“நம் ஆன்மாவைத் தூய்மை செய்ய வேண்டியது எவ்வளவு முக்கியமானது…” என்று தெரிந்து கொள்ள வேண்டும்

“நம் ஆன்மாவைத் தூய்மை செய்ய வேண்டியது எவ்வளவு முக்கியமானது…” என்று தெரிந்து கொள்ள வேண்டும்

 

சில செடி கொடிகளை (வாசனையை) நாம் நுகர்ந்தால் மகிழ்ச்சியும் சில செடிகளை நுகர்ந்தால் மயக்கமும் வரும். அது போல்
1.நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை “எது அதிகமாக வருகின்றதோ” அதுவே நம் உடலில் மணமாக (ஆன்மா – மனம்) மாறும்.
2.இந்த மனம் அதிகமாகப் படும் பொழுது ஆன்மாவிலிருந்து சுவாசிக்கும் பொழுது சிறுகச் சிறுகக் கலந்து
3.அதனின் வலு குறையாது அந்த மண(ன)த்தை வளர்த்துக் கொண்டே இருக்கும்.

ஏனென்றால் நஞ்சுக்கு வீரிய சக்தி ஜாஸ்தி. காரணம் நாம் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் ஆகும் பொழுது என்ன செய்யும்…? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது ரோட்டிலே ஒரு பிச்சைக்காரன் நம்மிடம் வந்து மீண்டும் மீண்டும் “ஐயா…ஐயா…” என்று திரும்பத் திரும்ப கேட்டது நமக்குள் ஆழமாகப் பதிவாகின்றது.

காசை எடுத்துக் கொடுப்பதற்கு முன்… “இத்தனை தரம் கேட்கின்றானே…” என்று அந்த நேரத்தில் அவனை எப்படி வெறுத்தோமோ வீட்டிற்குள் வந்த பின் பையன் மீது வெறுப்படைவோம்.

பிச்சைக்காரன் இரண்டாவது தரம் மூன்றாவது தரம் எப்படிக் கேட்டானோ அதே போன்று நாமும் பையனிடம் திரும்பத் திரும்பச் சொல்ல ஆரம்பிப்போம். பையன் நம் மீது வெறுப்படைவான். வீட்டில் பெண்களிடம் சொன்னாலும் இனம் புரியாது அவர்களும் வெறுப்பார்கள்.

இதைப் போய் ஜோசியக்காரனிடம் சென்று இப்படி இருக்கிறது என்று சொல்லிக் கேட்டால்
1.உங்களுக்குக் கெட்ட காலம்… ஏழரை நாட்டான் சனி பிடித்திருக்கின்றான்…
2.உங்கள் நட்சத்திரப் பிரகாரம் இப்படித்தான் இருக்கிறது என்று அவன் சொல்வான்… உறுதிப்படுத்திவிடுவான்.

இதுகள் எல்லாம் நம்மை அறியாது உடலுக்குள் விளைந்த உணர்வுகளின் இயக்கம் தான். ரோட்டிலே ஒரு பிச்சைக்காரன் பிச்சை கேட்டான்.. நம்மை அவன் முறைத்து முறத்துப் பார்த்தான் நாம் பதிலுக்குப் பேசினோம் என்று இருப்போம்.

ஒரு பாலிலே பாதாமைப் போட்டாலும் அதில் சிறிதளவு காரத்தைப் போட்டால் யார் குடித்தாலும் காரமாகத்தான் இருக்கும். நல்ல சுவையை அது இயக்க விடுமா…?

நான் நல்லவன்… எல்லாவற்றையும் சரி செய்து விடுவேன் என்று சொன்னாலும் அவர் அந்தப் பாலைக் குடித்தாலும் இந்தக் காரம் தான் முன்னாடி வரும்.

நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த அந்த உணர்வு நமக்குள் இயங்கப்பட்டுக் குடும்ப வாழ்க்கையில் சிக்கல்… இனம் புரியாத வெறுப்பு…! தனக்கு முதியவர்கள் இருந்தாலும் இதே நிலைகள் உருவாக்கப்பட்டு வீட்டில் கலக்கங்கள் வந்துவிடும்.

ஏனென்றால்
1.எந்தப் பிச்சைக்காரன் உடலில் அந்த உணர்வுகள் விளைந்ததோ
2.“ஐயா……” என்ற இந்த சோகமான உணர்வு அவன் எப்படி வேதனைப்பட்டானோ
3.அது நமக்குள் ஆகி நம் உயிரிலே பட்டு இயக்கங்கள் ஆகும் போது அந்த உணர்ச்சிகள்
4.நம்மை… நம் குடும்பத்தை… மற்றவர்களை… எப்படி இயக்குகிறது…? என்பதைத் தெளிவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நமக்குள் அது வித்தாகி அதன் வளர்ச்சிக்கு வரும் பொழுது இந்த நிலையைத் தான் செயல்படுத்தும். இதெல்லாம் இயற்கையினுடைய சில செயல்கள்.

தொழில் செய்யும் இடத்திலும்… நான் முதலாளியாக இருக்கின்றேன்…. நிர்வாக நிமித்தமாகச் சுற்றிப் பார்க்க வருகின்றேன் என்று வைத்துக் கொள்வோம்.

இதே உணர்வின் வேகங்கள் அங்கேயும் சொல்லாக வரும். வேலை செய்யும் அந்தத் தொழிலாளி செவிகளில் இது பட்டபின் நம்மை உற்றுப் பார்ப்பான்.

பார்க்கப்படும் பொழுது பிச்சைக்காரனிடம் எந்த வெறுப்படைந்தோமோ அவன் மீது பட்டு முதலாளி என்று அச்ச உணர்வுகள் இருப்பினும் அவனை பலவீனப்படுத்தும் நிலையே அங்கே வரும்.

முதலாளி வந்தார் பார்த்தார் என்று சென்றாலும்… அடுத்த கணம் அகன்ற பின் அந்த வெறுப்படைந்த உணர்வுகள் அவன் இயந்திரத்திலோ மற்ற நிலையில் அவன் வேலை செய்யப்படும் பொழுது அல்லது கணக்குகளை உற்றுப் பார்க்கப்படும் பொழுது
1.இவன் உணர்வுக்கொப்ப கண்ணின் புலனறிவு ஓடும்.
2.ஒரு இயந்திரத்தை அவன் இயக்குகிறான் என்றால் இயந்திரத்திற்குள் இந்த உணர்வலைகள் பட்டு
3.அந்த காந்தப் புலனறிவால் துரித நிலையில் இயக்கப்பட்டு அதனுடைய ஈர்ப்புத் தன்மை மாறி
4.நாம் எந்த வெறுத்த உணர்வு கொண்டு உற்று நோக்கினோமோ அது இயக்கப்பட்டு (ஏனென்றால் எல்லாவற்றிலும் காந்தப்புலன் உண்டு)
5.அந்த இயந்திரம் சீரற்ற நிலையாகி… “உற்பத்தியாகும் பொருள் தரமில்லாது பாதிப்படைந்து விடும்…”

ஆக முதலாளி பார்த்தார் என்றாலும் வேலை செய்கின்றவரின் உணர்வுக்குள் அது ஊடுருவி அங்கே தவறுகளை உண்டாக்கி விடும் நம்முடைய சோர்வான உணர்வு மற்றவர்களின் செயல்களுக்குள் ஊடுருவி அதற்குத் தக்கவாறு நம் தொழிலையும் அது பாதிக்கும்.

தவறு செய்யவில்லை…! சந்தர்ப்பத்தால் நமக்குள் விளைந்த வெறுப்படைந்த உணர்வுகள் “அங்கே மற்றவர்களுக்குள் கலந்து கலந்து…” நம்மை உற்று நோக்கி எதிர்பார்ப்பவரின் உணர்வுக்குள் இயங்கி… “நமக்கே எதிரியாக்கிவிடும்…”

அதே சமயம் அந்த உணர்வு கொண்டு வீட்டிற்குள் நாம் அமரும் இடத்திலும் இது அதிகமாகப் பதிவாகின்றது.
1.அதிலே சூரியனின் காந்த சக்தி (வெப்பம்) படரப்படும் போது அது அலைகளாக் கிளர்ந்து அங்கே (வீட்டிற்குள்) பரவத் தொடங்கும்.
2.ஆன்மாவில் அது கலந்து அதிகமாக அதையே நினைவு கூறும் தன்மை வந்துவிடும்.

தொழிலில் கஷ்டமும் நஷ்டமும் எடுத்துக் கொண்ட பின்… எதை எதை எல்லாம் உடலில் விளைவிக்கின்றோமோ… அந்த உணர்வுகள் வீட்டிலே அமர்ந்திருக்கும் போது ஆழமாக அங்கே (தரைகளிலும் சுவர்களிலும்) பதிந்து
1.அதுவே மீண்டும் மீண்டும் நினைவாற்றலாக வரும்… சங்கடத்தையும் சலிப்பையும் உண்டாக்கும்.
2.இதையெல்லாம் நீக்க வேண்டுமா இல்லையா…! இதை யார் நீக்குவது…?

சற்று சிந்தித்துப் பாருங்கள்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply