மனிதனின் சுவாசம் செல்லும் பாதையைச் சீரமைக்காதபடி எந்தச் சாங்கியமோ சாஸ்திரமோ செய்தாலும் அது வேலை செய்யாது

மனிதனின் சுவாசம் செல்லும் பாதையைச் சீரமைக்காதபடி எந்தச் சாங்கியமோ சாஸ்திரமோ செய்தாலும் அது வேலை செய்யாது

 

மாற்றி அமைக்கும் சக்தி பெற்றது மனிதனின் ஆறாவது அறிவு. ஆனால் நாம் இப்பொழுது என்ன செய்கின்றோம்…?

வாஸ்து சாஸ்திரத்தைப் பார்க்கின்றோம்… ஜோதிடம் பார்க்கின்றோம்.. நல்ல நேரம் வந்ததா…? கெட்ட நேரம் வந்ததா…? என்று பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

தவறாக நினைக்காதீர்கள்… நம்மை அறியாது எந்தெந்த அளவுக்கெல்லாம் நம்மை இழுத்துச் சென்று இருக்கின்றது…? என்று கவனித்துப் பார்த்தால் தெரியும்.

“வாஸ்து சாஸ்திரம் பார்ப்பவர்கள்…”
1.உங்கள் வீட்டு வாசல் கொஞ்சம் ஒதுங்கி இருக்கின்றது
2.இதை இடித்துவிட்டு “வாஸ்துப்படி…” நேராக இப்படி வையுங்கள் என்பார்கள்.
3.கஷ்டம் வந்ததற்கு காரணமே இதுதான்…! ஆகவே கட்டிடத்தை இடித்து விட்டு இப்படி மாற்றி வையுங்கள் என்று அவர்கள் சொல்வதைக் கேட்டுச் செயல்படுத்துவோம்.

ஒரு ஓரத்தில் கொஞ்சம் இப்படி மாற்றினாலே… மறைத்து விட்டால் அது நல்லது என்பார்கள்.

அவர் சொல்வதை எல்லாம் நாம் பதிவு செய்து கொள்கின்றோம். அதை ஏற்றுக் கொள்கின்றோம். காசைச் செலவழித்து எல்லாவற்றையும் செய்து வைக்கின்றோம். “இது தான் வாஸ்து சாஸ்திரம்…”

ஆனால் அதற்கு பின் என்ன நடக்கிறது…?

குடும்பத்தில் குழந்தைகள்… உடன் பிறந்தவர்கள் என்று ஏழு பேர் எட்டுப் பேர் இருக்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். எல்லோருக்கும் அன்பாகப் பண்பாக உதவி செய்பவர்கள் தான் நாம்.

இருந்தாலும் சந்தர்ப்பம்… ரோட்டிலே நடந்து செல்கிறோம். அப்பொழுது ஒரு விபத்தாகி ஒரு வாகனம் வேறொருவர் மீது ஏறி விடுகின்றது.

பார்த்த்தும் “ஆ….ஆ…” என்று அலறி விடுகின்றோம். அதனால் பிரமை பிடித்த மாதிரி ஆகி விடுகின்றது. பிரமையானால் என்ன ஆகும்…?
1.இந்த அழுத்தம் கவன நரம்புகளை வீங்கச் செய்து விடுகின்றது.
2.விரிவடைந்த பின் அது பழையபடி அடங்குவதில்லை.

இதைச் சரி செய்ய எத்தனையோ வைத்தியங்கள் நாம் பார்க்கின்றோம் ஆனால் மற்றவர்கள் பாசமாக இருப்பவர்கள் இங்கே வந்துவிடுவார்கள். ஐயோ… என் பிள்ளைக்கு இப்படி ஆகிவிட்டதே… பிள்ளைக்கு இப்படி ஆகிவிட்டதே… அல்லது என் தம்பிக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று எல்லோரும் எண்ணுவார்கள்.

தொழில் செய்யும் நிலைகளில் தான் இந்தக் குடும்பம் இருக்கின்றது. இந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சிக்குப் பின் தொழிலைச் சரியாக அல்லது சீராகக் கவனிக்க முடியுமா…?

இல்லை.

சங்கடமான உணர்வுகள் இங்கே பரவப்படும் பொழுது நன்றாக இருந்த வியாபாரம் இந்தச் சங்கடத்தினால் மந்தமாகும். உடனே நாம் என்ன நினைப்போம்…?

கெட்ட காலம் வாருங்கள்…! ஒரு விபத்து ஆனது எல்லாம் இப்படி ஆகிவிட்டது. வரிசையிலே இப்படியே தொழில் எல்லாம் கெட ஆரம்பிக்கும்.

கஷ்டமாக இருக்கும் அந்தச் சூழ்நிலையில் நாம் கடன் கொடுத்தவர்களிடம் கூடப் பணத்தைத் திருப்பிக் கொடுப்பா என்று கேட்டால் நான் தான் தருகிறேன் என்று சொன்னேனே அதற்குள் என்ன…? என்பார்கள்.
1.இல்லை… இங்கே குடும்பத்தில் நோயாகி விட்டது என்று சொன்னால்…
2.எங்களுக்கும் தெரியும்…! பணம் வந்தால் தானே கொடுக்க முடியும்…! என்று அந்த நேரத்திலே “எதிர்ப்புகள்…” வரும்.

அப்போது இந்த வாஸ்து சாஸ்திரம் எங்கே போகும்…?

ஆனால் இந்தக் குடும்பம் முதலிலே நன்றாக இருந்தது தான். ஆனால் இது போன்று சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதனால் குடும்பத்தில் தொழில் நஷ்டம் எல்லாம் வந்து விடுகின்றது.

வாஸ்து சாஸ்திரம் செய்த பின் இப்படி வந்தால் இதையெல்லாம் யார் சரி செய்வது…? அந்தச் சாஸ்திரம் நமக்கு உதவி செய்யுமா…?

ஆகவே… திருத்தி அமைக்க வேண்டும் என்றால் எப்படி…?

வாழ்க்கையின் சந்தர்ப்பத்தில் ஒரு அதிர்ச்சியான நிகழ்வு வந்தால் அதை மாற்றிடும் நிலையாக எப்படிச் செயல்பட வேண்டும்… என்ற நிலையில் அதிர்ச்சியை மாற்றி அமைக்கும் “அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்றால்” இந்த நிலை வராது.

அதை விட்டு விட்டு வீட்டின் வாசல் தெற்கே இருக்கின்றது… வடக்கே இருக்கின்றது… என்று துருவத்தைப் பார்த்து எத்தனையோ சொல்லிக் கொண்டிருந்தாலும் ஒன்றும் நடக்கப் போவது இல்லை.

1.ஏனென்றால் நமக்குத் துருவம் (திசை) நாம் சுவாசிப்பது (வாசி – வாஸ்து) தான்
2.அதன் வழி நுகரப்படும் பொழுது அத வழிதான் இந்த வாழ்க்கையில் எல்லாமே செயல்படுத்துகின்றது.
3.அதை (சுவாசிப்பதை) எப்படி மாற்றி அமைக்க வேண்டும் என்பது தான் முக்கியம்…!

நியூமராலஜி என்று அதையும் சொல்வார்கள். கடையில் நஷ்டமாகின்றது குடும்பத்தில் சிக்கல் வருகிறது என்றால் உங்கள் பெயரில் உள்ள எழுத்தை இப்படி மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்… இது இராசியாக இருக்கும் என்பார்கள்.

அவர் சொல்வதை நம்பிச் செய்தால் நான்கு நாளைக்கு நன்றாக இருக்கும். இப்போது பரவாயில்லையா…? என்று கேட்பார்கள்

அடுத்தாற்போல்
1.நண்பர்கள் யாராவது சங்கடப்பட்டு வந்தால் இந்த உணர்வுகளை நுகர்ந்த பின்
2.கடை சரியாக நடக்கவில்லை என்றால் இந்த நியூமராலஜி எங்கே செல்லும்…?

இது எல்லாம் மனிதர்கள் நமக்கு நாமே ஏமாற்றிக் கொள்கின்றோம் என்று தான் அர்த்தமே தவிர
1.இயற்கையின் உண்மையிலிருந்து
2.நாம் தப்ப முடியாத நிலைகள் கொண்டு தான் வாழ்கின்றோம்.

Leave a Reply