நாம் எல்லோரும் நல்லவரே…!

நாம் எல்லோரும் நல்லவரே…!

 

பத்திரிக்கை வாயிலாக இன்று நாம் படிக்கப்படும் போது எங்கெங்கோ நடந்து கொண்டிருக்கும் அதிர்ச்சியான செய்திகளைப் படிக்க நேருகின்றது.

அதில் எண்ணத்தைக் கூர்ந்து செலுத்தி விட்டால்… எங்கேயோ விபத்தானதைப் படித்தறியப்படும் பொழுது அந்த உணர்வு நமக்குள் சேர்த்து… உடனே அதிர்ச்சி… அல்லது பயம்… அல்லது வேதனை… இது போன்ற உணர்வுகள் நமக்குள் விளைந்து விடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை. உலகத்தை அறிந்து கொள்ள நாம் படித்தாலும் இந்த உணர்வுகள் நமக்குள் இயங்கி விடுகின்றது.

எதை நாம் படித்துத் தெரிந்து கொண்டோமோ அந்தச் செய்திகள் ஊழ்வினையாகப் (வித்துக்களாக) பதிவாகின்றது. அவ்வாறு படித்து நுகர்ந்து
1.எத்தனையோ பேர் வெளியிட்ட உணர்வலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து நமக்கு முன் சுழன்று கொண்டே இருக்கின்றது.
2.அதை மீண்டும் எண்ணும் பொழுது நமக்குள் பதிவான அதே நிலைகள் அலைகளாக மீண்டும் குவித்து நம்மை உணரச் செய்கின்றது
3.சாதாரண ஆண்டென்னாவின் இயக்கம் போல (அருகிலிருப்பதை இழுத்து) அந்தந்த உணர்ச்சிகளாக இயக்கி நம்மைச் செயல்படுத்தி விடுகின்றது.
4.ஆக… எந்த வேதனையைப் பட்டோமோ அந்த வேதனைகளை விளைவிக்கும் தன்மையாக வந்து விடுகிறது.

ஆக… உலகை அறிந்து கொள்ள நாம் பத்திரிக்கையைப் படித்த்தாலும் நடந்த சம்பவங்களை அறிந்து நுகரப்படும் பொழுது தீய விளைவுகளாக நமக்குள் வந்து நோயாக உருவாகி விடுகின்றது.

தவறான செயல்கள் எதை எல்லாம் செய்தார்களோ… “அங்கே அடித்தான் இங்கே திருடினான் இங்கே கொலை செய்தான்…” என்று
1.தன்னைக் காத்திட இத்தகைய செயலைச் செய்தார்கள் என்று உணர்வின் நினைவலைகள் நமக்குள் பதிவான பின்
2.அதையே திரும்பத் திரும்பப் படிக்க நமக்குள் அதுவே விளைந்து
3.எந்தத் தவறைச் செய்யக்கூடாது என்று நினைக்கின்றோமோ அதை நம்மையும் செய்யும்படி வைத்து விடுகின்றது.
இதைப் போன்ற நிலைகளில் இருந்து நம்மை மீட்டிக் கொள்வதற்கு அந்த மகா ஞானிகளின் உணர்வுகளை எடுத்து அதைத் துடைக்க வேண்டும் அல்லது தடுத்து நிறுத்த வேண்டும்.

குருநாதர் எனக்கு எவ்வளவு பெரிய சக்தியை உணர்த்தினாரோ அதனின் உணர்வின் ஆற்றலை நான் பருகி அவரைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது அந்த உணர்வுகள் ஊழ்வினையாக எனக்குள் (ஞானகுரு) பதிவானது.

அவரை நினைவு கொள்ளும் பொழுதெல்லாம்… அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியை நுகர்ந்து அந்த உணர்வை எனக்குள் பெருக்கிக் கொள்ள முடிந்தது.

நீங்கள் துயரத்துடன் எம்மிடம் வரும் போது “உங்கள் துன்பம் நீங்கிப் போகும்…” என்று சொல்லால் சொல்வதை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்து அதை மீண்டும் நீங்கள் நினைவு கூர்வீர்கள் என்றால் அந்தத் துன்பங்கள் நீங்கி மெய் ஞானிகளுடைய உணர்வு உங்களுக்குள் விளையத் தொடங்குகிறது.

ஒவ்வொரு நிமிடத்திலும் துன்புறும் உணர்வுகளை குருநாதர் எனக்குள் பாய்ச்சி அந்தத் துன்பப்படுத்தும் உணர்வுகளை நீக்குவதற்காக “விண்ணின் ஆற்றலை நீ எவ்வாறு பருக வேண்டும்…?” என்று உபதேசித்து அதனின் அனுபவபூர்வமான செயல்களை ஊட்டினார்.

அதனின் பக்குவம் கொண்டு நான் எடுத்துக் கொண்ட நிலையில் தான் 20 வருட காலம் அனுபவ ரீதியாக உலகைச் சுற்றி வந்தேன்.
1.மூன்று லட்சம் பேரைச் சந்திக்கச் செய்து அவருடைய உணர்வுகளை அது எவ்வாறு இயங்குகின்றது…? என்றும்
2.எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் அவர்கள் எதன் வழி எப்படி அவதிப்படுகிறார்கள்…? என்ற நிலையினை உணரும்படி செய்தார்.

அதே சமயத்தில் விஞ்ஞான அறிவால் விஞ்ஞானிகள் எப்படி பிறரை (ஆன்மாக்களை) நஞ்சு கொண்ட நிலைகள் கொண்டு இயக்குகின்றார்கள்…? அந்த ஆன்மாக்கள் எப்படிப் பதை பதைக்கின்றது…!

எதை அழித்திடும் உணர்வாகச் செலுத்தி விஞ்ஞானத்தைக் கண்டு கொண்டானோ அதனால் பாதிக்கப்பட்ட ஆன்மாக்கள் (விஞ்ஞான அறிவு கொண்டு செயல்பட்ட உயிரான்மாக்கள்) இறந்து… அதன் வழியில் விஞ்ஞான அறிவில் இவன் முன்னேறினாலும்
1.துன்புறுத்தப்பட்டு இறந்தவர்கள்… நஞ்சு கொண்ட ஆன்மாக்களாக எவ்வாறு உலகில் படர்ந்து கொண்டிருக்கிறது…? என்பதை
2.அனுபவ ரீதியிலே தெரிந்து கொள்வதற்காக குருநாதர் உலகம் முழுவதும் சுற்றும்படி சொன்னார்.

அதிலே பெற்ற அனுபவங்களைத் தான் உங்களுக்கு இப்பொழுது சொல்லிக் கொண்டு வருகின்றேன். இதை நீங்களும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply