இன்று இருக்கும் “கால மாற்றங்கள்” அனைத்துமே மனிதனால் உருவாக்கப்பட்டது தான்

இன்று இருக்கும் “கால மாற்றங்கள்” அனைத்துமே மனிதனால் உருவாக்கப்பட்டது தான்

 

1.அகஸ்தியன் பெற்ற பேரருளும்… இருளை அகற்றிடும் அருள் ஞானமும்…
2.அகஸ்தியன் துருவனான பின் துருவத்தின் வழி வானுலக ஆற்றலை அவன் நுகர்ந்த சக்திகளையும்
3.2000 சூரியக் குடும்பப் பிரபஞ்சங்களில் எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றலை அகஸ்தியன் ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்தப் பேரருளையும்
4.நாங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று கூட்டுத் தியானங்களிந் மூலம் வலுப்படுத்துவோம்.

அதன் மூலம் அகஸ்தியன் எப்படி இந்த உலகைக் காத்தானோ… தன் தாய் தந்தையைக் காத்தானோ… அதே போல விஞ்ஞான உலகில் இன்று வரும் பேரழிவிலிருந்து எல்லோரையும் காக்கலாம்… உடலுக்குப் பின் நாம் ஒளியின் சரீரம் பெறலாம்.

விஷத்தன்மைகள் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட்டமைப்பாக இருந்து வலுவான நிலைகள் கொண்டு “நீங்கள் இடும் மூச்சலைகளால்” ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு வீட்டிலும் இதைச் செயல்படுத்தும் போது… வீட்டுக்குள்ளோ தெருவிற்குள்ளோ கிராமத்திற்குள்ளோ தீமைகள் வராதபடி… ஊரையும் வீட்டையும் உங்களையும் காக்கக்கூடிய சக்தியாக வருகின்றது.

இன்று வரக்கூடிய கால மாற்றங்கள் அனைத்துமே மனிதனால் உருவாக்கப்பட்டது தான். மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த நிலைகளிலிருந்து மீட்க அருள் ஞானிகள் உணர்வை நாம் எடுத்தே ஆக வேண்டும்.

ஞானிகள் இருளை அகற்றி ஒளியின் சரீரம் பெற்ற அருள் சக்திகளை நாம் அனைவரும் எடுத்து அந்த உணர்வை வளர்த்து
1.நம்மைக் காத்து உலகைக் காத்திடும் சக்தியாக நாம் உருவாக்குவோம்.
2.மெய் ஞானத்தின் உணர்வுகளை நமக்குள் வளர்ப்போம்.
3.இருளை அகற்றிடும் உணர்வுகளை இந்த உலகில் பரப்புவோம்.
4.விஞ்ஞான உலகில் இருள் சூழ்ந்த நிலைகளை அகற்றுவோம்
5.அருள் உணர்வுகளை நம் பூமியிலே பரப்புவோம்.

ஆகவே “மெய் ஞானத்தை உருவாக்க முடியும்…” என்று உறுதி கொண்டு நமது குருநாதர் காட்டிய வழிகளில் நாம் வாழ்வோம் என்றால் பிறவி இல்லாத நிலை அடைகின்றோம்.

நாம் இடும் மூச்சலைகளால் இந்த உலகை அருள் ஞான உலகமாக மாற்றுவோம். மதம் இனம் மொழி என்ற பேதங்களினால் தீவிரவாத உணர்வுகள் கொண்டு மனிதனையே கொன்று அழித்து ரசித்துக் கொண்டிருக்கும் நிலையிலிருந்து மனிதர்களை விடுபடச் செய்வோம்.

அவர்களால் உருவாக்கப்பட்ட விஷத்தன்மைகளை எல்லாம் இந்தக் காற்று மண்டலத்தில் இருந்து அகற்றச் செய்வோம். துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளைப் பெருக்கப் பெருக்க அது ஓடி ஒடுங்கியே விடும்.

இந்த உணர்வின் தன்மை கூட்டக் கூட்ட… காலையில் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அந்த இருளை எல்லாம் மாற்றிவிடும். இந்தப் பூமியும் புனிதமாகும்… பூமிக்குள் அருள் உணர்வுகள் பெருகும்.

குரு காட்டிய அருள் வழியில் இனி வரும் ஆண்டுகளை மகிழ்ச்சிக்குரியதாக்கி
1.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அனைவரையும் இணைந்து வாழச் செய்யும் ஆண்டாகவும்
2.பிறவில்லா நிலைபெறும் ஆண்டாகவும்
3.இருளை அகற்றிடும் ஆண்டாகவும்
4.நஞ்சினை வென்றிடும் ஆண்டாகவும் நாம் உருவாக்குவோம்.

கூட்டுத் தியானத்தின் மூலம் நாம் எடுக்கும் முயற்சிகள் இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மைகளை மாற்றி… அருள் உணர்வுகளைப் பெருக்கி… இந்த உலகில் அசுர உணர்வுகளை அகற்றிடும் சக்தியாக நாம் பெறுவோம்.

மெய் ஞானத்தை வளர்த்து அருள் ஞானத்தை வளர்க்கும் மெய் உலகை “நாம் உருவாக்குவோம்…!”


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply