“தயவு செய்து” உங்களை நீங்கள் நம்பிப் பழக வேண்டும்

“தயவு செய்து” உங்களை நீங்கள் நம்பிப் பழக வேண்டும்

 

நீங்கள் எப்பொழுது தபோவனம் வந்தாலும் சரி…
1.எந்த நன்மைகளை எல்லாம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தீர்களோ
2.அதை எண்ணி ஆத்ம சுத்தி செய்து மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஏங்கி இருந்தால் போதுமானது.

உங்கள் குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும்… அவர்களுக்கு நல்ல படிப்பு வர வேண்டும்… எங்கள் குடும்பத்தில் ஒற்றுமை வர வேண்டும்… விவசாயம் செழித்து வளர வேண்டும் என்று எதையெல்லாம் நல்லதாக வேண்டும் என்று விரும்புகிறீர்களோ ஒரு பத்து நிமிடம் மகரிஷிகளை எண்ணித் தியானித்த பின் இதை எண்ணுங்கள்.

மறுபடியும் ஒரு பத்து நிமிடம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி…
1.மீண்டும் அந்த நல்லதுகளை எண்ணினீர்கள் என்றால் இந்த உணர்வுகள் விளைந்து
2.உங்கள் நினைவலைகள் உங்கள் கஷ்டங்களை நீக்க இது உதவும்.
3.உங்களுக்கு இதெல்லாம் கிடைக்க வேண்டும் என்று தான்
4.நான் எங்கிருந்தாலும் தியானம் செய்து தவமிருந்து கொண்டிருக்கின்றேன்.

ஆகவே எனக்குக் கஷ்டமாக இருக்கின்றது… என் கஷ்டம் என்னை விட்டு போக மாட்டேன் என்கிறது… என்று “அதை இறுக்கிப் பிடித்துக் கொள்ளாதீர்கள்…”

எண்ண வேண்டிய சரியான முறை எது என்றால்…
1.மகரிஷிகளின் அருள் சக்தியால் கஷ்டம் எல்லாம் நீங்கி தொழில் வளம் பெருக வேண்டும்
2.நாங்கள் மன பலம் பெற வேண்டும் குடும்பத்தில் ஒற்றுமை வளர வேண்டும்
3.எல்லோரும் உடல் நலம் பெற வேண்டும் என்று கேட்டால்
4.இது எல்லாம் உங்களுக்கு நடக்கும் என்று நான் (ஞானகுரு) ஒரு சொல்லிலே உங்களுக்கு ஆசி கொடுக்க முடியும்.

ஆனால் இவ்வளவும் சொல்லி நல்லது நடக்க வேண்டும் என்று நான் கொடுத்தாலும்… அடுத்தாற்போல் என் பேரன் சரியாகப் படிக்கவில்லை அவனுக்கு உடல் நலம் சரியில்லாமல் போகின்றது என்று “நான் சொன்ன வாக்கை எடுக்காதபடி இதைச் சொல்கின்றார்கள்… “கஷ்டத்தையே பிடித்துக் கொள்கின்றார்கள்…”

போன தடவை உடல் நலம் சரியில்லாதபடி இங்கே வந்திருப்பார்கள் இப்பொழுது முக்கால்வாசி நன்றாக இருக்கும். ஆஅனால் இப்போது அங்கிருந்து வந்த உடனே என் மேல் வலி என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது என்று கேட்கின்றார்கள்

1.சாமி…! போன தடவை வந்த போது நீங்கள் சொன்னபடி தியானம் செய்தேன் இப்போது பரவாயில்லை
2.இன்னும் கொஞ்சம் இருப்பது நீங்க வேண்டும் அந்த நோய் பூரணமாக விலக வேண்டும்
3.நான் நன்றாக வேண்டும் என்று தான் நீங்கள் கேட்டுப் பழக வேண்டும்.

அந்த மனது தான் உங்களுக்கு வரவேண்டும்.

மகரிஷிகளின் அருள் ஒளியால் நாங்கள் உடல் நலம் பெற வேண்டும்… உடல் வலி நீங்க வேண்டும் என்று தான் நீங்கள் கேட்டுப் பழக வேண்டும். இதைத்தான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் பழக்கிக் கொடுக்கிறோம்.

ஏனென்றால் இதற்கு முன்பு… கோவிலுக்குச் சென்று அழுது புலம்பி கஷ்டத்தைச் சொல்லித் தான் வேண்டிப் பழகி இருக்கிறோம்.

அந்த பழக்கத்தை எல்லாம் விடுத்து விட்டு கஷ்டமெல்லாம் நீங்க வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் நான் பார்ப்பவர்கள் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று இப்படி நீங்கள் கேட்டுப் பழகுதல் வேண்டும்.

இங்கே கூட்டுத் தியானம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு அரை மணி நேரமாவது நல்லதை எண்ணித் தியானம் செய்யுங்கள் உங்கள் மனதில் அமைதி கிடைக்கும் மன பலம் கிடைக்கும் “நீங்கள் எண்ணிய நல்லது நிச்சயம் நடக்கும்…”
1.இந்தப் பழக்கத்திற்கு வர வேண்டும் என்று தான் தியான மண்டபத்தைக் கட்டியது.
2.தயவு செய்து உங்களை நீங்கள் நம்பிப் பழக வேண்டும்.

ஞானிகள் சொன்னது நம் உயிர் கடவுளாக இருக்கின்றது… நாம் எண்ணிய எண்ணங்கள் இறையாகின்றது… உடலுக்குள் இறையான பின் அந்த உணர்வுகள் செயலாகும் போது தெய்வமாக இயக்குகின்றது.

எந்தக் குணத்தை எண்ணி எடுக்கின்றோமோ அது எப்படிச் செயலாக்குகிறது என்பதைத் தான் ஆலயங்களில் வைத்துக் காட்டியுள்ளார்கள். அதை எல்லாம் மனதில் வைத்து… அந்த உயர்ந்த நிலைகளை நீங்கள் எண்ணி…
1.நான் கொடுக்கக்கூடிய நல்ல வாக்குகளை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தி
2.அருள் வழியிலே அருள் வாழ்க்கை வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply