
எமது உபதேசங்களைக் கூர்மையாகக் கேட்டுப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்
உங்களுடைய துன்பங்கள் நீங்க அந்த மகரிஷிகளின் அருள் ஒளி நீங்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இப்பொழுது உபதேசித்துக் கொண்டிருக்கின்றேன்.
என்னை உங்களுடைய கண் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றது. பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது…
1.சாமி சொன்ன நிலைகளை நாம் சரியாகக் கேட்க வேண்டும்
2.அதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் கேட்டுக் கொண்டிருந்தால் தான் “இது கூர்மையாகின்றது…”
3.இந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் ஜீவன் பெறுகின்றது.
ஏனென்றால்…
1.துன்பத்தை நீக்கும் உணர்வுகளைப் பெற்றவர்கள் மகா ஞானிகள்.
2.துன்பங்களின் இயக்கத்தின் தன்மையை அறிந்துணர்ந்தவர்கள் அந்த மகா ஞானிகள்.
அந்தத் துன்பத்தின் விஷத்தின் தன்மை நீக்கி தன் உணர்வினை ஒளியாக மாற்றி… இந்த உடலையே ஒளிச் சரீரமாக மாற்றி இன்றும் விண்ணுலகில் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் இருக்கின்றார்கள்.
அவருடைய வாழ்க்கையில் வந்த இன்னல்களை எப்படி நீக்கினார்கள்…? அவர்கள் வாழ்க்கையில் இன்னல்கள் எப்படி வந்து சேர்ந்தது…? என்பதை அறிந்தார்கள்.
அவ்வாறு அறிந்த உண்மையைத்தான் அவர்கள் வெளிப்படுத்தினார்கள். அந்த உண்மையின் சக்தியைத் தான் யாம் இப்பொழுது உங்களுக்குச் சொல்வது.
நன்மையின் தன்மை கொண்டு நாம் காரியங்களை எண்ணிச் செய்தாலும் நாம் தவறு செய்யாமலேயே பிறருடைய துன்ப உணர்வுகள் நமக்குள் எப்படி வந்து சேருகிறது…? என்ற நிலையை “அந்த ஞானிகள் சொன்ன வழிப்படி” உங்களுக்குள் சொல்லும் பொழுது இது பதிவாகின்றது.
பாலுக்குள் காரம் பட்டபின் அந்தக் காரத்தின் உணர்ச்சியின் நிலைகளை நாம் உணர முடிகின்றது. ஆனால் அந்தச் சுவையை உணர முடியாத நிலை ஆகிவிட்டால் “அதை நாம் எண்ணிக் கூடப் பார்க்க முடியாது…”
ஒரு விஷத்தின் தன்மையைக் குடிக்கப்படும் பொழுது அதனால் சிந்திக்கும் செயல் இழந்து விடுகின்றோம்… அறிய முடிவதில்லை. செயலற்ற நிலை ஆகிவிடுகின்றோம். அது போல்…
1.நாம் தவறு செய்யாமலேயே “குறைகள் எனக்குள் வருகின்றதா…?” என்ற மனம்
2.அது எண்ணமாக உங்களுக்குள் தூண்டச் செய்யும் நிலையே சந்தர்ப்பங்களில் மறைந்து விடுகிறது.
ஆனால் அந்த மகா ஞானிகள் அதிலிருந்தெல்லாம் விடுபட்டுப் பழகியவர்கள்.
1.சக்திவாய்ந்த ஆற்றலைத் தனக்குள் கூட்டி தீமையைக் குறைத்து அந்த உணர்வின் ஆற்றலால்
2.உயிர் எப்படி ஒவ்வொரு குணத்தையும் அது உணரச் செய்து… அறியச் செய்து அந்த இயக்கத்தை இயக்கச் செய்வது போல
3.கெட்டதை நீக்கி நல் உணர்வின் தன்மையை உயிருடன் ஒன்றச் செய்து
4.ஒளியாக மாறும் உணர்வினைத் தனக்குள் வளர்த்து அழியா ஒளிச் சரீரம் பெற்றவர்கள்.
அவர்கள் வெளிப்படுத்திய சொல்களை… அவர்களை எண்ணும் பொழுது அந்த மணம் எனக்குள் உணர்வின் செயலாக சொல்லாக அது இயங்குகின்றது. அந்த மணத்தின் தன்மை உடலுக்குள் கிரியை ஆகி என்னை இயக்குகின்றது.
சிவகாமி…! அந்த ஞானியின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று “கவர்ந்த சக்தி” உடலுக்குள் சென்று சிவம்… தான் கவர்ந்து கொண்ட சக்தி எனக்குள் கிரியையாகி “அதனின் சொல்லாக (உபதேசமாக) வருகின்றது…”
1.இதையெல்லாம் நீங்கள் கூர்மையாகக் கவனிக்கும் பொழுது இந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் பதிவாகும்.
2.பதிவானதை மீண்டும் எண்ணத்தால் எப்படி எடுக்க வேண்டும்…? என்று நினைவூட்டும் சக்தியாகவும் இது செயல்படும்.
3.அதற்குத்தான்… வேறு நினைவுகள் இல்லாதபடி உங்களைக் கூர்ந்து கவனித்து இதைப் பதிவாக்கும்படி சொல்வது
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.