
சித்தனாக… மகரிஷியாக… ஆகும் செழுமை
பரிசுத்தம் தங்கும் மனம் என்பது எதுவப்பா…?
தங்கத்தைச் சுத்தம் செய்யும் ரசம் (திரவகம்) தங்கத்தின் செழுமையைக் காட்டும். “மகரிஷிகளின் அருள் சக்தி” பரிசுத்த மனதைத் தெளிவாக்கிடும் உண்மையின் நிலை ஆகும்.
1.“ஈஸ்வரா…!” என்று ஒலி நாதத்தைக் கூட்டி… உன்னுள் உன்னை நீ தெளிந்த விதம்
2.உலகத்தையே உன்னைப் பார்த்திடச் செய்துவிடும்.
3.யாம் சொன்ன தியான வழியைக் கடைப்பிடிக்கும் போது உன் உள்நிலை சுடர்விட்டுப் பிரகாசிக்கும்.
அதை யாம் (ஈஸ்வரபட்டர்) அறிவோம்.
பாய்மரக்கப்பலில் “விரிக்கபட்ட பாய்”
1.காற்றின் வேகத்தால் கடலில் படகைச் செலுத்துவதோடு மட்டுமல்லாதபடி…
2.சில நேரத்தில் படகையே நிலைகுலையைச் செய்திடும் செயலும் உண்டு.
அது போல்
1.அறிவின் விவேகம் (ஆறாவது அறிவு) அலைக்கழித்திடாமல் சமன்படுத்திட பழியைக் காண்கின்றது
2.காண்பதோடு செயல்படுத்தும் காரியமும் ஆற்றுகின்றது.
அறிவின் பரிணாம வளர்ச்சி விஞ்ஞான அறிவினால் இயந்திர பாகங்கள் பொருத்தப்பட்டு கடலோடும் வழிவகுக்க அறிவின் நிலைக்களன் வித்தாகின்றது.
மகரிஷிகளின் அருள் பார்வை உன் மீது விழும் பொழுதே அது சத்திய சோதனையின் துவக்கம் என்று நீ எண்ணுவாய். அது சோதனை அல்லவப்பா…!
தாய் தன் குழந்தையைப் பரிந்து எடுக்கும் பாசத்தின் விளைவு… தவழ்ந்திடும் குழந்தை தானே நடந்திடும் செயலில் கொள்கின்ற அனுபவ நடைமுறை போல்…
1.மகரிஷிகளின் ஒளி சக்திகளை எந்தெந்த உயிராத்மாக்கள் தன் நிலையை உயர்த்துவதற்காக வேண்டி ஏக்கமாய் ஏங்குகின்றதோ
2.அந்த மகான்களின் எண்ணத்துடன் தானும் ஒன்றி…
3.அவர்களுடன் இணைந்து ஜெபித்திடும் செயலில் தியானிக்கின்றதோ…
4.அந்த நல்வழி நிச்சயம் அங்கே சிறக்கும்.
உலக வாழ்க்கை நடைமுறையிலும் “பொன் (தங்க) நகை படும் பாடு… உன் பாடு…!” என்ற சூட்சுமப் பொருளாக உணர்த்தி வந்ததனை…
1.உம்மைப் பக்குவப்படுத்திட முனைந்ததன் பொருளாக
2.நீ அறிய வேண்டியது முக்கியம்.
காப்பிய ரிஷி தசரதன் பெற்றுக் கொண்ட “புத்திர சோகம்” என்று சுட்டிக்காட்டப்பட்டதை…
1.உறவின் வழிமுறைக்குப் போதனைப்படுத்தியதாக உணர்ந்து
2.சிந்தனையில் அதை நீ சீர்தூக்கிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மனதின் விசாலம் எது…? தயை என்ற சொல்…!
உலகளவிற்கு மனதிற்குள் இடர்கள் வந்தாலும்… அதுவும் ஒரு கடுகு அளவு தான். ஆனால் சித்தன் ஆகும் மனதின் விசாலம் எத்தனை பெரியது…? சிந்தனை செய்…!
1.முயற்சி வினையாக்கும்
2.விடாமுயற்சி திருவினைப் பயனாகும்.
ஆஞ்சநேயன் விஸ்வரூபம் காட்டினான்… ஆகாயத்தில் நீந்தினான்… அணுவளவாய் ஒரு மாறினான்… நெருப்பில் உலவினான்… நீரில் மிதந்தான்… உடலையே சிறகு போல் எளிதாக ஆக்கினான்… கணம் கொண்ட பக்குவ கதியாக்கினான்… பேரின்ப லயத்தை அனுபவித்தான்…! என்று காட்டுவதெல்லாம்
1.கூறிடும் பொருளின் அடிப்படை நிலைகளின்
2.தியானம்… தியானம்… தியானமே…!
கண்டவன் சக்தியை… மகரிஷிகளின் செயல்பாட்டை… “புறம் கூறி” செயலின் செயல்பாட்டை… அணை போட்டுத் தடுக்க முடியாது. ஆனால் மகரிஷிகள் “அறம் கூறினால்…” நிலைமை என்ன ஆகும்…? அவர்கள் அன்பு மகான்களப்பா.
நம் கைகளைக் கொண்டு சூரியனை மறைத்து விட முடியுமா…? முடியாது…! ஆனால் “நான் மறைத்துவிடுவேன்…” என்று அதைச் செயல்படுத்தித் தனக்குத் தானே மறைந்துக் கொண்டால் அது எண்ணத்தின் மாயை தான்.
ஒருமையைப் பலப்படுத்திடும் செழுமை… சித்தர்கள் மகரிஷிகளின் செயல். அதற்குள் ஐந்தும் அடங்குதல் என்பது விண் செல்ல வேண்டிய பாதையைக் காட்டும் தெய்வீக நிலை.
1.பூக்களின் மணத்தை நுகர்ந்திடும் மன நிலையே
2.யாம் சுட்டிக் காட்டும் இந்த எளிய தியானத்தில் உணர்ந்து கொள்ள வேண்டிய “ஆரம்ப அனுபவ நிலை…”
மகோன்னத நிலையே ஆத்ம சம்பூரணம்…!
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.