாம் மூஷிகவாகனா…! சுவாசித்த உணர்வுகள் உடலுக்குள் நின்று அது வாகனமாக அமைந்து இத்தகைய உணர்வுகளை விளையச் செய்து விடுகின்றது.

அதற்குத்தான் காளிக்கு முன் புலியைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்.

புலி தனக்கு வேண்டிய இரை கிடைத்து விட்டது என்றால் சாந்தமாக அதைச் சாப்பிடும் நிலை இல்லை. ஆவேச உணர்வு கொண்டு தான் அந்த உணவை உட்கொள்ளும்.

இதைப் போன்று தான் கோபப்படும் ஒரு செயலை நுகர்ந்தோம் என்றால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை அது கொன்று விழுங்கும் நிலை வருகின்றது.
1.நல்ல உணர்வுகளுக்குச் செல்லும் உணவைத் தடைப்படுத்துகின்றது.
2.அப்படித் தடைப்படுத்தும் பொழுது கை கால்கள் சுருங்கி விடுகின்றது… அதனின் இயக்கங்களைத் தடைப்படுத்துகின்றது.

இதே போன்று தான் வேதனை வேதனை என்று வேதனைப்பட்டுக் கொண்டே இருப்போம் என்றால் இந்த வேதனை உணர்வுகள் உடல் முழுவதும் பரவிவிடும்.

ஒரு விஷத்தை உணவாக உட்கொண்டால் உடல் எப்படித் துவண்டு விழுகின்றதோ அதைப் போன்று இந்த வாழ்க்கையில் விஷத்தின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது… உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் சோர்வடைந்து கை கால்கள் செயலற்றதாக மாறுகின்றது.

வேதனையை அதிகமாகச் சுவாசிக்கும் பொழுது நமது சிறுநீரகங்களிலும் விஷத்தன்மை அதிகமாகி அதுவும் சீராக இயங்குவதில்லை. அது சீராக இயங்கவில்லை என்றால் சர்க்கரைச் சத்தையும் உப்புச் சத்தையும் சரியாக அது பிரித்துச் சமப்படுத்தாது.
1.உணவாக உட்கொள்ளும் அந்தச் சத்துகள் அனைத்தும் அப்படியே இரத்தத்தில் கலந்து அதனதன் வலு அதிகரிக்கப்படும் பொழுது
2.தீமையை விளைவிக்கும் அணுக்கள் உடலில் பெருகத் தொடங்குகிறது.
3.உறுப்புகள் செயலற்றதாக மாற்றிவிட்டால் கடும் நோயாக மாறி விடுகின்றது.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்வதற்குத் தான் விநாயகர் தத்துவத்தை ஞானிகள் நமக்குத் தெளிவாகக் காட்டி உள்ளார்கள். அதிலே எதை நமது உடலாக ஆக்க வேண்டும் என்று தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

விநாயகருக்கு அருகே அரச மரத்தை வைத்திருப்பார்கள். ஏன்…?

ஒரு குருவி அரசம் பழத்தை உணவாக உட்கொண்டு அது தன் மலத்தைக் கழிக்கும்போது அதனுடன் கலந்து வந்த அரசமர வித்து பாழடைந்த கட்டிடத்தில் விழுந்தால் போதும்.
1.காற்றிலிருக்கும் ஈரப்பதத்தை நுகர்ந்து அது செடியாக வளர்ந்து
2.விழுதுகளைப் பரப்பி நீர்களை உட்கொள்ளும் சக்தி பெறுகின்றது… செழித்து வளர்கின்றது.
3.வளர்ந்த பின் அந்தக் கட்டிடத்தையே கூட வீழ்த்துகின்றது.

இதைப் போன்று தான் அந்த அரச மரத்தின் நிலைகளுக்கொப்ப… தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொல்லும்…
1.தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியன் பூமியின் துருவப் பகுதியில் நின்று துருவத்தின் வழி
2.பூமிக்குள் வரும் சக்தியைத் தனக்குள் எடுத்துத் தன் உணர்வுகள் அனைத்தையுமே ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளான்.
3.அதிலிருந்து வெளிப்படுத்தும் விழுதுகள் நம் பூமியிலே பரவிக் கொண்டே உள்ளது.

எந்த மனிதனின் நிலைகள் தொடர்பு கொண்டோமோ மனித உடலில் விளைந்த உணர்வுகள்… அவர்களை (மகரிஷிகளை) நாம் எண்ணி ஏங்கும் பொழுது நமக்குள் அது விளைந்து… நாமும் அவனின் அரவணைப்பில் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.

ஏனென்றால் அதன் வழியினைப் பின்பற்றிச் சென்றவர்கள் தான் இன்றும் அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் உள்ளார்கள்.

அதுவே மனிதனின் கடைசி எல்லை…!


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply