
மனத்தின் பாதிப்பு நிலைக்கு ஆட்படல் ஆகாது
உயிரணுவின் ஈர்ப்பின் செயலால் ஆத்ம நிலை பெற்று ஜீவ பிம்பம் பெற்றிடும் செயலில் சரீரத்தினுள் அடக்குவது பஞ்சபூதங்கள் நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம்.
இவற்றின் கூறுகள் மூலசக்தியாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றலில்… அளப்பரியா அவைகளின் செயல் நிகழ்வுகள் இயல்பாக இயங்கிடும் சக்தி அண்டசராசரம் முழுவதிலும் உண்டு.
மனிதன் என்ற சரீரத்தினுள்ளும்… சரீரம் பெற்றிட்ட உயிர்த்தொகைகள் அனைத்தினுள்ளும் அந்தப் பஞ்சபூதங்களே கட்டுக்குள் அடங்கிச் செயல் புரிகின்றன.
ஆனால் பகுத்தறிவு கொண்ட மனிதன்…
1.அந்த ஆற்றலின் துணையினால் மனதின் இயக்க சுதந்திரம் பெற்று வாழும் வகைகள் அறிந்த பின்னும்
2.பஞ்சபூத சக்தியைத் தன்னுள்ளே கொண்டுள்ள மனிதன் உரைக்கின்றான்… “மனதினை அடக்க இயலவில்லை என்று…”
பிறர் தர்ம செய்கையால்… ஞானத்தின் வழியில் நிற்போர்… மனத்தின் பாதிப்பு நிலைக்கு ஆட்படல் ஆகாது. ஏனென்றால்
1.மற்றவர்களின் காரியங்களால் நாம் பாதிக்கப்படும் நிலை பெறுவதல்ல.
2.பிறர் மேல் நாம் கொண்டுள்ள கருத்துக்களால்… “அவர்களின் செயல்கள்…” நம்மைப் பாதிப்பதாக எண்ணுகின்றோம்.
ஆவேச உணர்வுகள் நீக்கம் பெற்று ஜெபநீர் ஆடிடவே அழைக்கின்றோம்
1.”வலைஞன்” வீசுகின்றான் வலை. அந்த வலையினுள் படுகின்ற மீன்களைத் தன் ஆகார நியதிக்கே கொண்டு செல்கின்றான்.
2.அவன் பற்றியது ஒன்று அப்பற்றும் பொருளினால் அவனுள் குடிகொண்ட குறிக்கோள் மற்றொன்று.
இடையில் நடைபெறும் காரண காரியங்களின் சூட்சுமப் பொருளை அறிந்து கொண்டவனப்பா நீ.
1.தன்னுள் சுரந்து வெளிவரும் ஓர் பசையினால் வலையைப் பின்னுகின்றது “சிலந்தி…” அதுவும் வலை விரித்தே காத்திருக்கின்றது.
2.தன் வலையில் விழும் சிறு உடல் ஜீவன்களை நேரடியாகத் தன் நிலைக்கே புசிக்கிறது.
மனக்கருவைக் குணங்களாகக் காணல் வேண்டும். ஆவேச நிலையின் இயக்கத்தைக் காட்டிடவே பாடங்கள்,
ஆகாரத்தின் நிலைக்கு மற்றொரு பொருள் காட்டுவோம்.
1.”திகம்பரன்” (சந்நியாசி) செய்யும் பூஜை… அவனும் ஆகார நியதியை அளித்தே
2.அறிந்து கொண்ட வழிமுறைகளால் “ஏதோ” ஒன்றினைப் பெற்றிட முயல்கின்றான்.
மேலே சொன்ன மூன்று நிலைகளையும் (வலைஞன், சிலந்தி, திகம்பரன்) விளங்கிக் கொள்…!
ஜெபத்தின் தன்மையாகச் சிந்தனையில் கொண்டு பார்… ஆவேச நிலைகள் நமக்கு உரியனவன்று.
தாகவிடாய் கொண்டவன் அருந்த நீர் கேட்பான்… தாகம் தீராமல் நீராட முயல்வானா…? ஞானமும் அத்தகையது தான்…!
1.தவசியே ஆனாலும் “அருந்த வேண்டிய பசி” ஒன்று உண்டு
2.ஞான தாகம் தீர்ப்பதே மகரிஷிகள் வழி காட்டிய போதனைகள்.
3.அதைப் பெற்று அந்தப் போதனையின் வழி நடந்து முனைவது மனக்குளத்தின் ஜெபநீர் ஆடிடவே.
உணர்வுகளை மாற்றிடும் ஆவேசம் நீக்கு…! என்றே இங்கே இந்தப் பாட நிலையில் பகர்கின்றோம்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.