
அகஸ்தியன் கண்டுணர்ந்த இயற்கையின் உண்மைகளை “நீ உற்றுப் பார்…” என்றார் குருநாதர்
தாயின் கருவிலே விளையும் குழந்தையை இன்று விஞ்ஞான அறிவு கொண்டு எந்திரத்தின் துணை கொண்டு உற்றுப் பார்த்து இந்தக் குழந்தை பலவீனமாக இருக்கின்றதா…? ஆரோக்கியமாக வளர்கின்றதா…? என்று காணுகின்றார்கள்.
பலவீனமாக இருந்தால் அதற்குண்டான ஊட்டச்சத்துக்களைக் கொடுத்துக் குழந்தையை நல்ல முறையில் இப்படி வளர்த்து விடலாம் என்றும் செயல்படுத்துகின்றார்கள்.
அதே சமயத்தில் கருவில் வளரும் பொழுதே அதை ஆணா பெண்ணா என்ற நிலைகளும் இந்த உணர்வின் சத்துக்களைக் காணுகின்றான் விஞ்ஞான அறிவில்.
அன்று மெய் ஞானத்தின் தன்மை கொண்டு சந்தர்ப்பத்தால் தாய் நுகர்ந்த உணர்வு விஷத்தின் தன்மையை முறித்திடும் சக்திகளை கருவிலேயே பெறுகின்றான் அகஸ்தியன்.
கருவிலேயே அப்படி அவனுக்குள் விளைந்து பிறந்த பின்
1.விஷத்தை முறித்திடும் ஆற்றலும் அதை நுகர்ந்தறியக்கூடிய உணர்வின் ஆற்றலும்
2.இதனுடைய செயலாக்கங்களையும் கண்டு கொண்டவன் தான் அந்த அகஸ்தியன்.
அவன் வாழ்ந்த காலங்களில்
1.அவன் உடலிலே விளைந்த அந்த விஷத்தை முறித்திடும் சக்திகள் அவனுடைய மூச்சலைகளாக இங்கே படர்ந்துள்ளது.
2.அதே சமயத்தில் அவன் நடந்து சென்ற பாதச் சுவடிகளில்
3.அவன் ஈர்க்கும் வட்டத்தில் பதிந்த ஆற்றல்களும் “இங்கே உள்ளது” என்று அதை குருநாதர் காட்டுகின்றார்.
அகஸ்தியன் கண்டறிந்த உணர்வுகள்
1.அவன் அறிவுகளில் எதை எதைத் தீமை என்று “உணர்ந்த உணர்வுகளை… நீ உற்றுப் பார்” என்று சில குறிப்பிட்ட இடங்களைக் காட்டுகின்றார்.
2.அதைக் கண் கொண்டு கூர்ந்து கவனி…! என்றார்.
பாறை மீது அவர் அமர்ந்திருந்து பல செயல்களைச் செயல்பட்ட நிலைகளையும்… தன் இருப்பிடத்திலிருந்து அதைத் தனக்குள் கவர்ந்து தனது அறிவாக தனக்குள் அந்த அறிவின் தன்மை வளர்த்துக் கொண்ட நிலையையும்… அறியும் ஆற்றலும் பெற்றதைப் பார்…! என்றார் குருநாதர்.
அவன் கடும் மின்னலையும் உற்று நோக்குகின்றான். ஒரு நட்சத்திரத்திற்கு இன்னொரு நட்சத்திரத்திற்கு மோதல் ஆகும் போது மின் கதிர்களாக மின்னலாகப் பாய்கிறது.
மின்னல் பூமிக்குள் மற்றவர்கள் மீது தாக்கியவுடன் அந்த உடலைக் கருக்குவதும்… மின்னல்கள் வான் வீதியில் தாவர இனங்கள் இல்லாத பொழுது அது எப்படிப் பரவுகின்றது…? என்ற நிலையையும் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.
1.அகஸ்தியன் தாய் கருவில் இருக்கப்படும் பொழுது விஷத்தை அடக்கிடும் சக்தி பெற்றான்.
2.அதன் மூலம் மின்னலுக்குள் இருக்கும் ஆற்றலை எவ்வாறு உணர்ந்தான்…? அதை நுகர்ந்தான்…? என்று பார்க்கும்படி சொல்கிறார் குருநாதர்.
அதில் இருக்கக்கூடிய சக்தி… இன்று நாம் அணுகுண்டு என்று சொல்கின்றோமே அத்தகைய “கதிரியக்கச் சக்தி” கொண்டது.
மின்னல்கள் தாக்கப்படும் பொழுது கதிரியக்கப் பொறிகள் உருவானாலும் மின் கதிர்கள் பரவப்படும் பொழுது மற்ற கோள்கள் உமிழ்த்தும் அலைகளுக்குள் ஊடுருவி அதை ஒரு இயக்கச் சக்தியாக எப்படி மாற்றுகின்றது என்ற நிலையை அகஸ்தியன் உணர்ந்து கொள்கின்றான்,
அப்போது
1.அவன் உடலில் இருந்து வெளிப்பட்ட அந்த ஆற்றல்மிக்க உணர்வின் எண்ண அலைகள்
2.அது எப்படி இருக்கின்றது…? என்ற நிலையையும் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.
அனைத்திலுமே வெளிப்படும் உணர்வுகளைச் சூரியன் தனக்குள் கவர்ந்து எடுத்துக் கொள்கிறது. ஒரு கொடூர மிருகத்தின் உணர்வை நுகர்ந்தால் “காளி” என்றும் அசுர குணங்கள் என்றும்… அசுர சக்தி கொண்டது…! என்றும் இப்படி ஒவ்வொன்றுக்கும் காரணப் பெயர் வைக்கின்றார்.
ஆனால் ஒரு சாந்தமான மானின் தன்மை வரப்படும் பொழுது அதைச் சீதா – சுவை என்றும் அது எப்படி மகிழச் செய்கிறது…? என்பதையும் இதைச் சூரியன் எவ்வாறு எடுத்து வைத்துக் கொள்கின்றது…? என்றும் சூரியன் ஈர்ப்பு வட்டத்தில் எப்படி வளர்கிறது…? என்றும் காட்டுகின்றார் குருநாதர்.
அதே போல் சூரியன் ஈர்ப்பு வட்டத்தில் வளரும் தாவர இனங்களும் அதைத் தொடர்ந்து வரும் மனிதனின் உணர்வுகளும்…
1.எதை நுகர்ந்து உடலுக்குள் பதிவாகின்றதோ இந்த உயிரின் துணை கொண்டு அந்த உணர்வுகள் அணுவாகி
2.அணுவின் தன்மை கொண்டு உணர்ச்சிகளின் எண்ணங்களாக ஆகி… எண்ணத்தின் தன்மை கொண்டு
3.அதனுடைய வாழ்க்கையும் அதனுடைய செயலாக்கங்களும் எப்படி உருவாகிறது…? என்ற நிலையைக் காட்டுகின்றார் குருநாதர்.
அகஸ்தியன் கண்டுணர்ந்த உண்மையின் இயக்கங்களை காடுகளுக்கும் மலைப்பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று இப்படித்தான் எனக்குத் தெளிவாக்கினார் குருநாதர்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.