
“மனம் தான் நம்முடைய பகைவன்…!”
காலம் குறுகியது என்று பல முறைகள் உரைத்திட்டோம் அதை எத்தனை பேர் அறிவில் தெளிந்து கொண்டனர்…?
பேரண்ட சூட்சும இரகசியத்திற்குள்… காலத்தின் நிலையால்
1.இதுவரை கடந்து சென்றிட்ட வெகு நீண்ட கால நிகழ்வுகள்…
2.எதிர் கொள்ள இருக்கின்ற வெகு நீண்ட காலத்தின் நியதிகள்…
3.இதிலே உன்னுடைய பங்கு எவ்வளவு என்று கூற முடியுமா…?
பேரண்டத்தின் அளவீட்டில் மானிடப் பிறப்பு என்பது அணுவிற்குள் அணுவே. ஈர்த்து உயர்த்திக் கொண்டிடும் செயல் வேகம் கண்டாயா…?
மனிதன் என்ற ஜீவ பிம்ப வாழ்க்கையின் குறுகிய காலத்தினை அறிந்து கொண்டு காலச்சக்கரத்தில் அனைத்தும் மறைந்துவிடும் மாயை…! அதுவே புனிதமாகத் தோன்றும் செயலின் சித்து. சித்து என்பது எதுவப்பா…?
ஜடப்பொருளாகப் புறப்பொருள் காட்டுவது சித்து விளையாட்டு.
சிருஷ்டியின் சித்து சகலமாய்ச் சகலமும் தோன்றிடும்… ஜீவ பிம்பம் காட்டிடும் அனைத்து பொருட்களும்… மற்றும் அதனுள் அடங்குவது ஜடப்பொருள்களும் தான்.
சித்தன் நிலை பெற்றால் சித்து நிலை விளங்கும்.
சகலமும் பொருள்கள் என்றே உரைத்திட்டோம். காலம் குறுகியது என்பதை உணர்ந்து விட்டால் நாம் உரைத்த சகல பொருட்களின் தன்மையும் விளங்கும்.
தோன்றி மறையும் அனைத்தும் வேகம் வேகம் வேகம் தான்…! நிலை பெற்றிடும் பொருள் எது…?
மனித மனத்தின் சிந்தனை ஓட்டம் செயல்படுவதை ஊன்றிப் பார்த்திருப்பாய். இந்தப் புற உலகத்தில் வாழும் வாழ்க்கைக்கே பொருள் தேடுகின்ற மனிதனின் ஆசைக்கு எல்லை உண்டா…?
1.பொருள் தேடும் சிந்தனையில் பேராசை வயப்படுகின்றான்… அந்தப் பொருளுக்காக உலகினை நேசிக்கின்றான்.
2.பொசுக்… என பொருள் மறைந்தால்…? உலகின் கண் பகைமை காட்டுகின்றான்.
3.மனித மனத்தின் முரண்பாடே ஒரு பொருளாக இரு செயல் நிகழ்வுற்று
4.அந்த இரண்டிலும் பாதிப்புக்கு உள்ளாவது பகைதான்… “மனது தானப்பா பகை…!”
இவைகளில் உழலுகின்ற மனிதன் “நிற உலகு…” ஒன்று இருப்பதை அறியவா போகின்றான்…? அந்த வட்டச் சுழற்சியில் இருந்து விடுபட்டு உயரவே இவ்வளவு “கடுமையாக உரைக்கின்றோம்…”
நிற உலகு என்பது “ஒளிதானப்பா…”
இகழ்ந்துரைக்கும் நிலையிலிருந்து விடுபட வேண்டும். உலகம் பழிக்கின்ற செயல் இது என வழிகளாக நெறிமுறைகள் வகுத்துத் தந்த மாமகான்கள்… நன்நெறியில் வளர்ப்பாக்கும் செயலில் மனிதன் தெய்வநிலை பெற்றிட மெய்ஞானச் சுடராக விளங்கிட போதனைகள் உரைத்திட்டனர்.
இகழ்ந்துரைக்கும் நிலை மாற்றுகின்ற மனம் வேண்டி உறுதியாக நிலை நின்று மனிதன் செயல் கொண்டால் “உட்பொருள்… தன் பகை நீக்கும்…”
பாடநிலையின் ஆரம்பத்தில் கொடுத்த வினாவிற்கே வருகின்றோம்.
1.மனிதன் புறப்பொருளைப் பிரிந்த ஏக்கத்தால் பேராசையின் அதிர்வு கொண்டிட்ட ஆவேசம்
2.வெறுப்பின் சிந்தனையில்… புற உலகினைப் பகைப்பதாக எண்ணித் தன் மனதையே தான் பகையாக்கி
3.வாசம் செய்திடும் இறை சக்தியை… உட்பொருளை… அகத்தின் அருட் சிந்தனையை… பகை உணர்வு கொண்டுவிடுகின்றான்.
அப்படிப் பகை கொள்கின்ற (தனக்குள்… தனக்குத் தானே) செயலின் வீரியம் எந்த நிலை பயக்கும்…? என உணர்ந்திருப்பாய்.
1.”உட்பொருள்…” தன் பகை நீக்கும் வழி வகைதனைக் காட்டி விட்டோம்
2.தியானத்தின் மேன்மையை அக உணர்வால் உண்ணல் வேண்டும்
சித்து… சடம்… இரண்டிலும் “ஈஸ்வர ரூபம்…” மனித மனத்தின் அகலவொண்ணா பொருள் அதுவே. அதைப் பெற்று உயர்ந்திட எனது ஆசிகள்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.