குலதெய்வங்களை வணங்க வேண்டியது என்பது பௌர்ணமி அன்று தான்… அமாவாசை அல்ல…!

குலதெய்வங்களை வணங்க வேண்டியது என்பது பௌர்ணமி அன்று தான்… அமாவாசை அல்ல…!

 

மாதாமாதம் அமாவாசை அன்று அல்லது ஆடி மாதம் அன்றோ படையல் செய்து குலதெய்வங்களை வணங்கி வருவார்கள். உணவைக் கொடுத்துக் கூப்பிடவும் செய்வார்கள்.

அவர்கள் சமாதிக்குச் சென்று தூய்மைப்படுத்தி வணங்கி வருவார்கள். அது மட்டுமல்ல… குலதெய்வத்தைக் காவல் காக்கும் காவல் தெய்வங்களுக்கு ஆடு கோழி என்று உயிர்ப்பலி கொடுப்பார்கள்.

இப்படித்தான் நாம் வணங்கி வருகின்றோம்.

எதை எதையெல்லாம் செய்து குடும்பத்தைக் காக்க வேண்டும் என்று உணர்வின் துணை கொண்டு இதைச் செய்தோமோ குலதெய்வங்களாக இருப்பவர்கள் அவர்கள் இறந்த பின்
1.அந்த ஆன்மாக்களுக்குப் படையல் செய்து அவர்களைக் கூப்பிடும் பொழுது
2.குடும்பத்தைச் சார்ந்தவர் உடல்களிலே அந்த ஆன்மாக்கள் புகுந்துவிடும்.
3.அப்படி வரவில்லை என்றாலும் கூட வலுக்கட்டாயமாக இசைக் கருவிகளையோ மற்றதுகளையோ செயல்படுத்தி வரவழைத்து விடுவார்கள்.

இந்த உடலில் வந்து ஆடத் தொடங்கும். ஒரு சில ஆன்மாக்கள் பார்த்தால் மேடு பள்ளம் தெரியாது கூட உருளும்.

“மகனே உன்னை நான் காப்பாற்றுகின்றேன்டா…!” என்று சொல்லி ஆட வைப்பார்கள்…. பலிகளையும் இடுவார்கள். ஆனால் நம்முடைய செயல் எதுவாக இருக்கிறது…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

குலதெய்வங்களுக்கு ஆகாரம் கொடுத்து இப்படிக் கூப்பிட்டு இன்னொரு உடலில் இறக்கிய பின் அடுத்து அங்கே ஜோசியம் கேட்பார்கள்.

இந்த வருடம் எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்… குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும்… அவர்களுக்குக் காலகாலத்தில் கல்யாணமாக வேண்டும். விவசாயம் போன தடவை சரியாக வரவில்லை… அது சரியாக வேண்டும்…! என்று இதை எல்லாம் கேள்வியாகக் கேட்பார்கள்.

அந்த ஆன்மாவும் “மகனே உன்னை நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றேன்…!” அந்த உடலில் இருந்து அது பேசும். இவ்வாறு அந்த ஆன்மாக்கள் மூலமாக நாம் கேட்டறிகின்றோம்.

அதே சமயத்தில் ஒரு குடும்பத்தில் உடன் பிறந்தவர்கள் நான்கு பேர் இருந்து அதிலே ஒருவர் மற்றவரிடம் சண்டையிட்டுப் பிரிந்து சென்றால் போதும்.

அவர்கள் இதே நிலையில் வணங்கிச் செயல்பட்டால் “நான் உடலுடன் இருக்கும் போதும் எனக்குத் தொல்லை கொடுத்தான்… போன பிற்பாடும் தொல்லை கொடுக்கின்றான்…!” என்று குலதெய்வங்கள் அருளாடும் இடத்திலும் கூட இந்த இரு நிலைகள் கொண்டு சண்டை வந்துவிடும்.
1.இவரைச் சார்ந்தவர் இவர்கள் உடலில் வருவதும்
2.அவரைச் சார்ந்தவர் அவர்கள் உடலில் வருவதும் அருளாடுவதிலும் இப்படிச் சண்டைகள் வரும்.

காரணம்… இவை எல்லாம் மனித உடலுக்குள் பெருக்கப்பட்ட உணர்வுகள் அதை அழைத்து மீண்டும் “இந்தக் குரோத விரோத உணர்வுகளை வளர்த்து” இப்படித்தான் கொண்டு செல்கின்றோம்.

பார்க்கலாம் சில குடும்பங்களில்… எனக்கு அவன் ஒன்றுமே செய்யவில்லை… அந்தக் குடும்பம் என்ன ஆகின்றது பார்…? என்று இவர்கள் சொல்லவார்கள். அவர்களும் பதிலுக்கு இதே போன்று சொல்வார்கள்.

இப்படி ஒருவருக்கொருவர் சொல்லி இருவர் உடல்களிலும் இது வளர்ந்து குலதெய்வங்களை வணங்கி வருபவர்கள் நற்பயன் அடைந்திருக்கின்றார்களா…? என்றால் அது இல்லை.

வழிவழியாகச் செயல்பட்டு இறந்த பின் அந்த ஆன்மாக்கள் அந்தந்தக் குடும்பத்திற்குள்ளே தான் சுழலத் தொடங்குகிறது. இதிலிருந்தெல்லாம் விடுபட வேண்டும்.

பௌர்ணமி அன்று நம்முடைய குலதெய்வங்களான அந்த ஆன்மாக்களை உந்தித் தள்ளிச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து… உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்துப் பேரின்ப பெருவாழ்வாக வாழச் செய்ய வேண்டும்.

அவர்கள் அங்கே விண் சென்று அங்கிருந்து அருள் ஒளியைப் பாய்ச்சி இந்த வாழ்க்கையில் வரும் இருளில் இருந்து நீக்கக்கூடிய சக்தி எங்களுக்கு அந்த ஆசி வழங்க வேண்டும் என்று
1.யாரெல்லாம் இந்த முறைப்படி செய்கின்றார்களோ அவர்களே உயர்ந்த நிலைகளை பெறக்கூடிய தகுதி பெற்றவர் ஆகின்றார்கள்.
2.இது எல்லாம் ஞானிகள் காட்டிய மெய் வழி… விண் செல்லும் மார்க்கமாகும் குல தெய்வங்களை வணங்கும் முறையும் ஆகும்
3.பௌர்ணமி அன்று தான் இப்படிச் செயல்படுத்த வேண்டும்… அமாவாசை அன்று அல்ல…!


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply