
“பூதம் காத்த புதையல்” – ஈஸ்வரபட்டர்
அன்றாட அரசர்கள் முதல் இன்று வரை நாம் எந்த நிலை கொண்டு வாழ்கின்றோம்…? ஒவ்வொரு உயிரினங்களும் எப்படி எப்படி வாழ்கின்றன…? என்பதனை முன் பாடத்தில் சிறுகச் சிறுக அளித்து வந்த பாடத்தினையே விவரித்தே அளிக்கின்றேன் (ஈஸ்வரபட்டர்).
“பூதம் புதையல் காத்த கதை…” என்று கதையாகக் கேட்டிருப்பீர். பூதம் எங்குள்ளது…? பேய் பிசாசு என்பது என்ன…? என்பதனை அறிந்து வாழ்ந்திடவே இந்நிலையில் சொல்லி வருகின்றேன்.
பல நூறாயிரம் வருடங்களுக்கு முன் அன்றாண்ட அரசர்களின் நிலையெல்லாம் என்ன…?
தன் நாட்டைக் காக்க தன் நாட்டு மக்கள் வாழ்வதற்கு மேலும் மேலும் பொருள் சேர்க்க ஒரு நாட்டுடன் ஒரு நாடு சண்டையிட்டே பல நாட்டைப் பிடித்து பேரரசர் ஆக வேண்டும் என்ற வெறி நிலை கொண்டு அவ்வரசனின் மன நிலையில் ஒரு அரசுடன் மற்ற அரசு சண்டை இடும் நிலையில் பல உயிர்ப் பலிகள் நடந்தது.
அவ்வுயிர்ப் பலி நடந்த இடத்தில் அவ்வாத்மாக்களின் நிலையென்ன…?
குரோத நிலையில் வெறியுணர்வுடன் பல ஆத்மாக்கள் சென்றன. இன்னும் பல… அன்று வாழ்ந்த மக்களிலேயே ஒவ்வொரு நாட்டிற்கும் நடக்கும் சண்டையில் தனக்குகந்த ஒரு நாட்டிலிருந்து ஒரு நாட்டிற்குக் கடத்திச் சென்ற பல பொக்கிஷங்களெல்லாம் மறைத்து வைத்த நிலையில் அந்நிலையில் அதை மறைத்து வைத்த மக்களின் ஆவிகளும் எவ்வரசனின் பொக்கிஷத்தை யார் யார் களவாடி எங்கெங்கு எடுத்துச் சென்றனரோ அந்நிலையில் அன்றாண்ட அரசர்கள் இறந்த பிறகு அவர்களின் ஆவி அவர்களின் பொருளைக் களவாடிச் சென்றதின் நிலையையறிந்து களவாடிச் சென்றவர்களின் வம்சத்தைச் சேர்ந்தவர்களும் அதை எடுத்திடாமல் அவ்வாவிகள் அதைப் பூதமாகக் காக்கின்றன.
அரசனின் வம்சத்தார் எடுக்கவும் முடிந்திடாமல் களவாடிச் சென்றவனின் ஆவி அந்நிலையில் இருந்தே காக்கின்றது. இப்பூமியில் பல நிலைகொண்ட பொன் பொருள் ஆபரணங்கள் விக்ரகங்கள் இன்றும் பூமியில் “பூதங்கள் காக்கும் நிலையில் தான் உள்ளன…”
சில இடங்களிலிருந்து புதையல் எடுப்பதின் நிலை அந்நிலையில் காத்து வந்த ஆவிகளின் சக்தியிழந்து அது மனச்சலிப்புப்பட்டு விரக்தி நிலையில் மறு ஜென்மம் எடுத்த பிறகுதான் இப்பொழுது சில புதையல்கள் கிடைப்பதுவும்.
அதுவும் அதன் தொடர்புடைய வம்ச வழிக்கு வம்ச வழி என்பது அச்சொத்தை அடைய வேண்டுமென்ற உரிமை பெற்றவருக்குத்தான் அதை அடையும் தன்மையும் வருகிறது.
அன்று ஆண்ட அரசர்களில் பலரின் நிலையும் இன்னும் இதே நிலையில் தான் உள்ளது. சகல சம்பத்துடன் சக்கரவர்த்தியாய் வாழ்ந்தேன் என்பவனின் நிலையும் இன்றும் பூதத்தின் நிலையில்தான் உள்ளது.
1.பல நாடுகளைப் பிடித்தான்
2.பல பொக்கிஷங்களைச் சேர்த்தான்
3.ஆனாலும் தன் உயிராத்மாவிற்கு என்ன சேமித்தான்…?
பேராசையை “வீர முரசு” என்று முழங்கிட்டே வாழ்ந்திட சக்கரவர்த்திகளின் நிலையெல்லாம் என்னப்பா…? வீழ்ச்சி பெற்று வந்திட முடியாது.
கலியில் இவ் உலகப் பிரளயம் மாறி புத்துயிர் பெற்று இவ்வாவிகளெல்லாம் ஆரம்ப நிலை கொண்டு அடுத்த பிறவியின் சுற்றலில் ஆத்மாவிற்கு ஆத்மீக வழியை எடுத்து வாழும் நாள் வரை பூதமாகவும் பேயாகவும் அலையும் ஆவிகளுக்கு முடிவே இல்லாமல் உள்ளது.
இப்பொழுது வாழ்ந்திடும் மக்களெல்லாம் இவ்வாவிகளின் பிடியில் சிக்கியுள்ளோம். இப்பிடியிலிருந்து மீள்வதற்கே இதை உணர்த்துகின்றேன்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.