புகழுக்கும் பேராசைக்கும் அடிமைப்பட்டுத் தான் இன்றைய உலகம் உள்ளது – ஈஸ்வரபட்டர்

புகழுக்கும் பேராசைக்கும் அடிமைப்பட்டுத் தான் இன்றைய உலகம் உள்ளது – ஈஸ்வரபட்டர்

 

அன்றாண்ட அரசர்கள் தன் பெயர் நிலைக்கத் தன் புகழ் ஓங்க… கோயில்கள் மூலமாகத் தன் பெயரை நிலைநாட்டினார்கள்.

கோயில்களைச் ஸ்தாபிதம் செய்து அந்நிலையில் பல கல்வெட்டுகளில் தன் பெயர் நிலைக்கத் தன் புகழின் ஆசைக்காக தன்னால் எழுப்பிய கோயிலிலேயே தன் பெயரையும் கல்வெட்டில் செதுக்கி வைத்து அவர்கள் பெயர் என்றுமே அழியாமல் இருக்க வேண்டுமென்றே புகழ் ஆசையினால் பல கோயில்களைக் கட்டினார்கள்.

புகழின் ஆசையில் வந்ததுதான் இன்று நாம் சென்று வணங்கும் பல கோயில்களின் நிலை. அக்கோயிலை ஸ்தாபிதம் செய்த அவ்வரசர்களின் ஆவிகளும் அந்நிலையிலேயே தான் சுற்றிக்கொண்டுள்ளன.

1.இன்று நாம் வாழ்ந்திடும் இந்நாட்டில்… ஆண்டவனின் பெயரையே
2.தன் புகழுக்காகத்தான் அன்றாண்ட அரசன் முதல் இன்று வாழ்ந்திடுபவர் வரை எண்ணி வணங்குகின்றோம்.

ஆண்டவன் என்பது எந்நிலையில் உள்ளது பார்த்தாயா…?

அன்று இருந்தவர்களின் குண நிலையைப் பொறுத்துத்தான் இன்று வாழும் மக்களின் நிலையும் உள்ளது. வழி வழியாய் வந்த மக்களின் “சுவாச நிலை” மாறுபடவே இல்லை.

மனித உடலை விட்டு ஆவி உலகுக்குச் சென்றாலும் தன் எண்ணத்தைச் செயல்படுத்திட அவ்வாவிகளுக்கு ஆசையும் அடங்கவில்லை.

அவ்வெண்ணத்தின் தொடர்ச்சியில் வரும் எண்ணம்தான் இப்பொழுது உள்ளவர்களின் நிலையும்.
1.புகழ் ஆசையினால் வந்த வினைதான் இன்று இவ் உலகம் உள்ள நிலையும்
2.புகழுக்காக ஏங்கிடும் எண்ணம்தான் எல்லோருக்குமே இன்று உள்ளது.

இன்றிருப்பவரின் மன நிலை அவர்கள் செய்த நிலை மட்டுமல்ல தொடர்ந்து கொண்டே வரும் “பல ஆவிகளின் தொடர்தான்…”

“புகழ்…” என்னும் பேராசைக்கு அடிமைப்பட்டதினால் இன்றுள்ள எல்லோரின் மனமும் புகழ் ஒன்றுக்கே எண்ணி ஏங்கும் நிலையில் உள்ளது.

காலத்தையே விஷமாக்கியவர்கள் அன்றாண்ட அரசர்கள்தான். மனிதர்களின் மனதையெல்லாம் பேராசைக்கு உட்படுத்தியவர்களும் அவ்வரசர்கள்தான். அவ்வெண்ண நிலை இன்றும் இங்கு மாறவில்லை.

பல கோயில்களில் ஆண்டவனின் விக்ரகங்கள் களவாடும் நிலை எப்படி வந்தது…? கயவனை அவ்வாண்டவன் பிடித்துத் தரக்கூடாதா…? அவனுக்கு நல்வழி புகட்டக் கூடாதா…? என்றெல்லாம் ஆண்டவனை நாம் பல வினாக்களைக் கேட்கின்றோம்.

கல்லான விக்ரகம்தான் ஆண்டவன் என்பது. எடுத்துச் செல்பவன்… தான் அவனின் எண்ணத்தின் பேராசையினால் களவாடிச் செல்கின்றான். கல் என்ன செய்யும்…?

ஆனால் சில கோயில்களில் களவாடிச் செல்லும் விக்ரகங்கள் எடுத்துச் செல்பவன் உதிரம் கொட்டி இறப்பது எந்நிலையில்…?

அக்கோயிலை ஸ்தாபிதம் செய்த ஆவி வந்து அவனை அடித்துக் கொன்று விடுகிறது. ஆவியின் நிலையும் தொடர்பில்லாத சில கோயில்களில்தான் அவ்விக்கிரகங்கள் களவு போகும் நிலையில் உள்ளன.

ஆவி நிலையில் உள்ள எந்தக் கோயிலின் விக்ரகமும் களவாடிச் செல்பவனின் நிலையைப் பார்த்து அவனை விட்டு வைத்திடாது. பல கோயில்களின் நிலையும் இந்நிலையில்தான் இன்றுள்ளது.

ஆண்டவன் என்னும் ஆண்டவனையே இந்நிலைக்கு வந்ததின் நிலையெல்லாம் அரசர்களினால் வந்த வினைதான்…!

தெய்வ பக்தியும் நல்லொழுக்கமும் நற்போதனையும் மக்களின் எண்ணத்தில் பதியச் செய்து ஆத்மீக வழியில் அன்புடன் வாழ்வதற்கு வழியமைத்துச் சென்றிடாமல் இக்கலியின் காலத்தையே விஷமாக்கி இவ்விஷத்தின் தொடர்புடனே வாழ்கின்றான் ஒவ்வொரு மனிதனும்.

இந்நிலையில் ஜாதி மதம் என்ற வேலி வேறு. இதைப் படித்திடும் ஒவ்வொருவரும்
1.தன் எண்ணத்தைத் தூய்மைப்படுத்துங்கள்
2.சத்தியத்தை உம்முள் ஐக்கியப்படுத்துங்கள்
3.அன்பையே ஆண்டவனுக்கி வணங்கிடுங்கள்.

தெய்வத்தைக் கண்ட பேரானந்தப் பொக்கிஷத்தை நம் ஆத்மா என்ற ஆண்டவனுக்கு அர்ப்பணித்தே வாழ்ந்திடலாம். ஒவ்வொருவரும் இன்று சூழ்ந்துள்ள விஷத் தன்மையில் இருந்து மீண்டு தன்னைத் தானே உணர்ந்து வாழ்வதற்கே இப்பாட நிலையும் ஜெப நிலையும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply