தியான வளர்ச்சியில்… நம் மூச்சலைகள் மோதினாலே அனைத்தும் ஒளியாக மாறும்

தியான வளர்ச்சியில்… நம் மூச்சலைகள் மோதினாலே அனைத்தும் ஒளியாக மாறும்

 

கணவன் மனைவியாக வாழ்பவர்கள் பாசத்துடன் இருப்பார்கள். அவர் கடுமையாக உழைத்துக் கொண்டே இருக்கின்றார். ஆனால் அவருடன் வேலை செய்பவர்கள் எல்லாம் தொல்லை கொடுக்கின்றார்களே… என்று எண்ணுவார்கள்.

இருந்தாலும் மனைவி இப்படி எண்ணி இந்த உணர்வைச் சமைத்து வெளிப்படுத்தினால் ஆண்கள் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் சுத்தமாக அது செயலற்றதாக மாற்றிவிடும் (பாசமாக இருப்பவர்களுக்குள்).

1.கணவருக்கு இந்த மாதிரித் தொல்லை வருகின்றதே… இப்படிச் செய்கின்றார்களே…! என்ற உணர்வை எடுத்தால்
2.கணவனை நினைக்கும் போதெல்லாம் இந்த உணர்வுகள் பாய்ந்து அவருடைய திறமைகளை எல்லாம் குறைத்துவிடும்.

இதையெல்லாம் மாற்ற நாம் அருள் ஒளி பெற வேண்டும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கணவருடைய உடல் முழுவதும் படர்ந்து அவர் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும்
2.எங்கள் இரு மனமும் ஒன்று பட வேண்டும்… இரு உயிரும் ஒன்றாக இணைய வேண்டும்
3.இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று
4.இரண்டு பேரும் ஒரு ஐந்து நிமிடமாக எண்ணிப் பழக வேண்டும்

அதிகாலையில் முழிப்பு வரும் பொழுது இது போன்று செய்து பழக வேண்டும்.

நான்கு மணிக்கு மேல் உங்களை அறியாமலே அந்த முழிப்பு நிச்சயம் வரும். அந்த நேரத்திலே சுதாரித்து இந்த சக்தியை இரண்டு பேருமே எடுக்க வேண்டும்

பெண்கள் தங்கள் கணவருக்குக் கிடைக்க வேண்டும் என்றும் ஆண்கள் தங்கள் மனைவிக்கு அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அவர்கள் உயர்ந்த சக்தி பெற வேண்டும். குரு அருளைப் பெற வேண்டும் என்று இந்த உணர்வுகளை அதிகமாகச் சேர்த்து அவர்கள் பார்வையில் தீமை அகற்றும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் அவர்கள் பார்ப்போர் எல்லாம் நலம் பெற வேண்டும் என்று செலுத்திப் பாருங்கள்

அவர் சொல்லிலே இனிமை பெற வேண்டும். அவர் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும். அவரைப் பார்ப்பவர் எல்லாம் அந்த புனித நிலை பெற வேண்டும் என்று கணவன் மனைவிக்கு எண்ண வேண்டும். இதே போல மனைவியும் கணவனுக்கு எண்ண வேண்டும். ஒரு இரண்டு நிமிடமாவது இதை எண்ண வேண்டும்.

அதிகாலையில் இவ்வாறு செய்து விட்டு அடுத்து எழுந்தபின் ஒரு ஆனந்தமான நிலையாக இருக்கும்.
1.இது போன்று தொடர்ந்து செய்து வந்தால் வீட்டிலே பளீர்… பளீர்… என்று வெளிச்சம் வரும்
2.உங்கள் உடலில் இருந்து வீட்டிற்குள்ளேயே அது படரும்.

ஏனென்றால்
1.நாம் அருள் சக்திகளை நுகரப்படும் பொழுது அது பட்ட உடனே மோதி இருளை நீக்கி
2.அந்த வீட்டிற்குள் பளீர்… என்று ஒரு வெளிச்சம் வரும்… பார்க்கலாம்.

ஏனென்றால் உங்கள் மூச்சலைகள் பட்ட உடனே இது போன்ற நிலைகள் நிச்சயம் வரும்.

சூரியன் தனக்குள் விளைந்த பாதரசத்தால் தன் அருகில் வரும் மற்ற உணர்வுகளுடன் மோதி விஷத்தைப் பிரித்து விட்டுப் பளீர்… என்று இந்த பிரபஞ்சம் முழுவதற்குமே வெளிச்சமாகின்றது.

இதே போன்று நாம் வீட்டிற்குள் செய்தோம் என்றால் நம் உடலில் எடுத்துக் கொண்ட துருவ நட்சத்திரத்தின் சக்தியுடன்
1.தீமை என்ற உணர்வுகள் மோதிய பின் அது விலகிப் போகும்
2.நம் உடலில் ஒரு விதமான வெளிச்சம் வரும்
3.புதுவிதமான ஒரு மகிழ்ச்சி வரும்… அனுபவத்தில் பார்க்கலாம்.

ஒவ்வொரு நாளும் இதைச் செய்து பழகுங்கள். இப்படிச் செய்து வந்தீர்கள் என்றால் நான் கொடுத்த ஞான வித்திற்கு “நீங்கள் சக்தி ஊட்டுகின்றீர்கள்…” என்று அர்த்தம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply