தியானம் செய்யக்கூடிய அனைவருமே முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது

தியானம் செய்யக்கூடிய அனைவருமே முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது

 

1.சில நேரங்களில் கஷ்டங்களோ உடல் உபாதைகளோ வந்தால்
2.நாம் சரியான முறையில் தியானம் எடுத்து வந்தால்
3.அந்தக் கஷ்டத்தை மாற்றுவதற்குண்டான ஞானமும்… அதை எப்படி வழி நடத்த வேண்டும் என்ற உபாயமும்… வரும்.

சங்கடங்கள் வரப்படும் பொழுது ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

பின்… துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அப்போது சலனம் சஞ்சலம் சங்கடம் இதையெல்லாம் நீக்கிவிட்டு
1.எது உண்மையோ அதை உணர்ந்து
2.அதற்குத் தக்க நம்முடைய எண்ணங்களைச் சீராக்குவதும்… நல்ல செயல்களைச் செயல்படுத்தவும் முடியும்.

உடல் உபாதை உற்றவரைப் பார்க்கும் பொழுது முதலிலே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும். அது சிறு குழந்தையாக இருந்தாலும்… தன்னால் வெளியிலே சொல்ல முடியவில்லை என்றாலும்
1.எலக்ட்ரிக் எலகட்ரானிக் என்ற உணர்வின் தன்மை கொண்டு
2.நாம் பாய்ச்சும் மகரிஷிகளின் அருள் சக்தி அந்தக் குழந்தை உடலில் ஊடுருவி அங்கே இயக்கச் சக்தியாக மாற்றும்.

“முடியவில்லை…” என்பவர்களுக்கு இருதயத் துடிப்பு நின்றாலும் கூட இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்துவிட்டு அந்த இருதயத்திற்கு மேல்… “கை வைத்தோம்…” என்றால் அந்தத் துடிப்பு மீண்டும் வருவதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் மிகவும் பழுதாகி விட்டால் ஒன்றும் செய்ய முடியாது. திடீரென்று எதிர்பாராதபடி சில நிலைகள் வந்திருந்தால் அதை மீண்டும் இயக்க வைக்க முடியும்.

இருதயத்திலிருந்து வரக்கூடிய நிலைகளால் அங்கே துடிப்பிலே ஏதாவது சிறிது பிசகானால் இருதயத்திற்கு மேல் கையை வைத்தவுடனே இயங்கிவிடும்.

ஆனால் இருதயத்தை இயக்கக்கூடிய சிறுமூளையில் உள்ள நுண்ணிய நரம்புகளில் பழுதாகி அதனால் இருதயம் சரியாக இயங்கவில்லை என்றால் அது ஒன்றும் செய்ய முடியாது.

ஆகவே
1.இதைப் போல ஒவ்வொரு சந்தர்ப்பமும்… ஒவ்வொரு நோய்க்கும்… ஒவ்வொரு விதமாக இருக்கும்.
2.இருந்தாலும் நாம் எடுக்க வேண்டியது அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளைத் தான்.

அதைப் பெற வேண்டுமென்று வலுவான நிலையில் எண்ணி நமது பார்வையைச் செலுத்தி அதே உணர்வுடன் நம் கையைக் குழந்தையின் உடலில் வைத்தால் அதை எழுப்ப முடியும்.

ஆக… சிறு குழந்தையால் எண்ண முடியாது… அதனால் சொல்ல முடியாது… சொன்னால் கேட்க முடியாது…! என்று இருந்தாலும் கூட உடலில் கையை வைத்தோம் என்றால் அங்கே வேலை செய்யும்.

உதாரணமாக… நாம் வேலை செய்யும் இடத்தில் ஆபீஸர் நம் மீது கோபப்பட்டு… நமமைக் குறை சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
1.அந்தக் குறை நமக்குள் வராதபடி ஆத்மசுத்தி செய்து விட்டு
2.அவர் சிந்தித்துச் செயல்படும் ஆற்றலும் நம் மீது அவருக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்றும் எண்ணினால்
3.இந்த உணர்வு அங்கே ஊடுருவும்.

ஆனால் நாம் தவறு செய்துவிட்டு ஆபீஸர் நமக்குச் சாதகமாக வரவேண்டும் என்று சொன்னால் அது நடக்காத காரியம்.

நமக்குள் தப்பு இல்லாத நிலையைப் பார்த்துக் கொள்ள வேண்டும். தவறு செய்துவிட்டு தவறுக்குச் சரியான மார்க் கொடுக்க வேண்டும் என்று சொன்னால் அது தவறான நிலைகள்.

ஆகவே உண்மை என்று தெரிந்தால் ஆத்ம சுத்தி செய்து விட்டு
1.அவர் என் பால் நல்ல உணர்வை உணர்ந்து
2.அந்த உண்மையின் இயக்கத்திற்கொப்ப எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணினால் நிச்சயம் அது நல்லதாகும்.

இதை எல்லாம் ஒரு பழக்கமாக எடுத்துக் கொண்டால் நம்முடைய மன உறுதியும் நாம் எடுக்கும் அருள் உணர்வும் தீமையிலிருந்து விடுபடக் கூடிய சக்தியாக நமக்குள் வருகின்றது…!

ஒவ்வொருவருக்கும் இது போன்ற சந்தர்ப்பங்கள் உண்டு. இந்தத் தியானத்தை எடுத்துக் கொண்டவர்கள் மன உறுதி கொண்டு செயல்படுத்தினால் மாற்றி அமைக்க முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply