
“எப்பொழுது… எந்த நிலையில் ஆன்மா பிரிந்தாலும்…” மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் இணைய வேண்டும்
விண்ணின் ஆற்றலும்… மனிதனுக்குப் பின் அடுத்த நிலை என்ன…? என்ற நிலையும்… நமது குருநாதர் காட்டிய வழியில் உபதேசித்து அதனை வலுக் கொள்ளச் செய்து கொண்டே வருகின்றோம்.
அவர் உணர்த்திய வழியில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையரின் உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைச் செய்யும் சக்திகளை நாம் அனைவரும் பெறுகின்றோம்.
அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் அனைவரும் அதிகாலை நான்கிலிருந்து ஆறரை மணி வரையில் ஒரு பத்து நிமிடமாவது துருவ தியானத்தில் இருந்து… துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைத் தனக்குள் வலுவாக்கி… எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வங்களான உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெருவீடு பெருநிலை என்ற நிலைகள் அடைந்து…
1.அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று “உந்தித் தள்ளினால்” ஒளிச் சரீரம் பெறுகின்றனர்…
2.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக விண்ணிலே வாழத் தொடங்குகின்றார்கள்.
3.”ரிஷிகளுடன் ரிஷிகளாக” அவர்கள் ஒன்றி வாழும் தகுதி பெறுகிறார்கள்.
4.அவர்கள் ஒளிச் சரீரம் பெற்ற பின் நம்முடைய நினைவாற்றல் மகரிஷிகளுடன் எளிதில் இணைகின்றது.
பின் ஒவ்வொரு நாளும் துருவ தியான நேரங்களில் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை எடுக்கும் பொழுது… நாம் விண் செலுத்திய குலதெய்வங்களின் உணர்வுகள் நமக்குள் இருப்பதால் அதனின் துணை கொண்டு சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வரும் சக்தியையும் துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் பெறும் தகுதியைப் பெறுகின்றோம்.
அவர்கள் முன் சென்றால் பின் அவர்கள் உணர்வின் துணை கொண்டு நாமும் அங்கே செல்கின்றோம்.
முதலில் மனித உடலை நம் முன்னோர்கள் பெற்றனர். அவர் உணர்வுடன் ஒன்றி அவரைப் போல நாமும் மனிதராக உருப்பெற்றோம்.
மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் உடலை விட்டுச் சென்ற ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தால்… அந்த உணர்வுடன் ஒன்றி நாமும் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.
1.வழி வழி செய்து கொண்ட இந்த நிலைகள் காலத்தால் மறைந்தே போய்விட்டது
2.ஆகவே ஞானிகள் காட்டிய அருள் வழியில் முன்னோர்களை விண் செலுத்துவோம்.
விஞ்ஞானத்தினால் பேரழிவு வந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் நமது நுகரும் சக்தியை… என்றுமே துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி வாழும் நிலையாக மாற்றி அமைத்தல் வேண்டும்.
எப்பொழுது எந்த நிலையில் இந்த ஆன்மா பிரிந்தாலும் அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்திலே இணையும் பருவமாக ஏற்படுத்தினால் ஒழிய மீளும் மார்க்கம் வேறு இல்லை.
காரணம்…
1.மீண்டும் மனித உடல் பெறும் காலம் எப்பொழுது…” என்று சொல்ல முடியாது… வெகு காலம் ஆகிவிடும்
2.நஞ்சு கலந்த உலகமாக மாறும்போது நஞ்சு கலந்த உணர்வைச் சேர்த்து விட்டால் அடுத்து மனிதனல்லாத உடலைத்தான் நாம் பெற முடியும்.
பின் அதிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும் என்றால் அதற்குள் “இந்த உலகம் இருக்குமா…?” என்று சந்தேகத்தைத் தோற்றுவித்துவிடும். ஆகவே
1.இன்று இப்போது நல்ல நினைவிருக்கும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் வலுவைச் சேர்த்து அதன் வழிகளில் நாம் வாழ்வோம்… வளர்வோம்…! என்று இதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த உலகமோ இந்த உடலோ நமக்குச் சொந்தம் அல்ல… ண்ஹாம் சொந்தமாக்க வேண்டியது அருள் உணர்வுகளைத் தான். இன்றைய செயல் நாளைய சரீரம்…!
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.