
“நம் கண்ணுடன் இணைந்தே” பல உணர்வின் எண்ணங்கள் வாழுகின்றது
ஒருவரைக் கெடுக்க வேண்டும் என்று எண்ணினால் “நாம் முதலிலே கெடுகின்றோம்…” கெடுமதியின் உணர்வைப் பாய்ச்சுகின்றோம்… பாய்ச்சும் உணர்வுகள் கேட்போருக்குள் பதிவாகின்றது.
1.பதிந்த உணர்வுகள் அவர்களையும் கெடுக்கின்றது அவர்களில் விளைந்த உணர்வுகள் வெளிப்படுகின்றது.
2.எங்கே வித்தாகி உருவானதோ மீண்டும் இன்னொரு உடலில் விளைந்த உணர்வின் சத்தாக நமக்குள் கவர்ந்து அவரும் கெடுவர் நாமும் கெடுவோம்.
ஒருவர் கெட வேண்டும் என்ற உணர்வைப் பதிவாக்கி அவரைப் பார்த்த பின் அவரை எப்படியும் வாழ்க்கையிலே கெடுக்க வேண்டும் துன்பத்தை ஊட்ட வேண்டும் என்ற உணர்வுகள் நமக்குள் தூண்டுகின்றது.
அவ்வாறு தூண்டி அந்த உணர்வுகள் நமக்குள் விளைகின்றது. இந்த உணர்வு எவர் கெட வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அவர் மீது பாய்ச்சுகின்றோம்.
மீண்டும் அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் அந்த உணர்வுகள் நமக்குள் வளர்கின்றது. பகைமைகளைத் தான் நாம் வளர்க்கின்றோம். விளைந்த உணர்வுகளைப் பிறருக்குப் பாய்ச்சுகின்றோம்.
அவர்களும் நினைவு கொண்டு இதைக் கவர்கின்றனர் இருவருமே கெடுகின்றனர். கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய். ஒருவரைக் கெடுக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது அந்தக் கெடும் உணர்வுகளை நமக்குள் வளர்க்கின்றோம். பிறரைக் கெடுக்கும் இச்சை வளர்கின்றது.
இதே போன்று
1.அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கி
2.நாம் பார்க்கும் அனைவரும் இருளை அகற்றி மெய்ப்பொருள் காண வேண்டும் என்று உணர்வுகளை உருவாக்கினால்
3.அருள் ஒளி என்ற உணர்வுகளை நமக்குள் உருவாக்குகின்றோம்… நாமும் அதுவாகின்றோம்.
ஆகவே… நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அரும்பெரும் சக்திகளைப் பெற வேண்டும்… நாம் பார்ப்போருக்கெல்லாம் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று எண்ணினால் நாம் அதுவாகின்றோம்.
அருளொளி பெற வேண்டும் என்ற உணர்வினை வித்தாக்குவோம். ஊழ்வினையாக உருவாக்குவோம். இந்த உணர்வின் துணை கொண்டு அனைவரும் நலம் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது நமக்குள் அனைவரது உணர்வுகளும் உண்டு.
அவர்கள் நலம் பெற வேண்டும் என்று நாம் எண்ணும் பொழுது அந்த உணர்வுகளும் நமக்குள் நலம் பெறுகின்றது. கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய். நம் கண்கள் கூறியது போன்று
1.ஒருவன் நலம் பெற வேண்டும் என்று எண்ணத்துடன் உற்றுப் பார்த்துப் பதிவாக்கிய பின்
2.அவரைப் பார்த்த பின் நன்மை செய்ய வேண்டும் என்று உணர்ச்சிகள் தூண்டுகின்றது.
3.அதன் வழி நன்மை செய்யும் உணர்வுகளை நுகர்கின்றோம்… நல்வழிப்படுத்தும் உணர்வினை இயக்கச் சக்தியாக மாற்றுகின்றோம்.
இதை உணர்த்துவதற்காகக் கண்ணனும் பலராமனும் ஒன்றெனெ இணைந்தவர்கள்… “சகோதரர்கள்” என்று காட்டுகின்றார்கள்.
சுவை மிக்க உணர்வுகளை எண்ணும் பொழுது சீதா ராமன் என்றும் இப்படி பல கோடிஸ் சரீரங்களைப் பெற்ற நிலையில். கண்கள் ஒன்றைக் காட்டி அந்த உணர்வை நுகர்ந்து அந்த எண்ணங்கள் வருகின்றது.
அந்த எண்ணத்தின் உணர்ச்சியால் நாம் எப்படி இயங்குகின்றோம்…? என்ற நிலைகளைத் தெளிவாகக் கூறுகின்றனர்.
1.நம் கண்ணுடன் இணைந்தே பல உணர்வின் எண்ணங்கள் வாழுகின்றது.
2.அதனால் தான் கண்ணனின் சகோதரன் பலராமன் உடன் பிறக்கவில்லை என்றாலும்
3.உணர்வின் தன்மை கொண்டு இணைந்து வாழும் சக்தி பெற்றவர்கள் என்று காட்டுகின்றார்கள்.
எண்ணங்களின் இயக்கங்களுக்குக் காவியங்களாகப் படைத்து நமக்குக் காட்டுகின்றார்கள்.
நமக்குள் இணைந்து வாழும் நிலைகள் அது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை… நண்பன் நலம் பெற வேண்டும் என்ற உணர்வினை எண்ணினால் அந்த கண்கள் உற்று நோக்குகின்றது உதவி செய்யச் சொல்கின்றது.
ஆகவே
1.எண்ணங்கள் வரும் பொழுது இந்தப் பார்வை அதைச் செய்கின்றது.
2.நண்பனைப் பார்த்த உடனே நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் வருகின்றது.
3.ஒன்றுடன் ஒன்று இணைந்து எவ்வாறு இயக்குகின்றது…? என்ற நிலையை அருள் ஞானிகள் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.
4.கண்ணன் வேறல்ல நம் எண்ணங்கள் வேறல்ல.
கண்கள் இல்லாத பொழுது பார்க்க வேண்டும் என்ற எண்ணங்கள் வருகின்றது. அந்த எண்ணங்கள் பல கோடிச் சரீரங்களில் வலுப் பெற்று உருவாகின்றது. உருவான உணர்வுகள் உடலுக்குள் தான் எண்ணி ஏங்கிய பின் வாசுதேவனுக்கும் தேவகிக்கும் சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறக்கின்றான்.
கம்சன் என்ற இருளை நீக்கிப் பொருள் காணும் நிலைகளைச் செயல்படுத்துகின்றது என்று இப்படித் தெளிவாகக் கூறுகின்றது நமது சாஸ்திரங்கள்.
உதாரணமாக… புழுக்கள் இரண்டு நாள் வாழும் அல்லது நான்கு நாளைக்கு இருக்கும். இப்படி மடிந்து மடிந்து… தான் பார்க்க வேண்டும் என்ற உணர்வைக் கூட்டிக் கூட்டி அந்த உணர்வின் தன்மை பெற்ற பின் தான்
1.வாசு… சுவாசித்த உயிரான தேவனுக்குத் தனக்குத் தேவையான உணர்வு என்ற நிலையில் அந்த எண்ணங்கள் உருவாக்கப்படும் பொழுது தான்
2.வாசுதேவனுக்கும் தேவகிக்கும் உடலான சிறைச்சாலைக்குள் கம்சனை வெல்ல
3.அந்த நாராயணன் ஒளிக்கதிராக இருக்கும் இந்த உணர்வின் தன்மை
4.”ஒளியை ஊட்டி… ஒளியை அறிவாக்கும்… அதை அறிந்திடும் உணர்வின் தன்மை” தனக்குள் காட்டுவதே கண்ணன்.
ஆக… கண்ணனாகப் பிறந்தான் நாராயணன்…. துவாரகா யுகத்தில் இருளை நீக்கிக் கண் ஒளி கொண்டு உணர்வின் அறிவாகத் தான் இயக்கும் சக்தி பெற்றான். அதே நாராயணன் நமக்குள் இருக்கிறான் என்ற நிலைகளில் காட்டுகின்றார்கள்.
இவ்வாறு
1.கண்கள் எண்ணத்தால் தோன்றியது
2.பின் பார்வையால் நுகரப்படும் பொழுது எண்ணங்கள் வருகின்றது
3.எண்ணத்தால் எதை நாம் எண்ணி ஏங்குகின்றோமோ கண் அதைக் காட்டுகின்றது.
இப்படி எண்ணங்கள் பல உண்டு. பல கோடிச் சரீரங்களைப் பெற்ற பின் பலராம் என்ற நிலையினை மனிதன் அடைகின்றான். இதை மனிதன் தான் உணர்கின்றான்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.