
அரச மரமும்… விண் செல்லும் மார்க்கமும்
அரச மரத்தை விநாயகர் அருகே ஸ்தல விருட்சமாக வைத்துள்ளார்கள். ஏன்…?
அரச மரத்தின் பழத்தை ஒரு குருவியோ மற்ற பட்சிகளோ உணவாக உட்கொள்கிறது. அது பறந்து செல்லும் போது சந்தர்ப்பத்தில் ஒரு பாழடைந்த கட்டிடத்தின் மீது தன் மலத்தை இட்டுவிடுகிறது.
ஆனால் அதற்குள் மறைந்திருக்கக்கூடிய அரச வித்து
1.அந்தக் கட்டிடத்தில் நீர் இல்லை என்றாலும் வறட்சியாக இருந்தாலும்
2.இரவிலே வரும் குளிரைக் கொண்டு அதைத் தனக்குள் பரவச் செய்து அந்த பாழடைந்த கட்டிடத்தில் ஜீவன் பெற்று
3.தன் இனத்தின் தன்மை எதுவோ அதைக் காற்றிலிருந்து நுகர்ந்து அந்த உணர்வின் சத்தாகச் செடியாக மலர்ந்து
4.அதன் பின் அது வளர வளர தன் விழுதுகளை அனுப்பி அந்தக் கட்டிடத்தைப் பிளந்து
5.பூமியின் நிலத்தின் ஈர்ப்புக்குக் கொண்டு வந்து தனக்கு வேண்டிய ஆகாரத்தை தேடும் நிலைக்கு அது வருகின்றது.
இதைப் போன்று தான் ஞானிகள் உயிரோடு ஒன்றித் தன் உயிரான்மாவை ஒளியாக மாற்றிக் கொண்ட பின் விண்ணுலகில் சுழலும் நிலை.
விண்ணிலே மிதந்து வருவது மிகவும் கடுமையான விஷத்தன்மைகளாக இருந்தாலும்… அந்த விஷத்தை முறித்து அதை அடக்கித் தன் உணர்வினை ஒளியாக மாற்றி அங்கே சென்ற நிலையில் “அது பாழடைந்த நிலை…”
விண்ணிலிருந்து வரும் விஷத்தின் தன்மையும் கோள்களில் இருந்து வருவதும் பேரண்டத்திலிருந்து வரும் பல விஷமான துகள்களும் “அங்கே வரும் பொழுது… எதுவுமே உற்பத்தியாகாது…”
விஷத்தின் தாக்குதலால் பல நிலைகளால் மாறிக் கொண்டிருக்கும் அப்பேர்ப்பட்ட பாழடைந்த இடத்தில் மனிதனாக இங்கிருந்து சென்றவர்கள் ஒளியின் சுடராக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
அதாவது… வைரம் எவ்வாறு விஷத்தை உள்ளடக்கி ஒளிச் சுடராக வெளிப்படுத்துகின்றதோ அதைப் போல ஜீவன் கொண்ட இந்த உயிராத்மாக்கள் (மகரிஷிகள்) விண்ணிலிருந்து வரும் விஷத்தினை முறித்து அந்த உணர்வை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது.
ஏனென்றால் பாழடைந்த இடத்திலே தனக்கு வேண்டிய ஒளியின் சுடராக… “அங்கே சூரியனின் ஒளி இல்லை என்றாலும்”
1.தனக்குள் இருக்கும் உணர்வின் ஒளி கொண்டு
2.மற்றவைகளை ஒளியாக்கும் திறன் கொண்டவர்கள் அந்த மகரிஷிகள்.
அந்தத் துருவ மகரிஷியைப் பின்பற்றிச் சென்றவர்கள் அனைவருமே அந்த எல்லையில் தான் இருக்கின்றார்கள். அதை உணர்த்துவதற்குத் தான் இங்கே விநாயகர் அருகிலே அரச மரத்தை வைத்தனர்.
ஒரு பாழடைந்த கட்டிடத்திலே அரச மரம் எப்படித் தன் விழுதுகளை ஊன்றிக் காற்றிலே மறைந்திருக்கும் ஜீவசக்தியின் தன்மையை… அந்த உணர்வினை தனக்குள் நுகர்ந்து விளைய வைத்துக் கொள்கின்றதோ அதைப் போல
1.அந்த மகரிஷிகள் விண் சென்ற வழியில்… அவர் வழியிலே அவர் காட்டிய உணர்வின் தன்மை கொண்டு
2.மனிதர்களாக இருக்கும் நாமும் சென்றால் அவர்கள் பெற்ற நிலையை நாமும் பெற முடியும்.
அதை உணர்த்துவதற்குத் தான் நீர் நிலை இருக்கும் பக்கம் விநாயகரை வைத்து… இந்த உடலுக்குப் பின் “மனிதன் விண் செல்லும் மார்க்கங்களை” மக்களுக்கு உணர்த்திச் சென்றார்கள்.
நேற்றைய செயல் இன்றைய சரீரம். இன்றைய செயல் நாளைய சரீரம்…!
1.மிருகமாகி… அதிலிருந்து மனிதனாக நாம் வளர்ச்சி பெற்று வந்த நிலையில்…
2.மனிதனுக்கு அடுத்த தெய்வ நிலை பெற வேண்டும் என்பதற்கே இதையெல்லாம் நமக்குக் காட்டினார்கள் ஞானிகள்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.